இன்று மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம். இந்திய மகளிர் அனைவருக்கும் மனமகிழ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் நெடிய வரலாற்றில் தடம் பதித்த பெண் ஆளுமைகளில் ஒருவரையாவது இன்றைய தினம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் எனக்கருதுகிறேன்.
மொகலாய ஆட்சியின் அந்திமக் காலத்தின் ஆட்சியின் போது பெரிதும் செல்வாக்கு செலுத்தியவரும், 'இளவரசியின் இளவரசி' எனப் புகழப்பட்டவரும், மன்னர் ஷாஜஹான் - மும்தாஜ் தம்பதியின் மூத்த புதல்வியுமான 'ஜஹானாரா பேகம்' பற்றிச் சிறிது நினைவு கூர்வோம்.
ஜஹானாரா பேகம் கி.பி 1614 ல் அஜ்மீரில் பிறந்தார். தலைநகர் ஆக்ராவில் வளர்ந்தார். பெரிசிய, துருக்கிய, இந்திய இலக்கியங்களில் ஈடுபாடு செலுத்தினார். சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கலை, கலாச்சாரங்களில் ஆர்வம் காட்டினார். எழுத்து, கவிதைகளில் தேர்ந்து விளங்கினார்.
மனைவி மும்தாஜ் இழப்புக்குப்பின் மனமுடைந்து செயலிழந்து இருந்த தந்தை ஷாஜஹானை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார் ஜஹானாரா பேகம். தம் புதல்வியின் ஆளுமையை நன்கு அறிந்திருந்த மன்னர் ஷாஜஹான் தமது ஆட்சியின் முதன்மைப் பெண்ணாக ஜஹானாரா பேகத்தை அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 17 தான். அப்போது 'இளவரசியின் இளவரசி' என அனைவராலும் புகழப்பட்டவர்.
ஆட்சியின் முதன்மைப் பெண் என்பதால் ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டார் ஜஹானாரா பேகம். அரசுப் பணிகளில் கவனம் செலுத்தினார். பழைய டெல்லியின் அடையாளமாக இன்றளவும் திகழும் சாந்தினி சவுக் கடைவீதி அவரால் வடிவமைக்கப்பட்டதே. அவர் வடிவமைத்த மசூதிகளும், தோட்டங்களும் காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. உலக அதியங்களில் ஒன்றாக மதிக்கப்படும் தாஜ்மஹாலின் வடிவமைப்பிலும் அவரது பங்கு இருக்கிறது. அவரது ஆலோசனையின் காரணமாகவே ஏழை, எளியோர், ஆதரவற்றோர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மன்னர் ஷாஜஹான் மேகொண்டார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஷாஜஹானுக்குப் பின் அரியணையேறிய அவுரங்கசீப்பால் வீட்டுச்சிறையிலடைக்கப்பட்ட தந்தைக்குப் பணிவிடை செய்வதிலும் கவனம் செலுத்தினார் ஜஹானாரா பேகம். அதே நேரத்தில் மாமன்னர் அவுரங்கசீப்பின் பாசத்தையும் பெறத்தவறவில்லை. ஷாஜஹானின் இறப்புக்குப்பின் தம் அரசவையின் முதன்மைப் பெண்ணாக ஜஹானாரா பேகத்தை மன்னர் அவுரங்கசீப் நியமித்தார். இரு பெரும் ஆட்சிகளில் முதன்மைப் பெண்ணாக் திகழ்ந்த பெருமைக்குரியவரானார் ஜஹானாரா பேகம்.
இந்திய வரலாற்றில் தடம் பதித்த பெண் ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய ஜஹானாரா பேகம் 1681 ல் தனது 67 வயதில் இறப்பெய்தினார்.
எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

பிறப்பின் போதும், வளர்ப்பின் போதும், அமர்வின் போதும், மணமுடிப்பின் போதும், தாய்மையின் போதும், முதுமையின் போதும் ஏன் விதவையின் போதும் தான் எல்லா நேரத்திலும் கடும் போராளியாக திகழ்பவள் பெண்.
ReplyDeleteபதார்த்தத்தை ருசிக்காமல் யதார்த்தமாக புன்னகையுடன் பொறுமையாக மனதார உணர்த்தி உணர்வுடன் உறுதியாக ஊட்டி உரமிட்டவள் இந்த அன்னை; பெண்களை போற்றுவோம் - நல்வாழ்த்துக்கள்