தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் கடலோரப் பகுதியில், புயல் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்கும் விதமாக, புதன்கிழமை மாலை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை துறை இயக்குனருமான என்.சுப்பையன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
மல்லிப்பட்டினம் துறைமுகம், காரங்குடா புயல் பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி, அங்குள்ள நிவாரண முகாம்களில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். பின்னர் அம்புலியாறு பகுதிக்கு வந்த அவரை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராவ் வரவேற்றார். அம்புலியாற்றின் முகத்துவாரத்தில் தற்காலிகமாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
அவரிடம், சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த அம்புலியாறு தடுப்பணை திட்டப்பணிகளை விரைந்து தொடங்குமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து முடியனாறு பகுதியில் ஆற்று முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் ம.கோவிந்தராசு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிறப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பயிற்சி ஆட்சியர் அமித், பட்டுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், மீன்துறை இயக்குநர் சிவகுமார், சேதுபாவாசத்திரம் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் நாடியும் சிவ. மதிவாணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் அருணாச்சலம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.













































