.

Pages

Friday, December 2, 2016

வாக்காளர் சேர்க்கை சுருக்கத் திருத்தப் பணி ஆய்வு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி. சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் கடந்த செப்டம்பர் மாதம், 174, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி நீங்கலாக மற்ற 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்றது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு. தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, எதிர்வரும் 05-01-2017 அன்று வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் சேர்க்கை சுருக்கத் திருத்தப் பணியை ஆய்வு செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தால் பார்வையாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று 02-12-2016 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் மாற்றம் தொடர்பாக வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் கும்பகோணம் சார்ஆட்சியர், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர்கள். தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர்கள் மற்றும் தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் திருவையாறு வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்,

மேற்படி பார்வையாளர் முனியநாதன், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை முன்னிலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

அதிரையில் 38.90 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், டிச-02
தென்கிழக்கு வங்கக் கடலில் நாடா புயல் உருவானதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து பகலில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது.

இன்று அதிகாலை நாடா புயல் கரையைக் கடக்கும் என வானிலை அறிவித்தது. இதனால் இப்பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி அதிரையில் 38.90 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 27.52 மி.மீ, பேராவூரணி 8.40 மி.மீ, மதுக்கூரில் 27.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

இன்று மாலை 4 மணி நேர நிலவரப்படி அதிரையில் 2.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 1.2 மி.மீ, மதுக்கூரில் 4.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

அமீரகத்தில் டிசம்பர் மாத பெட்ரோல் விலை குறைந்தது !

அதிரை நியூஸ்:துபாய், டிச-02
அமீரகத்தில் மாதாமாதம் பெட்ரோல் விலையில் சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில மாதங்களாக சிறுக சிறுக ஏற்றப்பட்டு வந்த சில்லரை பெட்ரோல் விற்பனை விலை தற்போது குறைந்துள்ளது.

அடைப்புக்குறிக்குள் உள்ளவை கடந்த மாதங்களின் விலை நிலவரங்கள் ஒப்பீட்டுக்காக மட்டும்.

ஸ்பெஷல் 95 – 1.69 திர்ஹம் (நவ.- 1.79, அக்.- 1.70)
ஸ்பெஷல் 98 – 1.80 திர்ஹம் (நவ. – 1.90, அக். 1.81)
டீசல் - 1.81 திர்ஹம் (நவ. – 1.91, அக். 1.76)

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

அதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச-02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் நவம்பர் மாத மாதந்திர கூட்டம் அலுவலகத்தில் கடந்த [ 30-11-2016 ] அன்று புதன்கிழமை இரவு 6.30 மணியளவில் நடந்தது.
 
அதிரை பைத்துல்மாலின் நவம்பர் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் விவரங்கள்:
 
 
 
 

கொட்டும் மழையில் பணி செய்யும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் !

அதிராம்பட்டினம், டிச-02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குவியும் குப்பை கூளங்கள், கழிவுகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுதொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் நிரந்தர ஊழியர்கள் 21 பேர்களும், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் 54 பேர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இரு வேறு குழுக்களாக பணியாற்றி வருகின்றனர்.

நாடா புயல் அறிவிப்பை அடுத்து கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி மழையும் அவ்வப்போது தூறல் மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பை கூளங்களை துப்புரவு பணியாளர்கள் கொட்டும் மழையில் இன்று காலை முதல் டிராக்டர் வாகனத்தில் துரிதமாக அள்ளிச்செல்கின்றனர். இவர்களின் துரிதப் பணியை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

சென்னையில் ADWA சார்பில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்: முன்பதிவிற்கு அழைப்பு !

சென்னை, டிச-02
அதிராம்பட்டினம் டெவெலப்மெண்ட் அன்ட் வெல்ஃபேர் அசோஸியேசன் (ADWA) சார்பில் 'அரசு உயர் பதவி வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்' வரும் 4-12-2016 அன்று ஞயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, மூர் தெரு இந்தியன் பேலஸ் ஹோட்டல் அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் அரசு உயர் பதவிகளில் இடம்பெற போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? 'டிஎன்பிஎஸ்சி' போன்ற அரசு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? போன்ற செயல்விளக்கப் பயிற்சி காட்சி படங்களுடன் விளக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.படித்த வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு: 
ஆஷிக் - 96004 73993 
தஸ்லிம் - 9600074747

( முகாம் பங்களிப்பாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

இப்படிக்கு, 
Adirampattinam Development and Welfare Association (ADWA)
Chennai

Thursday, December 1, 2016

அதிரை கடலோரப் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு ( படங்கள் )

அதிராம்பட்டினம், டிச-1:
நாடா புயல் எச்சரிக்கையை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அதிராம்பட்டினம் பகுதிலுள்ள கடலோர கிராமங்களான ஏரிப்புறக்கரை,  கீழத்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு இல்லங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புயல், மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அதிரை பகுதி கிராமங்களில் இயந்திரம் மூலம் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியருடன் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி. சேகர், வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மைதீன் பிச்சை மற்றும் அலுவலர்கள் சென்றனர்.
 

தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ரூ.10 இலட்சம் கடனுதவி 25 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது.
தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் இந்த திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற  இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்க உள்ள தொழில்களில் உற்பத்தி பிரிவின்கீழ் ரூ.5 இலட்சம் வரையிலும் சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 இலட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக கணக்கிட்டு ரூபாய் 75,000 முதல் அதிகபட்சமாக  ரூபாய் 1,25,000 ஆயிரம் வரை மாவட்ட தொழில் மையம் மூலம் பரிந்துரைக்கப்படும்.

தற்போது தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு ஆணை அரசு ஆணை எண்.35, நாள்:11.11.2016 ன்படி உற்பத்திப்பிரிவில்  ரூபாய் 5 இலட்சத்திலிருந்து ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தப்பட்டு அதற்கான மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.1,25,000/- வரை வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம் மற்றும்   குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 1, 50,000/- வரை இருக்கலாம்.    திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.

தகுதியான தொழில்களாக நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள்   தொடங்கலாம்.  திட்ட இலக்கீடாக தஞ்சாவூர்  மாவட்டத்திற்கு 2016-17ஆம் நிதியாண்டில் 175 நபர்கள் பயன் பெற ரூ. 87.50  லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.  

தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர் அவர்களிடம் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.