.

Pages

Saturday, November 1, 2014

தண்ணீ புல்லா ஏறிடிச்சீங்க, இப்போ மெதுவா மெதுவா இறங்குதுங்க [ படங்கள் இணைப்பு ]

வடகிழக்கு பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பு, காட்டுக் குளத்தை ஒட்டி இந்த ஆழ்துளை கிணறு அதிரை குடிநீர் பயன்பாட்டிற்காக போடப்பட்டதாகும். பம்பிங் அறையின் அடித்தளத்தை சாலையின் மட்டத்திற்கு உயர்த்தி மீதம் உள்ள குகைபோல் காட்சியளித்த கீழ் அடித்தளத்துக்கு குளத்து மண்ணை போட்டு மூடி விட்டனர்.

தற்போது வடகிழக்கு பருவம் ஆரம்பித்த நிலையில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகின்றது, நமதூர் பேரூர் நிர்வாகம் முயற்சி, இதன் விளைவாக சி.எம்.பி வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது.

அதிரையில் உள்ள எல்லாக் குளங்களும் நிரம்பனும் என்ற நோக்கத்தோடு இந்த காட்டுக் குளமும் நிரம்பி விட்டது.

காட்டு குளத்துள்ளே தண்ணீ புல்லா ஏறிடிச்சீங்க,
பம்பிங் அறையின் அடியில் இட்ட  மண் மெதுவா மெதுவா இறங்குதுங்க.

மீதி, இதில் உள்ள  புகைப்படங்ககளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.





குறிப்பு:-
குளத்தின் நீர்மட்டம் சாலையை தொடும் அளவுக்கு வந்து விட்டது, அருகில் சிறார்களுக்கான மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம், மேலும் இதனருகில் குடியிருப்பு வீடுகளும் உள்ளன சிறார்கள் புழங்கும் இடமாகவும் இருக்கின்றது. ஆகவே, பொதுமக்களும், இவ்வழியே செல்லும் மக்களும், இப்பகுதியில் குடியிருப்பவர்களும் மிகுந்த கவனத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.

துபாயில் பேட்டரியில் இயங்கும் பசுமை பேருந்து அறிமுகம் !

துபாய் : சாலை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் பேருந்துகள் அமீரகத்தில் இயங்கி வருகிறது. வழக்கமாக எரிபொருள் மூலம் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளிலிருந்து வெளிப்படும் புகையினால் சுற்று சூழல் மாசுபடுகிறது. புகையை கட்டுப்படுத்தும் வகையில் பேட்டரி மூலம் இயங்கும் பசுமை பேருந்துகளை நகரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நவீன தொழில் நுட்பத்துடன் பேட்டரியில் இயங்கும் பசுமை பேருந்துகளை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில், 200 கிலோ மீட்டர் வரை இயக்கலாம். பேருந்தின் பேட்டரியை 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை ரீஜார்ஜ் செய்து கொள்ளலாம். பசுமை பேருந்துகள் சோதனை ஓட்டமாக விரைவில் நகரில் பயணிக்க இருக்கிறது.

Source : Gulfnews

செடியன் குளத்தை நேரடியாக ஆய்வு செய்த அதிரை பேரூராட்சி நிர்வாகம் !

செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை ஆகியோரை சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் நேரடியாக செடியன் குளத்திற்கு சென்று ஆய்வை மேற்கொண்டது.

இதில் பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, செயல் அலுவலர் முனியசாமி, தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் துணை தலைவர் PMK தாஜுதீன், 16 வது வார்டு உறுப்பினர் N.A முஹம்மது யூசுப், 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்தீப், திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் நிர்வாகிகள், TIYA நிர்வாகிகள் உள்ளிட்டோர் செடியன் குளத்தை பார்வையிட்டனர்.

பொதுவாக செடியன் குளத்திற்கு ஆற்று நீரை கொண்டு வருவதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது வழிமுறை சிஎம்பி வாய்க்கால் மூலம் ஆற்று நீரை கொண்டுவருவது. இது வழமையாக பின்பற்றப்படுவது. இந்த வழிமுறை மூலமே கடந்த காலங்களில் செடியன் குளத்திற்கு சிஎம்பி வாய்க்காலிலிருந்து மகிழங்கோட்டை பெத்தான் குளம் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலப்போக்கில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை, அரசியல் சூழல், கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ஆர்வலர்கள், வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் வருவதில் கடந்த இரண்டு வருடங்களாக தடை ஏற்பட்டது.

