தஞ்சாவூர் செப்.17
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதனை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது தலைமையில் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை குறித்த மனுக்களை வழங்கினர்.
அம்மனுவில், "குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டிக் கொடுக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், சொந்த வீடு, இடம் இல்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வீடுகள் வழங்கப்பட வேண்டும். தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட வேண்டும்.
மாதாந்திர உதவித் தொகைக்காக மனு கொடுத்து விட்டு காத்திருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் இருக்கும், மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனே அடையாள அட்டை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் வின்சென்ட் ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர் சுதாகர், திருவோணம் ஒன்றியத் தலைவர் திருமேனி, சேதுபாவா சத்திரம் ஒன்றியச்செயலாளர் ஜலீல் முகைதீன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம் ஜம் அகமது அஸ்ரப் ஆகியோர் உடனிருந்தனர்.