.

Pages

Tuesday, January 3, 2017

செட்டியா குளம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் அதிகாரிகள் அளவீடு !

அதிராம்பட்டினம், ஜன-03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த 2013 ம் ஆண்டு புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில் குளத்தை சுற்றி காணப்படும் பகுதிகளின் சிலவற்றில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், இவற்றை அகற்றக்கோரி இப்பகுதியை சேர்ந்த சரபுதீன் கோர்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக கடந்த டிச.15-ம் தேதி உயர்நீதிமன்றம் வருவாய் அலுவலர்களுக்கு கடிதங்கள் அனுப்பி 2 மாத காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட பகுதியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்று அறிவுறுத்தியது.

இதையடுத்து கடந்த 23-12-2016 அன்று வெள்ளிக்கிழமை மாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர் மகர ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று ( 03-01-2017 ) செவ்வாய்க்கிழமை மாலை செட்டியா குளத்தை சுற்றி காணப்படும் பகுதிகளை கிராம நிர்வாக அலுவலர் மகர ஜோதி, டிடிஎஸ் தங்கராசு, பட்டுக்கோட்டை பிர்கா சர்வேயர் செல்வகுமார், தலையாரி பத்மநாபன் உள்ளிட்டோர் அளந்து குறியீடு செய்தனர். மேலும் நாளை மீண்டும் அளவீடு செய்யும் பணி தொடர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பு பகுதிகளை தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள காலக்கெடு நிர்ணயிக்கக்கப்படும் என கூறப்படுகிறது.
 
 
 
 
 
 


மனைவியுடன் 20 ஆண்டுகளாக பேசாமல் குடும்பம் நடத்திய கணவன் !

அதிரை நியூஸ்: ஜன-03
இந்த உலகம் பல்வேறு குணாதிசயம் உடைய விந்தை மனிதர்களால் நிறைந்தது அவர்களின் செயல்பாடுகள் 'அடடே' என்று சொல்லவும் தூண்டும் 'அடேய்...' என்றும் பல்லை கடிக்கவும் தூண்டும்! சப்பை மேட்டர் ஒன்றுக்காக ஜப்பானியர் ஒருவர் 20 வருடங்களாக குடும்பம் நடத்துகிறேன் என்ற பெயரில் மனைவியுடன் குப்பை கொட்டி வந்ததை பார்ப்போம்.

தெற்கு ஜப்பானின் நரா (Nara) என்ற நகரில் வசிப்பவர் ஓட்டோ (Otou) இவரது மனைவி கட்டயாமா யுமி (Katayama Yumi), இவர்களுக்கு 3 குழந்தைகள். சுமார் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டினுள் வாழ்ந்தபோதும் தன் மனைவியுடன் நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துள்ளார், தனது பிள்ளைகளுடனும் சகோதரிகளுடனும் பிறரிடமும் பேசுபவர் தன் மனைவியிடம் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் பிள்ளைகளிடம் சொல்லியே சொல்லுவார் என்றாலும் அவர் மனைவி பேசுவதை காதில் வாங்கிக் கொள்வதில் வஞ்சகம் செய்யவில்லை.

இவர்களின் யோசிக்கி (Yoshiki) என்ற 18 வயதுடைய மூத்த மகன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (அந்த ஊரு 'சொல்வதெல்லாம் உண்மை'ங்க) கலந்து கொண்டு தன் தந்தை இதுவரை தன் தாயுடன் நேரடியாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்றும் தனது தாயையும் தந்தையையும் சேர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது என்றாலும் 'ஒரு தடவ முடிவெடுத்துட்ட எம்பேச்ச நானே கேக்க மாட்டேன்ல' என வசனம் பேசினார்.

ஒருவழியாக பிரச்சனையை புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிர்வாகம், முதன்முதலில் அவர்கள் சந்தித்துக் கொண்டு காதலை பகிர்ந்து கொண்ட அதே பூங்காவில் மீண்டும் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்தது. ஒரு மௌன போராட்டத்திற்குப்பின் பூங்காவில் முதலில் குற்றவுணர்வுடன் தன் மனைவியின் முகத்தையே பார்க்க மருகிய ஓட்டோ பின் ஒருவழியாக தன் மனைவி தனக்காகவும் தன் குழந்தைகளுகாகவும் பொருத்துக் கொண்ட வேதனைகளுக்காக நா தழுதழுக்க நன்றி தெரிவித்து கொண்டதுடன் இனி மனைவியுடன் பேசுவேன் என்றும் ஒற்றுமையுடன் இருப்பேன் எனவும் ஆனந்த கண்ணீருடன் தன் பெற்றோர்கள் நேருக்குநேர் முதன்முதலாக பேசிக்கொள்வதை பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் முன் உறுதியளித்தார்.

சும்மா தொணதொணன்னு பேசும் கணவன் அல்லது மனைவியை பெற்று 'அனுபவிப்பவர்கள்' அந்தப் பக்கம் ஓராமாக போய் விளையாடுங்க!

