.

Pages

Tuesday, January 2, 2018

துபையில் 2 லட்சம் திர்ஹம் மதிப்புள்ள வைர நகைகளை ஒப்படைத்த இந்தியத் தொழிலாளியின் நேர்மைக்கு பாராட்டு!

அதிரை நியூஸ்: ஜன.02
துபை, அல் கிஸஸ் பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் 'வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால்' (Vinakatar Amana Motabato Lal) என்ற இந்தியர். இவர் தனது பணியின் போது ஒரு பையை கண்டெடுக்கின்றார். அதை திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி ஏனெனில் அதனுள்ளே தங்க வைர நகைகள் மின்னிக் கொண்டிருந்தன.

பையை மூடியவர் சலனங்களுக்கு ஆட்படாமல் உடனடியாக அல் கிஸஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனுள்ளே இருந்தது சுமார் 2 லட்சம் திர்ஹம் மதிப்புள்ள தங்க வைர நகைள்.

இந்தியத் தொழிலாளியின் நேர்மையை அங்கீகரிக்கும் விதமாக, அல் கிஸஸ் காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் யூசுப் அல் அதிதி அவர்கள் வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லாலை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழும் அன்பளிப்பும் வழங்கி கவுரவித்தார்.

துப்புரவு பணியாளராக இருந்தும் பேராசை கொள்ளாத மனிதனாக நடந்து கொண்ட அந்த சொற்ப வருமான தொழிலாளி வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால் அவர்களை சக இந்தியராக நாமும் மனமுவந்து பாராட்டுகின்றோம். நேர்மையாளனுக்கு சோதனைகள் அதிகம் ஆனால் இறுதியில் அவன் தான் ஜெயிப்பான்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரக வாழ் இந்தியப் பெண்ணிற்கு காருக்குள் பெண் குழந்தை பிறந்தது!

அதிரை நியூஸ்: ஜன.02
அமீரகம், ஷார்ஜா வாழ் இந்தியப் பெண்ணிற்கு காருக்குள் பெண் குழந்தை பிறந்தது.

ஜனவரி 2 தேதி சிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பிற்கு நாள் குறித்திருந்த நிலையில் டிசம்பர் 30 ஆம் தேதி அன்றே சுகப்பிரசவமாக காருக்குள் பெண் குழந்தை ஷிஃபா பிறந்துவிட அமீரக பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளில் 2 ஆம் முறையாக இடம் பெற்றுள்ளது இக்குடும்பம்.

இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களது 3.5 வயது பெண் குழந்தை ஸபா குறைமாத பிரசவமாக 580 கிராம் எடையுடன் பிறந்ததுடன் சுமார் 10 அறுவை சிகிச்கைகளையும் சந்தித்து சுமார் 5 லட்சம் திர்ஹம் செலவையும் இழுத்துவிட்டதால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

டிசம்பர் 30 ஆம் தேதி காலையில் சற்றே பிரசவ வலி ஏற்பட ஷார்ஜாவிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் அஜ்மானில் அமைந்துள்ள மருத்துவ மனைக்கு அவர்களது காரில் சென்றுள்ளனர். மருத்துவ மனையை அடைய 5 நிமிடங்கள் இருக்கும் நிலையிலேயே வீல்... என்ற சத்தத்துடன் குழந்தை உலகை எட்டிப்பார்க்கும் போது தங்களது 3.5 வயது மகள் தான் அழுவதாக நினைத்துள்ளனர்.

கடந்த மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இந்தியாவிற்கு சென்றிருந்த போது அவரது உறவினர்கள் 'உன்னுடைய குழந்தை பிளைட்ல பிறந்து வாழ்நாள் முழுவதும் இலவச டிக்கெட்டில் பறக்கப் போகுது' என கலாய்துள்ளனர் ஆனால் என் மகள் காரை தேர்ந்தெடுத்துக் கொண்டாள் என பூரிக்கின்றார் தாய்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

2018 வருடத்தின் சூப்பர் மூன் இன்று மாலை பளிச்சென்று உதிக்கும் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன. 02
சூப்பர் மூன் (Super Moon) அல்லது கோல்டு மூன் (Cold Moon) என அழைக்கப்படும் நிலா இன்று பூமிக்கு அருகில் மிக நெருக்கமாக வருவதால் பளீர் என்ற வெளிச்சத்துடனும் அளவில் பெரிதாகவும் (Moon appears bigger & brightest) நீண்ட நேரத்திற்கு நம் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளது(Long Night Moon). இந்த சூப்பர் மூனை உலகின் பல இடங்களிலும் பார்க்கலாம்.

