.

Pages

Saturday, December 29, 2018

புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செலுத்த வற்புறுத்தக் கூடாது: டிஆர்ஓ அறிவுறுத்தல்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடனை உடனடியாகத் திரும்பச் செலுத்த வற்புறுத்தக் கூடாது என்றார் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல்.

ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு வங்கியாளர் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கடன்களை மறு சீரமைப்பது குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அனவாரி சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீதத்தின்படி கடன் செலுத்தும் கால அட்டவணையை மாற்றம் செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உடனடியாகக் கடனைத் திரும்பச் செலுத்த வற்புறுத்தக்கூடாது என்றார் அவர்.

கூட்டத்தில் ரிசர்வ் வங்கி பிரதிநிதி தியாகராஜன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் லெட்சுமி நரசிம்மன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஆர். வரதராஜன், முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)

அதிரை நியூஸ்: டிச.29
அதிராம்பட்டினம், பிலால் நகரைச் சேர்ந்த மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது அலி அவர்களின் மனைவியும், எஸ்.எம். தாஹா அவர்களின் கொளுந்தியாவும், இப்ராஹிம்ஷா அவர்களின் சகோதரியும், கமருதீன், முகமது உசேன் ஆகியோரின் தாயாருமாகிய ஜொஹ்ரா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (29-12-2018) சனிக்கிழமை காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, December 28, 2018

அமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தம்!

அதிரை நியூஸ்: டிச.28
அமீரகத்தின் விமான நிலையங்களிலிருந்து தென் இந்திய விமான நிலையங்களுக்கு இயக்கப்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து நேரடி சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

நடப்பிலுள்ள ஷார்ஜா - கொச்சி இடையே இடையான சேவைகள் எதிர்வரும் 2019 பிப்ரவரி 10 ஆம் தேதியுடன் முற்றிலும் நிறுத்தப்படுகின்றன.

முன்பதாக ஷார்ஜா - கொச்சி இடையே சேவைகள் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியுடனும், துபை - மங்களூர் இடையேயான சேவைகள் டிசம்பர் 5  ஆம் தேதியுடனும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி தென் இந்திய நகரங்களுக்கான சேவைகள் மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்கள் வழியாக மட்டும் டிரான்ஸிட் / கனெக்டிங் அடிப்படையில் தொடர்ந்து இயக்கப்படும்.

தற்போது துபை - மும்பை இடையே தினமும் 7 விமான சேவைகளும், துபை - டெல்லி இடையே தினமும் 4 விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சேவைகளை அனுசரித்து தென் இந்தியாவுக்கு கூடுதல் உள்ளூர் விமான சேவைகள் அதிகரிக்கப்படும் என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)

அதிரை நியூஸ்: டிச.28
அதிராம்பட்டினம், மேலத்தெரு வைத்தியர் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு. முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா அவர்களின் மருமகளும், மர்ஹூம் கே.சேக்தாவூது அவர்களின் மனைவியும், எம்.ஐ முகமது தம்பி, எம்.ஐ முகமது அஸ்ரப் ஆகியோரின் சகோதரியும், கிஷாமுதீன், முகைதீன் அப்துல் காதர், நிஜாமுதீன், ருக்குநூர்தீன், அசாருதீன் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மத் பீவி (வயது 56) அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (29-12-2018) சனிக்கிழமை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

விடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

பேராவூரணி டிச.28-
கஜா புயலில் பாதிக்கப்பட்டு விடுபட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு, ஏஐடியுசி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் எம்.சித்திரவேலு,
வி.ஜி.பாலு ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்கம் வி.ராஜமாணிக்கம், ஏஐடியுசி பொறுப்பாளர் கே.எஸ்.முருகேசன், மாதர் சங்கம் வி.சிவகாமி, சிபிஐ நகர துணைச் செயலாளர்
கே.சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழக மக்கள் புரட்சிக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன் வாழ்த்திப் பேசினார். சிபிஐ ஒன்றிய செயலாளர் டி.பன்னீர்செல்வம் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிவாரணம் கேட்டு விடுபட்டு, மீண்டும் மனு அளித்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை நேரில் சென்று விசாரித்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பட்டியலில் பெயர் உள்ள தகுதியான அனைவருக்கும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தலித் மற்றும் ஏழை மக்களுக்கு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு மக்களை பணம் கட்டச் சொல்லி தனியார் நிதி நிறுவனங்கள் வற்புறுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ப.காசிநாதன், ஜெயராஜ், சின்னத்தம்பி, சம்பத், சையது முகமது கனி, பாரதி வை.நடராஜன், வி.கோபால், எஸ்.கே.எம்.காசியார், எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.என். அமரேந்திரன், ரவி, கருணாமூர்த்தி, எம்.வேலுச்சாமி, வி.சந்திரன்  மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட நிறைவில் பேராவூரணி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


அமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு!