முடிவுரை:
20 ஆண்டுகளாக ஏன் பேசவில்லை என்பதற்கு ஓட்டோ சொன்ன காரணம், என் மனைவி என்னை கவனித்துக் கொள்வதை குறைத்துக் கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதிலும், என் குழந்தைகள் மீது பாசத்தை பொழிவதிலும் அதிக ஆர்வம் காட்டினர். எனவே பொறமை கொண்ட நான் அவளை பழிவாங்குவதற்காகவே பேசாமல் புறக்கணித்தேன் என்றார். இப்ப சொல்லுங்க 'அடேய்ய்ய்ய்ய்....'

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
 

துபாயில் பிரமாண்ட பயணிகள் துறைமுகம், லைட் ஹவுஸ் !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-03
ஆடம்பரங்களுக்கு அடுத்து, நவீன துபைக்கு சுற்றுலா பயணிகளையும், வர்த்தகர்களை ஈர்க்கும் முக்கிய தூண்டில்களாக பிரம்மாண்ட கட்டுமானங்களே முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதனடிப்படையில் புதிய பயணிகள் துறைமுகம் மற்றும் லைட் ஹவுஸ் நிர்மாணிப்பிற்கான திட்டம் குறித்து துபை ஆட்சியாளர் ஷேக் முஹமது அவர்கள் முறைப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

ஜூமைரா பீச் ரெஸிடன்ஸ் மற்றும் பாம் ஜூமைராவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் சுமார் 20 மில்லியன் சதுர அடியில் 'துபை துறைமுகம்;' கட்டப்படவுள்ளது. இந்தத் துறைமுகத்தில் ஒரே நேரத்தில் 1400 ஆடம்பர படகுகள் மற்றும் பயணியர் கப்பல்களை நிறுத்த முடியும் மேலும் ஒரே நேரத்தில் சுமார் 6000 பயணிகளின் வருகையை கையாள முடியும்.

மேலும், அதே இடத்தில் சுமார் 3.5 மில்லியன் சதுர அடியில் ஷாப்பிங் மால், கலையரங்கம் (Events Arena), குடியிருப்பு கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், அலுவலகங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள், அரசின் பொது சேவை மையங்கள், உணவகங்கள், தேநீரகம் இவற்றுடன் 135 அடி உயர பிரம்மாண்ட லைட் ஹவுஸ் ஒன்றும் புதிய துபை துறைமுகத்தை சூழ வரவுள்ளது.

துறைமுகத்திற்கான நிலப்பகுதி தோண்டுதல் பணி நிறைவடைந்த பின் 4 ஆண்டுகளில் இத்திட்டம் கட்டி முடிக்கப்படும். 3 ஹெலிகாப்டர் தளங்கள் (Helipads), புதிய துறைமுகத்தையும் ஷேக் ஜாயித் சாலையையும் இணைக்கும் நேரடி மேம்பாலம் ஒன்று, பாம் ஜூமைரா மற்றும் புளு வாட்டர் ஐலேண்ட் மெட்ரோ நிலையங்களை இணைக்கும் வகையில் மோனோ ரயில் திட்டம், துறைமுகத்தை பாம் ஜூமைராவுடன் இணைக்கும் நடைபாலம் ஒன்று என பல்வேறு சிறம்பம்சங்களுடன் உருவாகவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் வேலைவாய்ப்பு 35 சதவீதம் சரிவு !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-03
ஜாப் டிரேக்கர், மான்ஸ்டர்.காம் போன்ற ஆன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் ஆய்வறிக்கையின்படி, அமீரகத்தில் கடந்த 2015 நவம்பர் மாத நிறைவுடன் ஒப்பிடுகையில் 2016 நவம்பர் மாத நிறைவில் சுமார் 35 சதவிகித வேலைவாய்ப்புக்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறைவிற்கு பெட்ரோல் விலைவீழ்ச்சியே பிரதான மறைமுக காரணியாக கணக்கிடப்படுகிறது.

வங்கிகள், நிதி சார் சேவைகள், இன்ஸூரன்ஸ் போன்ற துறைகளே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும் கொள்வணவு செய்வோர் (Purchase), இடப்பெயர்வு மேலாண்மை (Logistic Management), விநியோகம் சார் பொறுப்புக்கள் (Supply Chain Roles) போன்ற துறைகளில் சுமார் 19 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதுடன் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதாலும் 2017 ஆம் ஆண்டில் அதிக வேலைவாய்ப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Hays தெரிவித்துள்ள தகவலின்படி வங்கி, இன்ஸூரன்ஸ், நிதி போன்ற துறைகளில் சுமார் 39 சதவிகிதம், சேவை துறைகளில் 37 சதவிகிதம், வர்த்தகம், சில்லறை வணிகம், இடப்பெயர்வு மேலாண்மை போன்ற துறைகளில் சுமார் 35 சதவிகிதம் வேலைவாய்ப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மிகக்குறைந்த அளவு பாதிக்கப்பட்டுள்ள துறைகளாக  கல்வித்துறையில் -1 சதவிகிதம், உற்பத்தி, வாகனம் மற்றும் அதன் துணைத்துறைகளில் -8 சதவிகிதம், ரசாயனம், பிளாஸ்டிக், ரப்பர், உரம், பூச்சி கொல்லிகள் தயாரிப்பு நிறுவனங்களில் -8 சதவிகிதம் என வேலைவாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

