தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏ.ஜே ஜூம்மா மஸ்ஜித் அல் ஹிதாயா இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, அதிரை மகாதிப் இணைந்து நடத்திய, திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி அதிராம்பட்டினம் ஏ.ஜே ஜூம்மா மஸ்ஜித் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குர்ஆன் முழுவதும் மனனம் செய்தல் போட்டியில் அதிராம்பட்டினம் ரஹ்மானியா பள்ளி, புதுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சிக்கு, ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் நிர்வாகி அ.மு.க அமீன் ஹாஜியார் தலைமை வகித்தார். அதிரை மகாதிப் மதரஸா ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம், குர்ஆன் முழுவதும் மனனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏஜே ஜும்மா மஸ்ஜித், புதுப்பள்ளி, செக்கடி பள்ளி, முகைதீன் ஜூம்மா பள்ளி, அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளி, சித்திக் பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, கலீபா உமர் (ரலி) பள்ளி, ரஹ்மானியா பள்ளி, மக்தூம் பள்ளி உட்பட 20 பள்ளிகளை சேர்ந்த மக்தப் மதரஸா மாணவர்கள் 187 பேர் கலந்துகொண்டனர்.
இதில், அதிராம்பட்டினம் சலாஹ்ஹியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி இப்ராஹீம், இஜாபா பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி, மவ்லவி பரக்கத்துல்லா, மவ்லவி ஜபருல்லா, மவ்லவி நூர் முஹம்மது மற்றும் மக்தப் மதரஸா ஆசிரியர்கள் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.
போட்டி முடிவில், குர்ஆன் முழுமையாக மனனம் செய்தல் போட்டியில் அப்துல் சுக்கூர் ( த/பெ. யாக்கூப் உசேன் ) ரஹ்மானியா பள்ளி மாணவர் முதல் இடமும், புதுப்பள்ளி மாணவர் ஜெய்து இரண்டாம் இடமும், அப்துல் ஹமீது ( த/பெ. அகமது சரீப் ) ரஹ்மானியா பள்ளி மாணவர் மூன்றாம் இடமும் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ. 5,500 ரூ. 4,500 ரூ. 3,500 ஆகிய ரொக்கம் மதிப்புள்ள ஷோபா பர்னிச்சர் செட் வழங்கப்பட்டது.
1 ஜூஸ்வு முதல் 15 ஜூஸ்வு வரை குர்ஆன் மனனம் செய்தல் போட்டி முடிவில், முஹம்மது ( த/பெ. மவ்லவி முஹம்மது யூசுப் ) ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் மாணவர் முதல் இடமும், அகமது ( த/பெ. மவ்லவி முஹம்மது யூசுப் ) ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் மாணவர் இரண்டாம் இடமும், ஜாஸின் ( த/பெ. ஜமால் முகமது ) சித்திக் பள்ளி மாணவர் மூன்றாம் இடமும் பிடித்தனர். இவர்களுக்கு முறையே ரூ. 3,500 ரூ. 2,500 ரூ. 1,500 ஆகிய ரொக்கம் மதிப்புள்ள நாற்காலி பர்னிச்சர் செட் வழங்கப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினராக சென்னை சூளைமேடு மதரசத்தூன் நூர் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி முஹம்மது கோயா அலி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
முன்னதாக, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் அரபிக் கல்லூரி துணை முதல்வர் மவ்லவி சக்கில் அகமது ரஷாதி முப்தி கலந்துகொண்டு 'குர்ஆன் ஓர் அற்புதம்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மேலும், குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடக்கத்தில், ஏ.ஜே ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம் நஜ்முதீன் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார். விழா முடிவில் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மக்தப் மதரஸா மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி: அபூ அஜீம்















