![]() |
| கோப்புப்படம் |
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு இருந்த இந்தியன் வங்கி நாளை (19-05-2020) செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அதிராம்பட்டினத்தில் மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
அதிராம்பட்டினம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால், சேர்மன் வாடி அருகில் இயங்கி வந்த இந்தியன் வங்கி கடந்த 16.4.2020 அன்று முதல் மூடப்பட்டு இருந்தன. இதனால், வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஏப்.19 ந் தேதிக்கு பிறகு, புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், 28 நாட்கள் காலக்கெடு நேற்று (மே.17) ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, கடந்த 16.4.2020 அன்று முதல் மூடப்பட்டு இருந்த, அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி நாளை (19-05-2020) செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, அப்பகுதியில் அடைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அதிராம்பட்டினம் பேரூராட்சிப் செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்களால் இன்று திங்கட்கிழமை காலை அகற்றப்பட்டன.













