.

Pages

Showing posts with label தாமரங்கோட்டை செய்திகள். Show all posts
Showing posts with label தாமரங்கோட்டை செய்திகள். Show all posts

Saturday, August 18, 2018

அதிரை அருகே தண்ணீர் வராததைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.18
அதிராம்பட்டினம் அருகே உள்ள தாமரங்கோட்டை கடைமடை பாசனப் பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, சாலை மறியல் ஒப்பாரி போராட்டம் தாமரங்கோட்டை வாட்டாகுடி பாலம் அருகில் (பட்டுக்கோட்டை ~ முத்துப்பேட்டை சாலையில்) இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

போராட்டத்துக்கு, தஞ்சை மாவட்ட விவசாய சங்கத் துணை அமைப்பாளர் சி.முருகப்பன் தலைமை வகித்தார்.

போராட்டத்தில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், தாமரங்கோட்டை பகுதிக்கு தண்ணீர் திறந்து விட தேவையான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பட்டுக்கோட்டை தாசில்தார் சாந்தகுமார், கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற் பொறியாளர் அன்பரசன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை அடுத்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இதில், அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், தமாரங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ராஜேந்திரன், ஆர். அண்ணாமலை, சி. கல்யாண சுந்தரம், பி.ஆர் நாதன்,
ஏ.கோவிந்த்த  சாமி, கே. அய்யாவு, ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பெண்கள் உட்பட இப்பகுதி விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)

Thursday, November 30, 2017

பூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தாமரங்கோட்டையில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் 4 ம் ஆண்டு மாணவிகள் 10 பேர் ராஜராஜேஸ்வரி தலைமையில் குழுவாக இணைந்து ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி  இயக்குநர் எஸ்.ஈஸ்வர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இம்மாணவிகள் பயிற்சியின் ஒரு பகுதியாக தாமரங்கோட்டை கிழக்கு கிராமத்தில் விதை வேலுமணி என்ற விவசாயி தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, குரும்பை உதிர்வைத் தடுக்க தென்னை மரத்தின் பென்சில் தடிமனுள்ள வேரில் ஊட்டச்சத்து மருந்தை 1 மரத்துக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் ஆண்டுக்கு 2 முறை செலுத்த வேண்டும் எனவும், அம்மருந்தை பயன்படுத்துவது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.

அடுத்து, ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு திட்டத்தின் கீழ் வயல்களில் பானை பொறி மூலம் எலிகளை அழித்தல், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள், ரசாயன பூச்சிக் கொல்லிக்குப் பதிலாக சோலார் விளக்குப் பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி முறைகள் ஆகியன குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும், மானிய விலையில் சோலார் விளக்குப் பொறி கருவியை பெற விரும்புவோர் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன் பதிவு செய்யலாம் என தெரிவித்தனர்.