The Employment Index ஆய்வின்படி, சுமார் 55 சதவிகித தொழிற்சார் வல்லுனர்கள் தற்போது தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் எந்த முன்னேற்றமும் இருக்காது என நம்பி வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடங்களுக்கு நிச்சயமாக மாற்று ஊழியர்கள் தேவைப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Monday, January 2, 2017

மரண அறிவிப்பு ( ஹாஜி மு.செ.அ ஹாஜா முகைதீன் அவர்கள் )

அதிரை நியூஸ்: ஜன-02
அதிராம்பட்டினம், சாயக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.அ முகமது சரீப் அவர்களின் மகனும், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரரும், அப்துல் கபூர், அஜ்மல் ஷரீப் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது யஹ்யா, அக்பர் அலி ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி மு.செ.அ ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று இரவு பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா நாளை (03-01-2017) காலை 10 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 380 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தல் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள்  தலைமையில் இன்று (02.01.2017) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மந்திராசலம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

26 ஊராட்சிகளில் நாளை ( ஜன.3 ) சிறப்பு கிராம சபைக் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 26 ஊராட்சிகளில் மட்டும் நாளை 03-01-2017 செவ்வாய்கிழமை அன்று 2014-15 மற்றும் 2015-2016 ம் ஆண்டிற்கான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமு்க தணிக்கை மேற்கொள்ளல் குறித்து நடைபெற உள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் மணக்கரம்பை ஊராட்சியிலும். பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓரத்தூர். சானூரப்பட்டி ஊராட்சிகளிலும். திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் அல்லூர். செம்மங்குடி ஊராட்சிகளிலும். ஓரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் கோவிலூர். ஆதனக்கோட்டை ஊராட்சிகளிலும். திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கிளாமங்கலம். அதம்பை ஊராட்சிகளிலும். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் குமரங்குடி. திப்பிராஜபுரம் ஊராட்சிகளிலும். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்,புதூர். வில்லியவரம்பல் ஊராட்சிகளிலும். திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் மரத்துறை. அணைக்கரை ஊராட்சிகளிலும். பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளிக்கடை. பசுபதிகோவில் ஊராட்சிகளிலும். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தேவராயன்பேட்டை. கீழகோவில்பத்து ஊராட்சிகளிலும். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செம்பாளுர். நடுவிக்கோட்டை ஊராட்சிகளிலும். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கனாவூர். பழவோக்காடு  ஊராட்சிகளிலும். பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் மாவடுக்குறிச்சி. புனவாசல் ஊராட்சிகளிலும். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கநாதபுரம் ஊராட்சியிலும் மேற்காஹணும் 2014-15 மற்றும் 2015-2016 ம் ஆண்டிற்கான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமு்க தணிக்கை மேற்கொள்ளல் பொருள் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது,

மேற்காணும் 14 வட்டாரங்களில் 26 ஊராட்சிகளில் மட்டும் உள்ள பொது மக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

2016 - 2017 ஆம் ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள் !

அதிரை நியூஸ்: ஜன-02
இரட்டை குழந்தைகள் பிறப்பது ஒன்றும் அதிசயமில்லை தான் ஆனால் சான்டியாகோ நகரில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சில நிமிட இடைவெளிகளில் கிருஸ்தவ / ஆங்கில புத்தாண்டு கணக்குகளின்படி இரட்டை குழந்தைகள் இரு ஆண்டுகளில் பிறந்துள்ளன.

சான்டியாகோ நகரில் ஷார்ப் மேரி பிர்ச் மருத்துவமனையில் 2016 டிசம்பர் 31 பின்னிரவு 11.56 மணிக்கு ஒரு பெண் குழந்தையும் அடுத்து ஒரு சில நிமிடங்களில் 2017 ஜனவரி 1 ஆம் தேதி பிறந்தவுடன் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டும் சான்டியாகோ நகரில் உள்ள கைஸர் பெர்மனன்ட் ஜியோன் மெடிக்கல் சென்டரில் 2015 ஆண்டு கணக்கில் ஒரு பெண் குழந்தை பிறகு ஒரு நிமிடத்திற்குப் பின் 2016 ஆம் ஆண்டு கணக்கில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குறிப்பு: ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தேசத்தை சேர்ந்த மக்களுக்கு இரட்டை குழந்தைகள் இரு ஆண்டு எனும் கணக்குகளில் பிறந்தனர் என்ற செய்தியே அன்றி இந்தப் பிறப்பை கூடுதலாக புனைந்து சிறப்பித்து சொல்வதோ, காரணங்கள் கற்பிப்பதோ நோக்கமல்ல.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்