.

Pages

Thursday, October 9, 2014

அதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு !

'பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உணவு உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்க வேண்டும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படைசூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும். நல்ல நட்பு - ஒற்றுமை - மத நல்லிணக்கம் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக மாற்று மத அன்பர்களையும் அழைத்து இலை விருந்து உபசரிப்பது உண்டு.

நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது ?
1. திருமண வலீமா விருந்து
2. புதிய வீடு கட்டி குடிபோகும்போது வைக்கப்படும் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும்
6. பெருநாள் விருந்து
7. குழந்தை பிறப்பு

என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.

லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டினிலோ அல்லது திருமண மண்டபத்திலோ ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளை, உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்காக உபசரிக்கப்படும்.

ஊரிலே 'கலரி சாப்பாடு' என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்காரன் - எங்கள் குடும்பம் !?, எங்களுக்கு வேண்டியவர், பிற மதத்துக்காரன் என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர்/நால்வர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.

அஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அதிரையர் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச்சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற இறைச்சி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியாணம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...

மற்றொறு வகையாக பிரியாணி ! நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச்சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிற பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். பிற ஊர்களுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு டேஸ்டாக இருக்கும். கூடுதல் இணைப்பாக துண்டுகளிட்ட பொரிச்சகோழி, வெங்காயத்தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவை இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

தால்ச்சா !  இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.

இனிப்பு வகைகளாக...
1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி
2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3. மம்மி கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி
5. பேரிட்சை - தக்காளி பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
6. பிரட் ஸ்வீட்

ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி விருந்தில் இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும். கை துடைக்க பேப்பர்களும் இடம்பெற்றிருக்கும். :)

மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லுமளவிற்கு, இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து ( அன்பைக் ) கொட்டுவார்கள்.

வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைய்ங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !

என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...

என்ன சகோதரர்களே !

உங்களுக்கும் அப்படி ஒலித்ததா என்ன !?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல சிந்திக்கபட வேண்டிய ஓன்று. உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாக கருதப்படும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் இப்போதிலிருந்து போட்டு வைப்போம். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.

சேக்கனா நிஜாம்
இது ஒரு மீள்பதிவு !

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நான்கு பாக்கட் தண்ணீர், சஹானில் பிரதிபலிப்பு ஆறு பாக்கட் மாதிரி ‎தெரியுது.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் வராஹ்....

    நிஜாம் காக்கா இன்னைக்கு ஊர்ல அதிகாமன நிக்காஹ் போல அதான் இப்படி ஒரு பதிவா...

    என்ன சஹன் சாப்பாட ஒரு வெட்டு வெட்டியாட்சா பிரியாணியா இல்ல அஞ்சு கறியா....

    ReplyDelete
  3. நிஜாம் அண்ணே....ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ....உங்க ஊரு விருந்தை....ஒருமுறை டிஎன்டிஜே நடத்திய ஈத் பெருநாள் சந்திப்பில் கலந்து கொண்டேன் .பரோட்டா கறி குருமா என அசத்தலாக இருந்தது .அதை விட அன்பாகஉஉபசரித்த உங்கள் ஊர் மக்கள் .....மற்றபடி பிரியாணி, அஞ்சு கறி விருந்தில் பங்கேற்றதில்லை .....இன்ஷா அல்லாஹ் காத்திருக்கிறேன் ....

    ReplyDelete
  4. இளம் செட்டு வாலிபர்கள் மறைத்து கொண்டு போகும் ஊருகாவை மறந்து விட்டீர்கள் , போங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.