.

Pages

Tuesday, June 2, 2020

தஞ்சை மாவட்டத்தில் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியம்!

அதிரை நியூஸ்: ஜூன் 02
தமிழகத்தின் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தி பாதிக்காத வண்ணமும் விளை பொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும்  ஒளி மின்வேலியினை தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2020-2021-ம் நிதியாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட 24.03.2020 அன்று நடைபெற்ற சட்டசபை அறிவிப்பில் வேளாண்மைத் துறை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

சூரிய ஓளி மின்வேலி அமைப்பானது ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினால் இயங்கக் கூடியது. மின் வேலியைக் கடந்து செல்ல முயலும் விலங்குகள், அந்நியர்கள் மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் அதிர்ச்சியால் வேலியை கடந்து சென்று விளைப்பயிர்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களை நாசம் செய்திட இயலாது.

விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின் வேலியினை 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம். சூரிய ஓளி மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு தோராயமாக  5 வரிசைக்கு ரூ.250/-ம்,  7 வரிசைக்கு ரூ.350/-ம், 10 வரிசைக்கு ரூ.450/-ம் செலவாகும்.

தனிநபர் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் அல்லது 1245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் அமைப்பதற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக  ரூ.2.18 இலட்சம் மானியம் வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசு மானியத்துடன் சூரிய ஓளி மின்வேலி அமைத்திட தஞ்சாவூர் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் க.குமணன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அவர்களை 9443489403 என்ற எண்ணிலும், கும்பகோணம் கோட்டத்தை சர்ந்த விவசாயிகள் லெ.அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), கும்பகோணம் அவர்களை 94425 71176 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை கோட்டத்தை சர்ந்த விவசாயிகள் சி.எழிலன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பட்டுக்கோட்டை அவர்களை 94436 78621 என்ற எண்ணிலும், மேலும் கூடுதல் விவரங்களுக்கு எச்.என் கான், செயற்பொறியாளர் (வே.பொ) அவர்களை 94433 98633 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். 

ஷிஸ்வா அமைப்பின் அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஜூன் 02
அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, கரோனா முடக்கங்களுக்கிடையில் வாட்சப் சமூக வலைத்தளம் மூலம் ஷிஸ்வா (Shamsul Islam Sangam Welfare Association) அமைப்பின் அமீரக கிளை நடத்திய கிராஅத் போட்டியில், உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மஹல்லாவாசி குழந்தைகள் பலர் பங்கேற்றனர்.

இப்போட்டியின் வெற்றியாளர்கள் பற்றிய விபரங்கள் வரும் (05-06-2020) அன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னோட்ட காணொளி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம்!

அதிராம்பட்டினம், ஜூன் 02
அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் - உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் புதுமனைத்தெரு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் 01-06-2020 அன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் இணைச்செயலாளர் என். அபூ தாஹிர் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி பில்டர்ஸ்  அசோசியேஷன் நிறுவனத்தலைவர் பொறியாளர் பி. செல்வகுமார் கலந்துகொண்டு, அமைப்பின் செயல்பாடுகள், துணைவிதிகள், தொழிலாளர்கள் நலன், உறுப்பினர் சேர்க்கை ஆகியவை தொடர்பாக விளக்கிப்பேசினார்.

முன்னதாக உறுப்பினர்கள் அனைவரும் தங்களைப்பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டனர். நிறைவில், ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹலீமுதீன் நன்றி கூறினார்.

Monday, June 1, 2020

அதிராம்பட்டினத்தில் 94 டிகிரி வெப்பம் பதிவு!

அதிராம்பட்டினம், ஜூன்.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 94.1 டிகிரி ஃபாரன்ஹீட் (34.5" C) வெப்பம் பதிவாகியது என சென்னை வானிலை மையம் இன்று (01.06.2020) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்பகுதியில், பகலில் கடும் வெப்பம் பதிவாகிய நிலையில், இரவில் காற்று வீசி வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் (39.60"C) வெப்பம் பதிவாகியது. 

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரம்!

அதிராம்பட்டினம், ஜூன் 01
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மார்ச் மாத மாதாந்திர சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்...

பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் போக்குவரத்து தொடக்கம்: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 01
பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (01.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மண்டலத்திற்குட்பட்ட பொது போக்குவரத்து இன்று (01.06.2020) தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் ரயில் நிலையம், கரந்தை தற்காலிக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (01.06.2020) முதல் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரிலிருந்து கோயம்புத்தூருக்கு ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் உட்பட ஏழு மாவட்டங்கள் ஒரு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல அனைத்து வகையான போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவருக்கும் உடற்வெப்ப பரிசோதனை செய்தல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைசுத்திகரிப்பான் பயன்படுத்துதல், போக்குவரத்து வாகனங்கள் மற்றும் நிலையங்களில் கிருமிநாசினி தெளித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கீழவாசல் டபீர்குளத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்திடவும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும் அறிவுறுத்தினார்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, டபீர்குளம் நியாய விலைக் கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டார். அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் ரவீந்திரன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக எஸ்.புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்பு!

பட்டுக்கோட்டை, ஜூன் 01
பட்டுக்கோட்டையில் புதிய டிஎஸ்பியாக எஸ்.புகழேந்தி கணேஷ் திங்கட்கிழமை பொறுப்பேற்றார்.

இவர் இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் இருந்து மாற்றலாகி இங்கு வந்துள்ளார். 

அதிராம்பட்டினத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இன்று திங்கட்கிழமை காலை இயக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாநில பேருந்து போக்குவரத்தை இன்று 01.06.2020 முதல் இயக்கலாம் என்று அரசின் அறிவிப்பை அடுத்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் பாயின்ட் டூ பாயின்ட் அரசுப் பேருந்தில் பட்டுக்கோட்டைக்கு பயணம் மேற்கொண்ட பயணிகளை சானிடைசர் மூலம் கைகள் சுத்தம் செய்து, பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் பேருந்தினுள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனரா? பேருந்துக்குள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயமோகன், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முகமது அசாருதீன், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் உள்ளிட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பேருந்தில் மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.