அதிரை நியூஸ்: டிச.28
அமீரகத்தில் ஜனவரி மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை குறைந்தது.

அமீரகத்தில் மாதந்தோறும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சில்லறை பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவது அறிந்ததே. இந்நிலையில் எதிர்வரும் 2019 ஜனவரி மாதத்திற்கான சில்லறை விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் காணப்படுபவை நடப்பு டிசம்பர் மாத விலை ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளது.
ஈ பிளஸ் - 1 லிட்டர் 1.81 திர்ஹம் (2.05)
சூப்பர் - 1 லிட்டர் 2.00 திர்ஹம் (2.25)
ஸ்பெஷல் - 1 லிட்டர் 1.89 திர்ஹம் (2.15)
டீசல் - 1 லிட்டர் 2.30 திர்ஹம் (2.61)

Source: Khaleej times
தமிழில்: நம்ம ஊரான்

அதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD அமைப்பினர்!

அதிராம்பட்டினம், டிச.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள வள்ளிக்கொல்லைகாடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி அபூர்வம் அம்மையார் (வயது 68). கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக இவர் வசித்து வந்த கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, உடல்நலம் பாதிப்படைந்து, அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். இதையடுத்து இவரது மகள் செல்வி தனது தாயின் இறுதிச்சடங்கு நடத்த முன்வருமாறு கிரசெண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) என்ற இரத்ததான கொடையாளர்கள் அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தலைமையில், அவ்வமைப்பைச் சேர்ந்த சமீர் அலி, ஆரிப், சாகுல் ஹமீது, சிராஜ், ஹாஜா, பேராவூரணி கனகராஜ் உள்ளிட்டோர் அபூர்வம் அம்மையாரின் உடலை சுத்தம் செய்து வள்ளிக்கொல்லை சுடுகாட்டுக்கு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்று இறுதிச்சடங்கை நடத்தினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் கூறியது;
புயலில் பாதிப்படைந்த அபூர்வம் அம்மையார் வசித்து வந்த வீட்டை புனரமைத்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், ஆம்புலன்ஸ் வழங்கி உதவிய அதிரை பைத்துல்மால் சேவை அமைப்புக்கு நன்றி. நாங்கள் இதை பப்ளிசிட்டிக்காக செய்யவில்லை. பாதிக்கப்பட்டவரின் சாதி, மதம் கடந்து நாங்கள் உதவுவதற்காக முன்வந்தோம். இறந்தவர் யாராக இருந்தாலும் அவரது இறுதிச்சடங்கு முழுமையாக நடக்கவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். என தெரிவித்தார்.
 
 
 
 
 
 

Thursday, December 27, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜனவரி நிறைவில் சோதனை ஓட்டம் (முழு விவரம்)

அதிராம்பட்டினம், டிச.27
கஜா புயலின் கோரத்தாண்டவம் காரணமாக டெல்டாவின் கடைமடைப் பகுதி அதிராம்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைத்து இருந்த 100 அடி உயர சிக்னல் கோபுரம் கீழே சாய்ந்து விழுந்தது. ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி பறந்து சேதமடைந்தது.

கஜா புயலுக்கு பின் சிறிது இடைவெளியில் மீண்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதில் வர்ணம் பூச்சு, மழை நீர் வடிகால், பயணிகள் கழிப்பறை கட்டுமானம், செப்டிக் டேங், தண்டவாளங்கள் இணைப்பு, டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்புச் சுவர், நடைமேடை தளம், மேற்படிக்கட்டு தளம், கூரை, கேட் கீப்பர் அறை மற்றும் கேட் அமைக்கும் பணி ஆகியவை நடைபெறுகின்றன.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தது;
'பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகளை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கஜா புயலின் காரணமாக ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதப்பகுதிகள் அனைத்தும் துரிதமாக சீர் செய்யப்பட்டு வருதாகவும், தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இந்த வழித்தடத்தில் முதல் கட்டமாக சோதனை ஓட்டத்தை வரும் ஜனவரி மாத நிறைவில் நடத்த இருப்பதாகவும், பின்னர், சிறப்பு ரயிலைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்த இருப்பதாகவும், அப்போது, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவார்' என்று தெரிவித்தது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 90 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய அனைத்து பணிகளும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து முடிந்துள்ளது.

3. கஜா புயலில் சேதமடைந்த அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 100 அடி உயர சிக்னல் கோபுரம் அதன் அருகில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை,  ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும், இதன் அருகே குடிநீருக்காக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது.

5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான தளம், நடைமேடை தடுப்பு சுவர், கழிப்பறை, செப்டிக் டேங் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1, பிளாட் பார்ம்-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பணி முடிந்துள்ளது.

7. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

8. ரயில் நிலையம் முகப்பு பகுதி அருகில் குடியிருப்பு கழிவு நீர், மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், ரயில் நிலையத்திற்கு செல்ல நுழைவாயில் வளைவு அமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியாளர், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது