அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் குடிநீரை பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து மறுநாள் காலை இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
இந்நிலையில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டதால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் சீராக வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இந்த பகுதியினர் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். பம்பில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய கோயமுத்தூருக்கு பம்ப் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் அளித்த உறுதியின்படி இன்று காலை வரை குடிநீர் சீராக வழங்கப்படவில்லை இதனால் அதிருப்தி அடைந்த இந்த பகுதியினர் அதிரை சேர்மன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் வெளியேறிவரும் குடியிருப்பு கழிவு நீரை தடுத்து வாய்க்கால் அமைத்து தருதல், பம்பிங் மூலம் ஆற்றுநீரை காட்டுக்குளத்திற்கு கொண்டு வர பைப் பாதை அமைக்க உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் ஏற்படும் நிர்வாக அலுவலர்களின் தாமதத்தை கண்டித்து போராட்டம் நடந்தது.
சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில் அதிரை சேர்மன் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், சமூக ஆர்வலர்கள் முஹம்மது இப்ராஹீம், ஜெஹபர் அலி, கவுன்சிலர் முஹம்மது யூசுப், சன் டீ முனாஃ ப், சகாபுதீன், அயூப், ஜாஹிர், மல்ஹர்தீன், சாகுல் ஹமீது, அனஸ், கமாலுதீன், சைஃபுதீன் உள்ளிட்ட அதிரை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதிரை காவல் நிலைய போலீசார் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி மற்றும் பேரூராட்சி பணிகள் உதவி இயக்குனர் தொலைபேசியில் அளித்த உறுதியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.