.

Pages

Showing posts with label AFFA. Show all posts
Showing posts with label AFFA. Show all posts

Friday, April 10, 2020

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஏப்.10
அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடையின்றி முழுமையாக கிடைக்கவும், அதிராம்பட்டினம் பகுதி தென்னை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர அனுமதிக்கக் கோரி, அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு இன்று (10-04-2020) வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுப்புறத்தில் உள்ள மாளியக்காடு, ராஜாமடம் ஈசிஆர், மழவேனிற்காடு, வள்ளிக்கொல்லைகாடு ஈசிஆர் ஆகிய 4 பிரதான சாலைகள் வழியாக வரும் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்வதால், அதிராம்பட்டினம் பகுதிக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைப்பதிலும், நோயாளிகள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளின் மருத்துவமனைகளுக்கு சென்று வருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் முழுமையாக கிடைக்கவும், அவசர மருத்துவத்திற்கு நோயாளிகள் வாகனங்களில் சென்றுவர அனுமதிக்கவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களின் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வைத்து அடைத்திருப்பதால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுப்படி செய்திருக்கும் தென்னை விவசாயப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளைத் தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பணிகளைத் தொடர அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 17, 2020

கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC ஜூனியர் அணிக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், பிப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பில், மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிராம்பட்டினத்தில் கடந்த பிப்.15ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், அதிராம்பட்டினம், கரம்பயம், பட்டுக்கோட்டை, கண்டனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இதில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி போட்டியில் உள்ளூர் அணிகள் அதிராம்பட்டினம் ஏ.எப்.எப்.ஏ ஜூனியர், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் ஆகிய இரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை பெற்று இருந்தனர். பின்னர், இரு அணிகளுக்கும் டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி 4-3 என்ற கணக்கில் கோல் அடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். முதல் பரிசாக ரூ.4004 ரொக்கம் மற்றும் கோப்பை பரிசளிக்கப்பட்டன. தொடர் போட்டியில் அதிராம்பட்டினம் ஏ.எப்.எப்.ஏ ஜூனியர் அணி இரண்டாமிடமும், கண்டனூர் அணி மூன்றாமிடமும், பட்டுக்கோட்டை அணி நான்காமிடமும் பிடித்தனர். இந்த அணிகளுக்கு முறையே ரூ.3003, ரூ.2002, ரூ.1001 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில், நடந்த பாராட்டு விழாவில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி வீரர்கள் ஜுபைர் (கேப்டன்), அபூபக்கர் (கோல் கீப்பர்), இம்ரான், அல்வாஸ், ராசித், ரியாஸ், ஜசிம், ஹாசிம், சுஹைல், காதர், உஜைர், அலி (கோல் கீப்பர்), அக்மல், அஸிம், பாஸித், ஹசன், அணி பயிற்றுநர் லியாகத் அலி, அணி மேலாளர் மஹ்சின் ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

Thursday, June 20, 2019

அதிராம்பட்டினத்தில் நாளை(ஜூன் 21) முதல் AFFA கால்பந்து தொடர் போட்டி: 22 அணிகள், தினசரி 2 ஆட்டங்கள்!

AFFA நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
அதிராம்பட்டினம், ஜூன் 20
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 16 வது ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த கால்பந்து அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி நாளை (ஜூன் 21) வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4.45 மணியளவில், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.

தினசரி 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் ஆட்டங்களில், சென்னை, கேரளா, பாண்டிச்சேரி, காயல்பட்டினம், தூத்தூர், திருச்சி, கோவை, மதுரை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட தலைசிறந்த மொத்தம் 22 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.

நாளை (ஜூன் 21) வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல்நாள் ஆட்டத்தை  அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். முதல் ஆட்டத்தில், மார்க்ஸ் மன்னார்குடி, மதுரை போலீஸ் ஆகிய அணிகளும், இரண்டாம் ஆட்டத்தில், கலைவானர்ஸ் எப்.சி கண்டனூர், ஸ்போர்ட்ஸ் ஃபனடிக்ஸ் தேனி ஆகிய அணிகள் மோத உள்ளனர்.