அமீரகத்தில் இன்று மாலை 6.13 மணியளவில் மிக நெருக்கமாக காட்சியளிக்கும். இந்த சூப்பர் மூன் கடந்த டிசம்பர் மாதம் முதல் படிப்படியாக விரிவடைந்து தெரிந்த நிலையில் இன்று அதன் உச்சபட்ச அளவை எட்டவுள்ளது. அதாவது அமீரகத்திற்கு மேல் சுமார் 356,570 கி.மீ தூர உச்சத்தில் நிலா இருக்கும் போது அதன் 99.8 சதவிகித ஒளியூட்டத்தை (illumination) காணலாம். இதுவே இந்த 2018 ஆம் வருடத்தின் மிக வெளிச்சமான நிலவொளியாகவும்.

இன்று இரவு பூமிப்பந்தின் மீது சுமார் 222,443எ மைல் அல்லது 357,987 கி.மீ சராசரி தூரத்தில் இலங்கும். இத்தகைய சூப்பர் மூன் 1948 வருடத்திற்கு பின் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்து அதற்குப் பின் இன்று (02.01.2018) தான் காணப்படவுள்ளது. இனி அடுத்த சூப்பர் மூன் 2034 வருடம் நவம்பர் 25 ஆம் தேதி தான் வரும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

சவுதியில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டினருக்கும் சவுதிகளுக்கு உள்ள சலுகை தரப்பட்டது

அதிரை நியூஸ்: ஜன.02
சவுதியில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டினருக்கும் சவுதிகளுக்கு உள்ள சலுகை தரப்பட்டது

சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு மணமக்கள் முன்பு நீதிமன்றங்களுக்குச் சென்று தான் திருமணம் செய்து கொள்ள முடியும் அதேவேளை சவுதி அரேபியர்கள் தங்கள் வீடுகளிலேயே முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதற்குரிய ஒப்பந்தப் பத்திரங்களை பூர்த்தி செய்து முறையாக பதிவு செய்தால் போதுமானது.

வெளிநாட்டு மணமக்களுக்கான புதிய சலுகையின்படி, இனி சவுதி அரேபியர்களைப் போல் வீட்டிலிருந்தவாறே முறைப்படி திருமணம் செய்து கொண்டு அந்த திருமண ஒப்பந்தப் பத்திரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து முதலாவது திருமணம் ஒன்று ஜித்தா மாநகரில் நடந்தேறியது. அத்திருமணத்தின் ஒப்பந்தப் பத்திரத்தின் நகல்கள் வைரலாக சமூக தளங்களில் வலம் வருகிறது.

முந்தைய நடைமுறைப்படி, சவுதிக்குள் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு மணமக்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துவிட்டு திருமண அப்பாயிண்மெட்டுக்காக நீண்டநாட்கள் காத்திருக்கும் நிலை நிலவி வந்தது இத்துடன் முற்றுப்பெற்றுள்ளது. அதேபோல் நீதிமன்றங்களும் வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

அதேவேளை சவுதியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையே நடைபெறும் கலப்புத் திருமணங்கள் மட்டும் 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சவுதி அரசின் சட்டத்தின் வழிமுறைப்படி நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றங்கள் வழியாகவே தொடர்ந்து நடைபெறும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பட்டுக்கோட்டை~காரைக்குடி இடையிலான ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு!

