.

Pages

Thursday, January 24, 2013

அதிரை நூலகம் – ஓர் பார்வை !!!




நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை புத்தகமே. இவற்றைக்கொண்டு நம் அறிவித்திறன்களை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக விசயங்கள் பலவற்றை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நமது அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழும் நூலகம் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. 

வாசகர்களின் எண்ணிக்கை :
அதிரையில்  கடந்த 15-06-1955 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நூலத்தில் கவிதை, நாவல், நாடகம், பொது அறிவு, இயற்கையியல், கணிதவியல், இயற்பியல், பொறியியல், வேதியியல், தொழில்நுட்பவியல், உயிரியல், புவியியல், தாவரவியல், வேளாண்மை, விலங்கியல், மருத்துவயியல், பயன்படு கலைகள், கவின் கலைகள், இலக்கியம், மொழியியல், சமயம், தத்துவயியல், உளவியல், கல்வி, நிலவியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், சட்டவியல் போன்ற தலைப்புகள் அடங்கிய 31517 புத்தகங்கள் இருந்தும் 8 புரவலர்களையும், 3227  உறுப்பினர்களையும் மட்டுமே பெற்றிருப்பது வேதனை தருவதாக இருகின்றது.
இவைகள் நமது மக்களிடயே வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதையே காட்டுகின்றன. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஊரில் தினமும் சுமார் 90 - 100  வாசகர்கள் மாத்திரம் நூலகத்திற்கு வந்து செல்வது அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது. ஒரு வேலை நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் மத்திய பகுதியில் இல்லாமல் ஊரின் கடைகோடியில் இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ !?`

நூலகத்தின் கட்டிடம் :
நமதூர் கரையூர் தெரு பஞ்சாயத்தார் சார்பாக வழங்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில் கடந்து [ 30-09-1980 ] அன்று கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று கடந்த  [ 16-01-1993 ] அன்று முதல் இந்நூலகம் செயல்பட துவங்கியது.

கட்டிடம் இன்றைய நிலையில் பராமரிப்புகளின்றி சுவற்றில் காணப்படும் வெடிப்புகளாலும், உப்புக்கற்றால் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு கீழே இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. நீண்ட காலமாக நூலக கட்டிடத்திற்கு பெயின்ட் அடிக்காமல் விட்டதனால் மங்கிப் போய் காட்சியளிக்கின்றன.

நூலகத்தின் வசதிகள் :
நூலாக வாசகர்களுக்கு அமர்ந்து படிப்பதற்கு நாற்காலிகள், மேஜைகள், போதிய வெளிச்சத்துடன் கூடிய மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளற்று மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன.

அறிவிப்பு பலகை :
நூலகம் குறித்த வாசகர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரும் ‘அறிவிப்புப் பலகை’யை அனைவரின் பார்வையில் படுமாறு நூலகத்தில் இடம்பெறுவது அவசியம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. நூலகக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதன் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தலாம்.

2. வாசிக்கும் திறனை அதிகரிக்கச் செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
3. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் கடைகோடியில் அமைந்து இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஊரின் மத்தியில் கிளை நூலகம் ஒன்றை ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லலாம்.

4. நூலகத்தில் புத்தகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம்.

5. புரவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு நூலகத்திற்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

6. நமதூரைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து நிதி உதவிப் பெற்று நூலகத்திற்கு தேவையான பெயின்ட் அடித்தல், குடிநீர் வசதி மற்றும் இன்னபிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக Go.ms.no.1408/EDN (k) Dated 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற தகவல்கள் இன்று வலைதளங்களின் உதவியால் விரைந்து கிடைக்கின்றன. உலகின் எந்த நூலகத்தில் உள்ள நூல்களையும் "மவுஸி'ன் மூலம் "கிளிக்' செய்தால் இருக்கும் இடத்தில் இருந்தே படிக்க முடிகிறது. இன்டர்நெட் மூலமாக மின் புத்தக நிலையங்களில் புத்தகங்களை நமக்கு நாமே வாங்கும் சூழல் இருந்தாலும் கனிந்த சேவை, காயம் ஏற்படுத்தாத சொற்கள், நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தளத்தை பெரும்பான்மையாக நூலகம் நோக்கி அழைக்க முடியும் என்பதை மனதில் இருத்தி பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலக்கட்டங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் ‎பழக்கத்தை அதிகரிக்கச்செய்து, நூலகங்களின் பயன்கள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ‎ஏற்படுத்துவது அவசியமானதொன்றாகிறது.

இதற்காக நாம் நூலகம் தரும் பயன் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம் - வாசிப்பை நேசிப்போம். நமது நூலகத்தை நாமே தரத்திலும் சேவையிலும் உயரச்செய்வோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

அதிரை காதீர் முகைதீன் கல்லூரியின் ஆடிட்டோரியம் புனரமைப்பு !


அதிரை காதீர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக அதன் ஆடிட்டோரியம் அனைத்து வசதிகளுடன் நவீன படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் புனரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி வரலாற்றில் பாரம்பரியமிக்க இந்த ஆடிட்டோரியம் எண்ணற்ற கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் !


