தஞ்சை மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம், மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் விசைப்படகு மீனவர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச்செயலாளர் ஏ.கே.தாஜூதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் மல்லிப்பட்டினம் வடுகநாதன், சேதுபாவாசத்திரம் செல்வக்கிளி, கள்ளிவயல் தோட்டம் சங்க தலைவர் ஹெச். அகமது கபீர், மல்லிப்பட்டினம் சங்கத்தலைவர் இ.குருசேவ், சேதுபாவாசத்திரம் சங்கத்தலைவர் ஏ.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
'கடந்த செப்டம்பர்-19 ந்தேதி மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏ.சர்புதீன் என்பவருக்கு சொந்தமான ரூபாய் 15 இலட்சம் மதிப்புடைய விசைப்படகு, அடையாளம் தெரியாத விசமிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது. அதனை கண்டுபிடிக்க உடனடியாக தனிப்படை அமைத்து உதவிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தும், விசாரணையை தீவிரப்படுத்தி, சமூக நல்லிணக்கம் பாதிக்காத வகையில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக்கொள்வது,
பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் வழங்கப்படாமல் உள்ள நஷ்ட ஈட்டினை வழங்கிட வேண்டும். மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் பகுதியில் பலகாலமாக குடியிருந்து வந்த மீனவர்கள், மல்லிப்பட்டினம் துறைமுகம் விரிவாக்கப் பணிகளுக்காக தங்கள் தங்குதளங்களை காலி செய்து அரசிற்கு வழங்கினர். துறைமுகப்பணி தொடங்கி நடைபெற்று வரும் இவ்வேளையில் உரிய நிவாரணம் வழங்கிடவேண்டும்.
சேதுபாவாசத்திரம் துறைமுகம் விரிவாக்கம் சம்பந்தமாக மீனவர்களின் பல்வேறு யோசனைகளை அரசுத்துறையினர் கண்டு கொள்ளவேயில்லை. முக்கியமாக தற்போதைய மணல் திட்டுகளை அகற்றி,ஆழப்படுத்திடவும் உடனடியாக காலதாமதம் இன்றி துறைமுகத்தை அமைத்து தரவேண்டும்.
சேதுபாவாசத்திரத்தில் தமிழ்நாடு திட்ட இணையம் ( TAFCO FED ) மூலமாக நரிமணத்தில் இருந்து தருவிக்கப்பட்டு மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் தரமற்றதாக அடர்த்தி திறன் குறைவாக உள்ளதால், சாதாரணமாக தேவைப்படுவதை விட அதிகளவில் தேவைப்படுகிறது. எனவே மற்ற பகுதிகளில் வழங்கப்படுவது போல் திருச்சி நிலையத்தில் இருந்து பெறப்படும் டீசலை வழங்கவேண்டும் என சம்பந்தப்பட்ட துறையை வலியுறுத்துவது.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8 ந்தேதி முதல் மீனவர்கள், விசைப்படகுகள் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தம் செய்வது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தி முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது' என விசைப்படகு மீனவர் சங்க மாநிலச்செயலாளர் சி.தாஜூதீன் தெரிவித்தார்.
கூட்டத்தில் எஸ்.எஸ்.சேக்தாவூது, பி.முகமது மரைக்காயர், கே.ரகுபதி, ஏ.சர்புதீன், அப்துல் மப்ரூக், பாலசுப்பிரமணியம், ஹைதர்அலி, ரஹ்மத்துல்லா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விசைப்படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்:
1. விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன்.
2. தீ வைத்து எரிக்கப்பட்ட மீனவரின் விசைப்படகு


Thanks and your response to make action like unity. ...
ReplyDelete