பட்டுக்கோட்டை, ஜன.02
பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே 74 கி.மீ. அகல ரயில் பாதை பணிகள் 95 சதவீதம் முடிந்த நிலையில், ரயில்கள் இயக்குவது குறித்து அறிவிப்பு நிகழாண்டிலாவது வெளியிடப்படுமா என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் வணிகம் செய்து வந்த காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களின் முயற்சியால் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை (திருவாரூரில் இருந்து சென்னைக்கு அதற்கு முன்பே ரயில் வழித்தடம் இருந்தது) 149 கிலோ மீட்டர் தொலைவுக்கு மீட்டர்கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் கண்டனூர் - புதுவயல்,  அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்பட பல்வேறு ஊர்களில் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டன. இந்த ரயில் பாதையில் 1902ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், நாடு முழுதும் மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகல பாதைகளாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான 149 கிலோ மீட்டர் தொலைவிலான மீட்டர்கேஜ் ரயில்பாதையை அகல பாதையாக மாற்றுவதற்காக 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காரைக்குடி - திருவாரூர்  ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, அமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

இதில்,  முதல்கட்டமாக பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான 74 கிலோ மீட்டருக்கு அகல பாதை அமைக்கவும், ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், பாலங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டுக்கோட்டை முதல் பேராவூரணி வரை, பேராவூரணி முதல் ஆயிங்குடி வரை, அங்கிருந்து அறந்தாங்கி வரை, அங்கு தொடங்கி காரைக்குடி வரை என 4 பிரிவுகளாக அகல ரயில்பாதை பணிகள் நடைபெற்றன. இந்த பாதையில் 14 பெரிய பாலங்கள், 168 சிறிய பாலங்கள், சுமார் 35 லெவல் கிராசிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது

தற்போது ரயில்வே நிர்வாகத்தின் சார்பில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை, இரு தண்டவாளங்களின் இணைப்புகள் போன்றவை அதிநவீன வசதிகள் கொண்ட என்ஜின் மூலம் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

2012 ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டபோது, காரைக்குடி - திருவாரூர்  ரயில் போக்குவரத்து 3 ஆண்டுகளில் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்தியில் ஆட்சிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் திட்ட மதிப்பீட்டைவிட கால தாமதத்தால் செலவு உயர்ந்ததாலும் அமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், முதல்கட்டமாக பட்டுக்கோட்டை -காரைக்குடி போக்குவரத்தை தொடங்கி காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி, சென்னை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிகழாண்டிலாவது பட்டுக்கோட்டை -காரைக்குடி போக்குவரத்து தொடங்கப்படும் தேதியை ரயில்வே துறை அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ். பர்கத் தலைமையில், அலுவலகத்தில் டிச.31 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
 
அதிரை பைத்துல்மால் - டிசம்பர் மாத சேவை மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்:
 
 
 
 

Monday, January 1, 2018

அதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 ஆலோசனைக் கூட்டம் !

அதிராம்பட்டினம், ஜன.01
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-3 நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் எம்.அகமது அப்துல் மஹ்சின் தலைமை வகித்தார். கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் எடுத்துச்செல்லும் இஸ்லாமிய மார்க்கப் பிரசாரப் பணி, சமூகப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கூட்டத்தில் பங்குபெற்றோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். இக்கூட்டத்தில், TNTJ கிளைச-1 செயலர் ஹைதர் அலி, இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் அவ்ன் உள்ளிட்ட 25 பேர் கலந்துகொண்டனர்.
 

செந்தலைப்பட்டினம் முஸ்லீம் லீக் புதிய நிர்வாகிகள் தேர்வு !

பேராவூரணி, ஜன.01
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள செந்தலைப்பட்டினம் அல் மஸ்ஜீத் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி செந்தலைப்பட்டினம் தலைவராக கே.எஸ் அப்துல் ஹமீது, துணைத் தலைவராக வி.எஸ் கலீல் ரஹ்மான், செயலராக ஜி. உமர் நெய்னா, பொருளாளராக ஹாஜி கே.எம் ஹமீது சுல்தான், இளைஞர் அணி அமைப்பாளராக கே.எம்.எஸ் இக்பால், தொழிலாளர் அணி அமைப்பாளராக எஸ்.சவுக்கத் அலி, மாவட்ட பிரதிநிதியாக மு.மு.நு. முகமது சேக்காதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில், தஞ்சை மாவட்ட துணைச் செயலர் ஜே. பஷீர் அகமது, வல்லம் பேரூர் செயலர் ஏ.முகமது சித்திக், தஞ்சை மாநகர் செயலர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.