 அதிரையில் கடந்த [ 15-01-2013 ] அன்று காலை 10 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகளோடு அதிரை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அன்று மாலை 4.30 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கொள்கை பொதுக்கூட்டம் தக்வா பள்ளி அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை கிளையின் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

திமுக நகர செயலாளர் மகளின் திருமணத்தில் அதிரையர்கள் பங்கேற்பு !

கடந்த [ 17-01-2013 ] அன்று மன்னார்குடியில் நடைபெற்ற திமுக நகர செயலாளர் குணசேகரன் மகளின் திருமண நிகழ்ச்சிக்கு அதிரையர்கள் பலர் பெரும்திரளாக கலந்துகொண்டனர். காலை உணவு ஏற்பாட்டோடு அனைவரையும் செக்கடி மேடுலிருந்து மூன்று தனியார் ஆம்னி பஸ்கள் மூலம் அழைத்துச்சென்றனர்.
திமுக கழகம் அதிரை கிளையின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையில் இருதரப்பினரிடையே எற்பட்ட கோஷ்டி மோதல் !


முன்விரோதம் காரணமாக கடந்த [ 14-01-2013 ] அன்று இரண்டு தரப்பினருக்கும் இடையே தரகர் தெருவில் மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் மற்றொரு தரப்பை சேர்ந்த வீட்டு மாடியில் போடப்பட்டிருந்த கொட்டகைக்கு தீவைத்தனர்.
இதில் வீடும் சூறையாடப்பட்டன
பட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தகவலறிந்த ஆர்டிஓ ரஹ்மதுல்லாகான், டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் செங்கமலக்கண்ணன், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து அதிரை போலீசார் இரு தரப்பினரின் சார்பாகக் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் பெண்கள் உள்பட இரு தரப்பைச் சார்ந்த 82 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் தஞ்சை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிரையில் வீட்டு மனைகள் கண்காட்சி !


அதிரை சுரைக்காகொல்லையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹாஜி முஹம்மது அலி ஆலிம் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி நடைபெற்றது.
V3 புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 20 அடி தார்சாலை, தொழுகைக்கான பள்ளி ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் ஏரளாமான அதிரையர்கள் கலந்துகொண்டு மனைகளை முன்பதிவு செய்துவருகின்றனர்.

அதிரை லியோ கிளப்பின் அசர வைக்கும் சேவைகள் !


அதிரையில் தன்னார்வா தொண்டு நிறுவனங்களில் ஒன்று லியோ கிளப். இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக கடந்த [ 19-01-2013  ] அன்று மாலை 3 மணியளவில் லாவண்யா திருமண மண்டபத்தில் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்பாக நமதூரில் அடிக்கடி நிகழும் வாகன விபத்தை தடுக்கும் நோக்கில் லியோ கிளப் சார்பாக சேது பெருவழிச்சாலையில் உள்ள அபாயகரமான சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை திறந்து வைக்கப்பட்டது.

அவிசோ சார்பாக நமதூரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மனநலம் குன்றியோருக்கான காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் மற்றும் நிதிஉதவி ஆகியன வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிரலாக வரவேற்புரை பேராசிரியர் K. சையது அகமது கபீர் அவர்களாலும், தலைமையுரை லியோ மண்டல தலைவர் நியாஸ் அகமது அவர்களாலும் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பல்வேரு விருதுகள் வழங்கப்பட்டாலும் சேவைச்செம்மல் விருது காவல்துறை ஆய்வாளார் V. செங்கமலக்கண்ணன் அவர்களுக்கும், குருதிக்குடை விருது A. சாகுல் ஹமீது மற்றும் N. சிகபத்துல்லா ஆகியோருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ வைத்தது.

இந்த நிகழ்ச்சியில் லியோ மற்றும் லயன் கிளப் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் நன்றியுரையை லியோ கிளப் தலைவர் ஹாஜா முகைதீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டு இனிதே நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றது.

அதிரையில் பரபரப்பான விற்பனையில் கம்பங்கூழ் ! கேப்பைக்கூழ் !!


கம்பங்கூழ், கேப்பைக்கூழ் விற்பனை செய்து வருபவர் சகோ. முஹம்மது யூசுப். ஏழ்மை முதியவரான இவர் இராமநாதபுர மாவட்டம் S. தரக்குடி என்ற ஊரைச்சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக தக்வா பள்ளி அருகே தட்டுவண்டியில் வைத்து இவற்றை வியாபாரம் செய்து வருகின்றார்.

ஒரு சொம்பு முழுவதுமாக கம்பங்கூழ், கேப்பைக்கூழை நிரப்பி ரூபாய் 10/-க்கு விற்பனை செய்கிறார். உடல் நலத்திற்கு ஏற்ற இவற்றை ஏராளமான வாடிக்கையாளர்கள் தினமும் வாங்கி மகிழ்ச்சியுடன் பருகின்றனர்.