.

Pages

Showing posts with label பட்டுக்கோட்டை செய்திகள். Show all posts
Showing posts with label பட்டுக்கோட்டை செய்திகள். Show all posts

Friday, December 11, 2020

பட்டுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

பட்டுக்கோட்டைடிச.11
ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிமை வழங்குவதை கண்டித்து, வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

இந்திய மருத்துவர் சங்கத்தின் பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.அன்பரசன் தலைமையில், டாக்டர்கள் அன்பழகன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், மகேஸ்வரி அன்பரசன், ஸ்ரீதர் பாபு, ராஜா ராமலிங்கம் ஆகியோர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தரை வெள்ளிக்கிழமை அன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அம்மனுவில், "அறிவு சார்ந்த நவீன அறிவியல் மருத்துவத்தை உலகநாடுகள் பிரதானமாக ஏற்றுக்கொண்டு, நடைமுறையில் மிகச்சிறப்பாக மக்களின் சுகாதாரத்தை தொடர்ந்து பேணிக்காத்து வருகின்றனர். அறிவுசார் நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பு மற்றும் பயிற்சி இன்றி (அடிப்படை தகுதியின்றி) மற்ற துறையினரை எடுத்துக்காட்டாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது என்பது, பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும் என்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவத் துறையின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் செயலாகும். எனவே மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இதனை அரசு அனுமதிக்கக் கூடாது" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ சங்கத்தின் அறைகூவலை ஏற்று, பட்டுக்கோட்டையில் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மட்டும் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது. 

Friday, November 20, 2020

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பட்டுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது (படங்கள்)

பட்டுக்கோட்டை, நவ.20
தடையை மீறி திருக்குவளையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி. பாலசுப்பிரமணியன் தலைமையில், அக்கட்சியினர் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளையில் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டனர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 247 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


மருத்துவம் படிக்க வாய்ப்பு: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியருக்கு பாராட்டு!

பட்டுக்கோட்டை, நவ.20
அரசுப் பள்ளி உள் ஒதுக்கீட்டில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தகுதிபெற்ற பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியருக்கு அரசு மருத்துவர்கள் பாராட்டினர்.

திருவோணம் வெட்டிக்காடு ஊராட்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் அறிவுநிதி, தமிழ்மணி. கூலி வேலை செய்து வருகின்றனர். இத்தம்பதியின் மகள் ஏ. அருள்மொழி. வெட்டிக்கடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014 ஆண்டு நடந்த +2 அரசு பொதுத்தேர்வில் 929 மதிப்பெண் பெற்று, திருப்பூரில் இளங்கலை நர்சிங் படிப்பை 2018 ஆம் ஆண்டு முடித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை சார்பில், கரோனா தடுப்புப் பணிக்காக செவிலியராகப் பணி நியமனம் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், நடப்பாண்டில் முதல்முறையாக நீட் தேர்வு எழுதி, வெற்றி பெற்றார். இதையடுத்து அரசுப் பள்ளி உள் ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில், தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் தலைமையில், பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பி.கோமதி மற்றும் உதவி மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள், மருந்தாளுநர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Tuesday, November 17, 2020

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை, நவ.17
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஏ.ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் எச்.ஜலீல் முகைதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தெலங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும், தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், அரசு துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து, 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 3 மாதங்களில் வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்புத் துணி கட்டி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்பாட்டத்தில், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கே. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைத்தலைவர் என்.ஜெயபாலன்  ஒன்றிய துணைச் செயலாளர் டி. கோபி செல்வம், ஒன்றிய பொருளாளர் கே. கோட்டை துரை, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப், கொண்டிக்குளம் ராமமூர்த்தி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். நிறைவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வாட்டாட்சியர் அலுவலரிடம் வழங்கினர்.


Sunday, November 8, 2020

பட்டுக்கோட்டையில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம்!

பட்டுக்கோட்டை, நவ.08
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்  பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர் அலி முன்னிலை வகித்தார். 

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் போதை பழக்கம், சினிமா, மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளிலும் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தும்  நோக்கில் நவம்பர் மாதம் 10 ம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம்  தேதி வரை இலக்கை நோக்கி இளைஞனே வா.! என்ற செயல்திட்டத்தை தீவிரப் பிரச்சாரமாக செய்ய இறுக்கின்றோம். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும் படி இச்செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

2. இஸ்லாமியர்களின்  உயிருனும் மேலான நபிகள் நாயகம் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்தும் , அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் விதமாகவும் சில விஷமிகள் செயல்பட்டுகின்றனர். அவர்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்பதை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கின்றது.

3. சமீபத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறான முறையில் பேசிய பிரான்ஸ் நாட்டு அதிபரை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

4. தமிழகத்தில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு    உள்ளது. இது போதுமானது அல்ல இதை 7 சதவீதமாக அதிகரித்து தர வேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் பல போராட்டங்களை நடத்தியும் வந்தோம் அதை உயர்த்தி  தருவோம் என காலம் சென்ற  ஜெயலலிதா அவர்கள் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். அம்மாவின் வழியில் பயணிப்பதாக மேடைக்குமேடை முழங்கி வரும் அதிமுக அரசு உடனடியாக இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரும் படி இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

5. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் இந்நாட்டு மன்னர்களை அந்நியர்களாக சித்தரிக்கும் கொடுஞ்சட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. அதன் பின் இந்தியாவே புரட்சிக்களமாக மாறியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் வீரியமிக்க போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியது. தற்போது கொரோனா முடிந்தவுடன் அது நடைமுறைப்படுத்தப் படும் என பாஜக பேசி வருகிறது. அதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

6. அது நடைமுறைப்படுத்தப்பட்டால் வீரியமிக்க போரட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையேற்று நடத்தும் என இச்செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.

இக்கூட்டத்தில், மாநில செயலாளர் தாவூத் கைஸர், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் கோவை அப்துர் ரஹீம் உட்பட மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Thursday, October 22, 2020

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணை வழங்கல்!

பட்டுக்கோட்டை, அக்.22
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்வுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் ஆ. இராமசுப்பு தலைமை வகித்து.  பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 19 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையினை வழங்கினார்.

நிகழ்வில், வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, சிவசாமி, மீனாசுந்தரி மாதவன் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். நிறைவில் தமிழக முதல்வர், கல்வி அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட  கல்வி அலுவலர், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தாளாளர்கள் நன்றி கூறினர்.

முன்னதாக, நேற்று 21.10.2020  புதன்கிழமை திருச்சி ஜெ.ஜெ பொறியியல்  கல்லூரியில் நடைபெற்ற தொடர் அங்கீகாரம் வழங்கும் விழாவில்  புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர்  என்.உதயகுமார் கலந்துகொண்டு தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையனிடம் தொடர் அங்கீகாரத்திற்கான சான்றிதழைப்  பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Thursday, October 15, 2020

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்திரங்கள் வழங்கல்!

பட்டுக்கோட்டை, அக்.15
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில், தனி நபர் வாழ்வாதார உதவியாக 4 பயனாளிகளுக்கு ரூ 35 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.பைசல் அகமது தலைமை வகித்தார். நிகழ்வில், எஸ்.ஆர் ரவி நினைவாக, ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் முகமது அலி ஜின்னா மற்றும் பட்டுக்கோட்டை இறகுப்பந்து நிர்வாகிகள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கினர். 

இந்நிகழ்வில், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் ஏ.ஆர் அன்பு, பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் ஏ. சக்திவேல், பொருளாளர் எஸ் சுல்தான் இப்ராகிம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டன.