.

Pages

Showing posts with label ஒரத்தநாடு செய்திகள். Show all posts
Showing posts with label ஒரத்தநாடு செய்திகள். Show all posts

Thursday, January 3, 2019

ஒரத்தநாட்டில் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம் ~ 400 பேர் கைது (படங்கள்)

ஒரத்தநாடு, ஜன.03
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு பள்ளிவாசல் விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா, மாநில பேச்சாளர் கோவை. செய்யது ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

கஜா புயலினால் சேதமடைந்த பள்ளிவாசல் புனரமைக்கும் பணியை தடுத்து, தொழுகை நடத்த இடையூறாக இருப்பவர்களை கைது செய்யக்கோரியும், ஒருதலைப்பட்சமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்ட முடிவில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மதுக்கூர் ஜபருல்லா நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுகவினர், ஜமாத்தார்கள் உள்ளிட்ட 400 பேரை போலீசார் கைது செய்து ஒரத்தநாடு தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, May 30, 2018

உருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)

ஒரத்தநாடு, மே 30
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 3 கல்வி மாவட்டங்கள் உள்ள நிலையில் இப்போது புதிதாக ஒரத்தநாடு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இப்போது தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 3 வட்டாரங்களும் (ஒன்றியங்கள்), பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 6 வட்டாரங்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 5 வட்டாரங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, திருவோணம் வட்டாரங்கள், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வட்டாரம் ஆகியவற்றை இணைத்து ஒரத்தநாடு கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைக்கப்படுகிறது.

இதற்கான அரசாணை திங்கள்கிழமை (மே 28) பிறப்பிக்கப்பட்டது.  எனவே, வருகிற கல்வியாண்டு தொடக்கமான ஜூன் 1-ம் தேதி முதல் ஒரத்தநாடு கல்வி மாவட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. தற்போது, தொடக்க, நடுநிலை அளவில் ஒரத்தநாடு வட்டாரத்தில் 130 பள்ளிகளும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 86 பள்ளிகளும், திருவோணம் வட்டாரத்தில் 79 பள்ளிகளும் என மொத்தம் 295 பள்ளிகள் உள்ளன. இதேபோல, மூன்று வட்டாரங்களிலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்த்தால் ஏறத்தாழ 400 பள்ளிகள் இருக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் பிறகு பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய வட்டாரங்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களும், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் ஆகிய வட்டாரங்களும் இடம்பெறும்.

அதேசமயம், மாவட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகமும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகமும் கலைக்கப்படுகிறது.
இதுவரை பள்ளிக் கல்வித் துறையில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து வந்தனர்.

இவையெல்லாம் அண்மையில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது. இவை அனைத்தும் முதன்மைக் கல்வி அலுவலரின் அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேபோல, மாவட்டக் கல்வி அளவில் அனைத்து வகைப் பள்ளிகளும் மாவட்டக் கல்வி அலுவலரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளையும் திறம்பட ஆய்வு செய்யவும், அரசின் நலத்திட்டங்களை அனைத்து மாணவ, மாணவிகளுக்குக் கொண்டு சேர்க்கவும், ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாக மாற்றம் காரணமாக மாநில அளவில் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, புதிதாக 52 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.