.

Pages

Wednesday, April 29, 2015

ஒரு மாதத்திற்குள் 24 மணி நேர நிரந்தர சேவை: பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் நாளை [ 30-04-2015 ] சாலை மறியல் போராட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அரங்க நாதன் தலைமையில் இன்று [ 29-04-2015 ] காலை 10 மணியளவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

பேச்சுவார்த்தையில் அதிரை பொதுமக்கள் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு அலுவலர்களிடம் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். இவற்றை கவனமாக கேட்டுக்கொண்ட பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அரங்க நாதன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அவர்கள் அளித்த உறுதியை அடுத்து அதிரை பொதுமக்களின் நியாமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்வதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் கலையரசன், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
 
 
 

அதிரை பேருந்து நிலையம் - பட்டுக்கோட்டை சாலையில் புதிதாக வாகன வேகத்தடுப்புகள் !

தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து சேர்மன்வாடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையை 800 மீட்டர் தூரத்தில், 7 மீட்டர் அகலத்தில் மேம்படுத்தும் விதத்தில் சுமார்  ₹ 1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை போடப்பட்டது.

இந்த சாலையை ஒட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும்,(  1 ம் நம்பர் ) தொடக்கப்பள்ளியும் ( 2 ம் நம்பர் )  உள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் நிகழும் விபத்துகளை தவிர்க்க வாகன வேகத்தடுப்பு அமைக்க அதிரை நகர அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் நெடுஞ்சாலைதுறை சார்பில் 1 ம் நம்பர்,  2 ம் நம்பர் பள்ளி அருகிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் சேர்மன் வாடி பகுதி ஆகிய இரண்டு இடங்களில் வாகன வேகத்தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிரை நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர் சிவக்குமார், தக்வா பள்ளி டிரஸ்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
 

பேச்சுவார்த்தையில் பங்கேற்க அதிரையர் புறப்பட்டனர் !

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
 
 
 
 
 
 
 

அதிரையில் தக்காளி மீன்கள் விற்பனை ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் அமலில் இருந்து வருவதால் விசை படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டு படகுகள், தூண்டில் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் மீன் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள கடலோரக்கிராமத்தில் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்ட சிகப்பு கலவாய் மீன்கள் அதிரை கடைத்தெரு மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சிகப்பு நிறத்தில் காணப்படுவதால் 'தக்காளி மீன்' என்ற பெயரில் உள்ளூர் வியாபாரிகள் அழைத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இந்த வகை மீன்களை 'ஹம்ரூ'  ( இன வகையை சார்ந்தது ) என்ற பெயரில் அழைப்பது உண்டு.

கிலோ ₹ 300 வரை விற்பனையானது. மீன் வியாபாரிகள் மொத்தமாக இவற்றை வாங்கிச்சென்றனர். மீன் வாங்கிச் செல்ல வந்த வாடிக்கையாளர்கள் சிகப்பு கலவாய் மீன்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
 

Tuesday, April 28, 2015

அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவை வேண்டி நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிரையர்கள் திரளாக பங்கேற்க முடிவு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் எதிர்வரும் [ 30-04-2015 ] அன்று நடைபெற இருக்கும் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பை அடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் தலைமையில் நாளை [ 29-04-2015 ] காலை 10 மணியளவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று மாலை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். இதில் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்ட முடிவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் நாளை காலை நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிப்பது எனவும், கூட்டத்தில் அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் நாளை காலை சரியாக 9 மணியளவில் அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிரை பள்ளிவாசல்களிலும் இது தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.
 
 

ஜித்தா சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு !

மேற்கு மாகாண இந்தியா ஃபெடர்னிடி போரத்தின் தமிழ் பிரிவு தலைவர் மஹ்பூப் ஷரீப் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்

"சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக தொண்டுகள் பலவற்றை இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம் பல வருடங்களாக செய்துவருகின்றது.

தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துவைப்பது, ஆரேக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஹஜ்ஜூடைய காலங்களில் இந்திய ஹாஜிகளுக்கு உதவுவது, இந்தியாவின் சமகால நிகழ்வுகளின் பிரச்சினைகளையும் தீர்வுகளைவும் பற்றி விவாதிப்பது என பல்வேறு தளங்களில் சேவைகளை செய்துவருகின்றது.