தொடர் போட்டியின் வின்னர் அணிக்கு ரூ.30,016 பரிசும், ரன்னர் அணிக்கு ரூ. 20,016 பரிசும் வழங்கப்பட உள்ளன. மேலும், தொடரில் சாதனை நிகழ்த்தும் தலை சிறந்த வீரர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

தொடர் ஆட்டங்களைக் காண அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி விளையாட்டு பிரியர்கள் ~ ஆர்வலர்கள் ~ இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க AFFA நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

முன்னதாக கால்பந்து தொடர் போட்டிகளை வழி நடத்தி செல்வது குறித்த  நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், AFFA நிர்வாகிகள் எம்.ஏ முகமது தமீம், அகமது அனஸ், சேக் தம்பி, சமியுல்லா, எல்.எம்.எஸ் முகமது புஹாரி மற்றும் கால்பந்து பயிற்சியாளர்கள், வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

Saturday, July 21, 2018

அதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி சாம்பியன் ~ பரிசளிப்பு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 21
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 15 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் கடந்த ஜூலை 08 ந் தேதி தொடங்கி நடந்து வந்தது.

தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், காயல்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, காரைக்கால், பாண்டிச்சேரி, தூத்தூர் உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில், நாகூர், காயல்பட்டினம், சிவகங்கை, தூத்தூர் ஆகிய 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர், நாகை மாவட்டம், நாகூர் அணிகள் மோதினர். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் தூத்தூர் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

ஆட்ட நடுவராக உடற்கல்வி ஆசிரியர் வாசுதேவனும், லைன் நடுவர்களாக அதிரை ஷபானுதீன், அசாருதீன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.

இதன் பின்னர், மைதானத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தூத்தூர் அணிக்கு ரூ.35,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெற்ற நாகூர் அணிக்கு  ரூ.25,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட்டன.

முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் அபூபக்கர், தஞ்சை மாவட்ட கால்பந்தாட்ட கழகத் தலைவர் சிவானந்தம், செயலாளர் வேலுச்சாமி, திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் ஏ.முகமது அலி, அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகனந்தம், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கச் செயலாளர் எம்.எப் முகமது சலீம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர், ஆட்ட முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியினை, அதிரை கால்பந்தாட்டக் கழகத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தொகுத்து வழங்கினார். தொடர் போட்டி ஏற்பாட்டினை அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நிர்வாகிகள் முகமது தமீம், சேக் தம்பி, அகமது அனஸ், பாருக், புஹாரி, சமியுல்லாஹ் ஆகியோர் செய்து வந்தனர். இன்றைய இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வருகை தந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
  
 
 
 
 
 

Friday, July 20, 2018

அதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ நாகூர், தூத்தூர் அணிகள் மோதல்!

அதிராம்பட்டினம், ஜூலை 20
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 15 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், காயல்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, காரைக்கால், பாண்டிச்சேரி, தூத்தூர் உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில், நாகூர், காயல்பட்டினம், சிவகங்கை, தூத்தூர் ஆகிய 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். இதன் பின்னர் நடந்த ஆட்டங்களில் தூத்தூர், நாகூர் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இன்று (ஜூலை.20) வெள்ளிக்கிழமை நடந்த அரை இறுதி 2-வது நாள் ஆட்டத்தில் நாகூர், காயல்பட்டினம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் நாகூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

முன்னதாக, சிறப்பு அழைப்பாளராக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

நாளை இறுதி ஆட்டம்:
நாளை சனிக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு இறுதி ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிவில், பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.35,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.25,015 ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
 
 
 
 
 
 
 
 

Saturday, July 14, 2018

அதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்டை அணிகள் வெற்றி (படங்கள்)

கம்பீரமாக காட்சியளிக்கும் அதிரை AFFA அணி வீரர்கள்
அதிராம்பட்டினம், ஜூலை 14
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 15 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் கடந்த (ஜூலை 08) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது.

தொடர் போட்டியின் 7-வது நாளான இன்று சனிக்கிழமை 2 ஆட்டங்கள்  நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் நாகூர், காரைக்கால் அணிகள் மோதின. ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் நாகூர் அணி வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆகிய அதிரை AFFA, பட்டுக்கோட்டை அணிகள் மோதின. நிறைவில் பட்டுக்கோட்டை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக, சிறப்பு அழைப்பாளராக தரகர் தெரு முகைதீன் பள்ளிவாசல்  நிர்வாகக் கமிட்டித் துணைத் தலைவர் எம். முகமது மீராசாஹிப், செயலாளர் ஒய். அஸ்ரப் அலி ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நாளை (ஜூலை 15) ஞாயிற்றுக்கிழமை 8-வது நாள் ஆட்டமாக இன்றைய ஆட்டங்களில் வெற்றி பெற்ற நாகூர், பட்டுக்கோட்டை அணிகள் விளையாட உள்ளனர்.