மற்றொரு வழிமுறையாக, வீணாக கடலில் கலக்கும் ஏரி நீரை மோட்டார் பம்பிங் மூலம் குளத்திற்கு கொண்டுவருவது. குறிப்பாக ஏரியிருந்து நிரம்பி வழியும் நீரானது பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, பள்ளி ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலையோரத்தின் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ள வாய்க்கால் வழியாக கடலுக்கு சென்று வீணாக கலக்கிறது. எதற்கும் பயன்படாமல் வீணாக கடலுக்கு செல்லும் நீரை, வாய்க்காலிலிருந்து குளங்கள் வரை செல்லும் பாதையை சீரமைத்து செடியன் குளத்திற்கு மோட்டார் பம்பிங் மூலம் நீரை கொண்டு வரலாம்.

இது குறித்து அதிரை வாழ் சமூக ஆர்வலர்களின் கவனத்துக்கு எடுத்துசெல்லும் விதமாக அதிரை நியூஸில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

களத்திலிருந்து நூவன்னா

செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு TNTJ அதிரை கிளையினர் பேரூராட்சியிடம் கோரிக்கை !

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்ந்து வர உதவியாக இருந்துள்ளது. மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இந்தப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடும் பலருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை ஆகியோரை பேரூராட்சி அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி, கிளை பொறுப்பாளர்கள் பீர் முஹம்மது, SP பக்கீர் முஹம்மது, M.I. அப்துல் ஜப்பார், AKS நவாஸ், MKM ஜமால் முஹம்மது, சிக்கந்தர், சேக்தாவூது, ராஜிக் ஆகியோர் சென்றனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...



களத்திலிருந்து நூவன்னா

தற்கொலை செய்துகொண்ட மணி குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார் !

அதிமுக பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான  ஜெயலலிதா சிறையிலடைக்கப் பட்ட தகவல் அறிந்து அதிமுகவினர் பலர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். சிலர் அதிர்ச்சியில் மாரடைப்பில் காலமானார்கள்.

ஜெயலலிதா கைதால் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 193 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட உயிரிழந்தவர்களில் நமதூர் அதிரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் M. மணி (வயது45),யும் ஒருவர். இவர் தஞ்சை ஆற்றின் பாலத்தின் தடுப்புசுவர் மீது ஏறி, ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும். ஜெயலலிதா வாழ்க என்று கோஷமிட்டபடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று காலை அதிரைக்கு வருகை தந்த மாநில அமைச்சர் திரு. வைத்திலிங்கம் தற்கொலை செய்து கொண்ட மணி குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆழந்த இரங்கலை வருத்ததுடன் தெரிவித்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கும் ரூ. 3 லட்சம் நிதியுதவியை மணி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

களத்திலிருந்து நூவன்னா

மழை நீருடன் காட்சியளிக்கும் செடியன் குளம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். மிகவும் பழமை வாய்ந்த இவை வரலாற்று சிறப்பு மிக்கது. அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்ந்து வர உதவியாக இருந்துள்ளது. மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இந்தப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடும் பலருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குளத்தை சுற்றி அமைந்துள்ள பகுதியின் மழை நீர் குளத்திற்குள் வர துவங்கியது. தற்போது குளத்தில் முழங்கால் அளவில் காணப்படும் தண்ணீரில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர்.

குளத்திற்கு நீரை கொண்டுவர இரண்டு வழிமுறைகள் இருந்தும், அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும், பாரபட்சமில்லாமல் இதற்கான முயற்சியில் இவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர்.








முத்துப்பேட்டையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம் !

முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் வாழும் அனைத்து சமுதாய மக்கள் பயன்பாட்டிற்காக முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் துணை தலைவர் நெய்னா முஹம்மது தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொழில் அதிபர் மருத்துவர் யூ. லியாகத் அலி பைத்துல்மால் ஆம்புலன்சை மக்கள் பயன்பாட்டிற்காக அர்பணித்து வைத்தார். இவற்றை பைத்துல்மால் தலைவர் ஜே. இல்முல்லா சனூஃபர் பெற்றுகொண்டார்.

நிகழ்ச்சியின் சிறப்புரையை பைத்துல்மால் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அஷரப் அலி, அஸ் ஷஃபனா பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் பி எம் இப்ராஹீம் காசிமி, எச். முகைதீன் பகரீ ஆகியோர் ஆற்றினார்கள்.

முன்னதாக அறிமுக உரையை பைத்துல்மால் செயலாளர் ஏ. அப்துல் சலீம் நிகழ்த்தினார். வரவேற்புரையை பைத்துல்மால் பொருளாளர் ஏ.மீரா ஹுசைன் வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரையை ஜே. மாலிக் ரஹ்மான் வழங்கினார். நிகழ்ச்சியில் பைத்துல்மால் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆம்புலன்ஸ் சேவை தொடர்புக்கு:
88 83 00 23 33, 88 83 37 77 86, 98 42 67 16 07,

செய்தி மற்றும் படங்கள் : 
சூனா ஈனா, முத்துப்பேட்டை