.

Pages

Saturday, August 1, 2020

மரண அறிவிப்பு ~ சுல்தான் பீவி (வயது 70)

அதிரை நியூஸ்: ஆக.01
அதிராம்பட்டினம், சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் இமாம் சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் சகோதரியும், மர்ஹும் சைக்கிள் கடை ஏ. அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், ஏ. முகமது ராவூத்தர், ஏ. முகமது புஹாரி ஆகியோரின் தயாருமாகிய சுல்தான் பீவி (வயது 70) அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2020) இரவு 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (ஆக. 2) முழு ஊரடங்கு: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஆக.01
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (02.08.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், தவிர்க்கமுடியாத காரணங்களைத் தவிர வெளியே வரக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (02.08.2020) முழு ஊரடங்காக கடைப்பிடிக்கப்படும் எனவும், தவிர்க்கமுடியாத காரணங்களைத் தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. குடிநீர், பால் மற்றும் மருத்துவத் தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் வழிபாடுகளுக்கு வெளியில் செல்வதை தவிர்த்து, தங்களின் வீடுகளிலேயே வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

தியாகத்தில் விளைந்த கோமான்!

தியாகத்தின் நிலைகள் பாரும்
   தீஞ்சுடரைத் தேகம் வென்றும் !
அயராது கனவு வந்தும்
   அழைத்தவுடன் தன்னைத் தந்தும் !
துயரங்கள் தொடர்ந்து வந்தும்
   தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
   ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய்

சிகரத்தில் மனிதம் வாழ
   செயலாற்றி வாழ்ந்த கோமான்
பகரங்கள் ஏதும் உண்டோ
   பண்பாளர் நபிக ளார்க்கு !
அகரமுதல் ஆதி தொட்டு
   அக்குடும்பம் பட்டத் தொல்லை !
நிகராகா ஹுசைனார் துன்பம்
   நீண்டதங்கே சிரசைக் கொய்தும் !

இறைக்காக அர்ப னிப்பு
   இவ்விதமாய் இருக்க காப்பு !
மறைவேதம் காட்டும் மாண்பு
   மனிதாநீ மனிதன் ஆக !
திரைகொண்டு வடிக்கும் பாதை
   தியாகப்பெ ருநாளாய்ப் பாடம் !
முறையாக உன்னில் காணு
   முன்னேற அதனுள் பேணு !

அருவவனின் தூதாய் வந்த
  அண்ணலார் தியாக வாழ்வை
அருள்நிறைவாய் அடையக் காணு !
   அனைவரையும் தானாய்க் காண !
திருநாளில் வணக்கம் தந்தார்
    திருவவனில் மூழ்கச் சொன்னார்
பெருமானார் வாழ்வே இன்பம் !
   பேரின்பங் காண வேண்டும் !

 
விளக்கம்: (சில வற்றிற்கு)
தீஞ்சுடரைத் தேகம் வென்றும் -:  அன்று இப்றாஹீம் நபி (அலை) அன்னவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டபோது அத்தீசுவாலைத் தீண்டாது இதமாகவே அன்னவர்களை காத்தது. எந்த பாதிப்புமின்றி அதிலிருந்து வெளிவந்தனர்.

அயராது கனவு வந்தும் -: நபி இப்றாஹீம் (அலை) அன்னவர்களுக்கு மீண்டும் மீண்டும் தம் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்களை குர்பானி கொடுப்பதுபோல் கனவு வந்தது.

அழைத்தவுடன் தன்னைத் தந்தும் -: தந்தையார் நபி இப்றாஹீம் (அலை) தம் கனவுகளை கூறி இறைகட்டளையை நிறைவேற்ற அழைத்தபோது தயங்காது 'இறைவன் இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்', தந்தையே என்று நபி இஸ்மாயில் (அலை) அன்னவர்கள் தன்னை அறுத்து இறைவனுக்காக அர்பனிக்க முன்வந்தார்கள்.