அதனடிப்படையில் மேற்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்ற நன்னோக்கில் சகோதரத்துவ சங்கமம் ஒன்றை இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் ஏற்பாடு செயதுள்ளது.

மக்கிடையே ஆரோக்கியம், விளையாட்டு போட்டிகள் குறித்த விழிப்புணர்வு,  குடும்ப உறவு மேம்பாடு குறித்த ஆலோசனை, இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என பல்வேறு தளங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் முகமாக  இந்த சகோதரத்துவ சங்கமம் அமையும்.

மேலும் இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் நலன் என அனைத்திலும் தமிழக மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இது நல்லதொரு வாய்;ப்பாகவும் அமையும்.

சகோதரத்துவ சங்கமம் வருகின்ற மே மாதம் 8 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணி முதல் இரவு வரை மக்கா ரோட்டில் உள்ள இம்தியாஸ் இஸ்திராஹா எனும் அரங்கில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனைவரும் வருகைதந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்."

இவண்
IFF ஊடகப்பிரிவு

வரதட்சணை பெற்றவரை பாராட்டிய ஊர்மக்கள் !

இன்றைய திருமண சந்தையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க, லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சமூக நிர்பந்தம் நிலவுகிறது. தங்களது பொருளாதார சூழலில், அதை நிறைவேற்ற முடியாது என நினைக்கும் பெற்றோர்கள், பெண் சிசுக்கொலை புரியும் அவலம் இந்த நிமிடம் வரை நிகழந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண் சிசுக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆண்கள் கூட, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வதில்லை என்பதுதான் கூடுதல் அவலம்.

‘சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புவோர், அதற்கான முயற்சியை முதலில் தங்களிடமிருந்து துவங்க வேண்டும்’ என்ற அடிப்படை சிந்தனை, பெரும்பாலான சமூக ஆர்வலர்களிடம் காணப்படுவதில்லை.

ஆனால், இதற்கு விதிவிலக்காக தனது திருமணத்தையே சமூக மாற்றத்திற்கான ஆரம்பமாக பயன்படுத்தி இருக்கிறார் அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம் பர்வாலா கிராமத்தைச் சேர்ந்த சுதேந்திரா ஆசாத்.

ஆசிரியரான இவருக்கு, கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் பெண் வீட்டாரிடம் அவர் தனக்கு வரதட்சணை வேண்டும் என கேட்டபோது, பெண் வீட்டார் அதிர்ந்தனர். ஆனால், வரதட்சணையாக அவர் கேட்ட பொருள் என்னவென்று தெரிந்ததும் அவரை உச்சிமுகர்ந்தனர் பெண்வீட்டாரும் அந்த ஊர் மக்களும். ஆமாம், தனது திருமணத்தில் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணையாக அவர் பெற்றது 1,000 மரக்கன்றுகள்.

அதை தனது ஊரிலும், மணமகள் அனிதா ஊரிலும் நடவு செய்து தங்கள் கிராமத்தை பசுமையாக்க முடிவு செய்திருக்கிறார்.

மாற்றம் என்பது மனிதரிடமிருந்து உருவாவதுதானே..

பாராட்டுக்கள் சுதேந்திரா ஆசாத்!

- ஆர்.குமரேசன்
நன்றி:விகடன்

அதிரையில் சாலை மறியல் அறிவிப்பு எதிரொலி: பேச்சுவார்த்தைக்கு கோட்டாட்சியர் திடீர் அழைப்பு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆதரவோடும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் எதிர்வரும் [ 30-04-2015 ] அன்று நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியது.

இது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஊர் முக்கிய பிரமுகர்கள் அதிரை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று போராட்டம் குறித்து தகவலை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் ஒலிபெருக்கி பொது அறிவிப்பு செய்யப்பட்டன. மேலும் துண்டு பிரசுரங்கள், வால் போஸ்ட்டர் மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய கிராம பஞ்சாயத்தார்கள் ஆதரவையும் நேரடியாக சந்தித்து பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை [ 29-04-2015 ] மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் - அரசு மருத்துவர்கள் - அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஊர் பொதுமக்கள் - காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவருக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய அழைப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோட்டாட்சியரின் பேச்சுவார்த்தை அழைப்பு கடிதம் வந்ததை அடுத்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில், சிறப்பு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருக்கும் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாகவும், இதில் அனைவரின் கருத்துகள் பெறப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.