துயரங்கள் தொடர்ந்து வந்தும்
   தொல்லைக்கு பகரம் கண்டும்
உயர்ந்தவகை ஒட்ட கங்கள்
   ஒவ்வொன்றாய் குர்பான் ஈடாய் -: இவ்வாறு தொடர் துயர்சோதனைகள் பல தொடர்ந்து அந்நபி வழி குடும்பத்தில் பெருமானார் (ஸல்) அன்னவர்கள் தந்தை அப்துல்லாஹ் அன்னவர்களை பலியிடப்படவேண்டும் என்றொரு நிகழ்வு ஏற்பட அதற்கு பகரமாக 100 ஓட்டகைகளை அறுத்து பலியிட்டு காக்கப்பட்டார்கள்.

நிகராக ஹுசைனார் துன்பம்
   நீண்டதங்கே சிரசைக் கொய்தும் -: அன்னலார் பெருமானார் அன்னவர்கள் வழிப் பேரர் இமாம் ஹுசைனார் (ரலி) அவர்களின் சிரசை கர்பலா யுத்தத்தில் கொய்தனர் மாபாதகர்கள்.

அருவவனின் தூதாய் வந்த -: உருவமற்றவன் இறைவன். அவனின் தூதவராக வந்தவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.


ஷேக் அப்துல்லாஹ் அ.
அதிராம்பட்டினம்.



கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம்!

அதிரை நியூஸ்: ஆக. 01
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதன்மை செயலர்/ வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணிந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் முன்னிலை வகித்தார்
   
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளான கட்டுப்பாட்டு பகுதிகளில்  பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்குவது, தன்னார்வலர்களை தடுப்பு பணிகளில் ஈடுப்படுத்துவது, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு சின்க் மாத்திரைகள், ஆர்சினிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்குவது, முகக்கவசம் வழங்குவது உள்ளிட்டவைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் கரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் படுக்கை வசதிகள், அவசர ஊர்திகள் உள்ளிட்டவைகளின் கையிருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து அத்தியாவசியப் பணிகளுக்காக முறையாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இ-பாஸ் பெறாமல் வருகை தந்துள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார்.

மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை கூடுதலாக நடத்தவும், பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவைகள்  குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திட  வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தினார்.
     
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) திரு.பாலச்சந்திரன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மரண அறிவிப்பு ~ அ.மு அகமது அனஸ் (வயது 61)

அதிரை நியூஸ்: ஆக.01
அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு. முகமது காசிம், மர்ஹூம் செ.நெ நெய்னா முகமது சாஹிப் ஆகியோரின் பேரனும், மர்ஹூம் அ.மு அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு அப்துல் கரீம், மர்ஹூம் அ.மு அப்துல் அஜீஸ் ஆகியோரின் தம்பி மகனும், அ.மு அப்துல் சமது அவர்களின் காக்கா மகனும், மர்ஹூம் செ.நெ முகமது சுல்தான், செ.நெ அப்துல் ஜப்பார் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் எஸ்.என்.எஸ் நெய்னா முகமது, எஸ்.என்.எஸ் அன்வர்கான், எஸ்.என்.எஸ் அகமது தம்பி ஆகியோரின் மச்சானும்,  எஸ்.என்.ஏ சேக் சுல்தான், எம்.நவாஸ், எச். ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் மாமனாரும்,  அ.மு ஜபருல்லா, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகளையுமாகிய அ.மு அகமது அனஸ் (வயது 61) அவர்கள் இன்று காலை புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எல்.ஏ முகம்மது இஸ்மாயில் (வயது 87)

அதிரை நியூஸ்: ஆக.01
அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது லெப்பை தம்பி அவர்களின் மகனும், கோவளம் மர்ஹூம் எம்.எல்.ஏ அப்துல் ராஜக், எம்.எல்.ஏ ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் உமர் லெப்பை ஆலிம், மர்ஹூம் முகமது உஸ்மான், மர்ஹூம் முகமது அலியார்  ஆகியோரின் மருமகனும், முகமது அனஸ், சரபுதீன், சிராஜூதீன், பசீர் அகமது, அன்வர் அலி ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எல்.ஏ முகமது இஸ்மாயில் (வயது 87) அவர்கள் இன்று காலை தரகர்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2020) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 01
இசுலாமியர்களின் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று சனிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடை. இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும், தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து பெறுகின்ற அன்பளிப்பு காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...