.

Pages

Friday, March 29, 2019

தண்டவாளத்தில் புழுதி பறக்க சீறி வந்த ரயிலை கண்டு வியந்த பொதுமக்கள் (வீடியோ)

அதிராம்பட்டினம், மார்ச் 29
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இத்தடத்தில் ரயில்களை இயக்குவதற்கான முன்னோட்டமாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், சிறப்பு ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

அதிவேகமாக கடந்து சென்ற சிறப்பு ரயிலை கண்டு ரசிக்கவும், பிரமாண்டமாக காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தை பார்வையிடவும் பெண்கள், சிறுவர், சிறுமிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் ரயில் நிலையத்தில் திரண்டு இருந்தனர். அப்போது, சரியாக காலை 10.42 மணிக்கு தண்டவாளத்தில் புழுதி பறக்க சீறி வந்த ரயிலை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். கையசைத்து வழியனுப்பி வைத்தனர். செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு: ஒரு மாதத்தில் ரயில் சேவை தொடக்கம்!

அதிராம்பட்டினம், மார்ச் 29
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, இத்தடத்தில் ரயில்களை இயக்குவதற்கான முன்னோட்டமாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், சிறப்பு ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், சிறப்பு ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டத்தை பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர்,  பட்டுக்கோட்டையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு காலை 11.23 மணிக்கு சென்றடைந்தது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், தலைமை நிர்வாக அதிகாரி எல். சுதாகர்ராவ், திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டி, தலைமை பொறியாளர் இளம்பூர்ணம் மற்றும் பொறியாளர்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு சோதனையை நடத்தினர்.

ஏப்ரல் இறுதியில் இத்தடத்தில் ரயில் சேவை தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தெற்கு ரயில்வே அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கடந்த மார்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வரையிலான ரயில் பாதையில் உள்ள ரயில் நிலையங்கள், பாலங்கள், சிக்னல், கிராசிங், லெவல் கிராசிங் கேட்டுகள் ஆகியவற்றை ரயில்வே உயர் அதிகாரிகள் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 

பேராவூரணியை மீண்டும் தென்னஞ் சோலையாக மாற்றுவேன் - எஸ்.எஸ். பழனிமாணிக்கம்!

பேராவூரணி மார்ச்.29-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர் க.அன்பழகன் வரவேற்றார். கூட்டத்தில், தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியதாவது,
"கஜா புயலால் பாதிக்கப்பட்டு தென்னை விவசாயிகள் தவித்த போது, தென்னை வாரிய அதிகாரிகளை அழைத்தால், எவரும் செவிசாய்க்கவில்லை. காரணம் நம் கையில் அங்குசம் இல்லை. அதனால் யானையை அடக்க முடியவில்லை. அதிகார யானையை அடக்க, அங்குசத்தை (வாக்குகள்) தாருங்கள் என உங்களிடம் கேட்டு இங்கு வந்துள்ளேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், கல்விக்கடன், விவசாயக்கடன், சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தென்னை வளர்ச்சி வாரியம் உதவியோடு, இப்பகுதி தென்னை விவசாயிகள் கவலை தீரும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் மீண்டும் தென்னஞ் சோலைகள் பூத்துக்குலுங்கும். தென்னை மீண்டும் வளர்ச்சி பெறும்.

மக்களின் கவலை உணருபவன் தான் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். நவீன யுகத்தில் நாகரிக உடை அணியாமல் இப்படி இருக்கிறீர்களே என கேள்வி வந்தது. நான் அடிப்படையில் விவசாயி. விவசாயிகளின் பிரதிநிதி... நான் இப்படித்தான் இருப்பேன். இது தான் என்னுடைய இயல்பு" இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி,  என்.அசோக்குமார், வை.ரவிச்சந்திரன், என்.செல்வராஜ், தனம் கோ.நீலகண்டன், இரா.இராஜரெத்தினம், சுப.சேகர், வி.பி.ஜெயச்சந்திரன்,
காங்கிரஸ் நிர்வாகிகள் து.கிருஷ்ணசாமி வாண்டையார், பண்ணைவயல் சு.ராஜாத்தம்பி, ஆர்.சிங்காரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர்.சி.பழனிவேலு, வி.கருப்பையன், ஆர்.எஸ்.வேலுசாமி, ஏ.வி.குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இரா.திருஞானம், பா.பாலசுந்தரம், காசிநாதன், பன்னீர்செல்வம், சின்னத்தம்பி, திராவிடர் கழகம் வை.சிதம்பரம், மதிமுக உதயகுமார், வ.பாலசுப்பிரமணியன், மணிவாசகன், குமார், விடுதலை சிறுத்தைகள் கோட்டை அரசமாணிக்கம், அரவிந்த் குமார், இந்திய ஜனநாயக கட்சி ஜோசப், மனித நேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜெய்னுல் ஆபிதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மு.கி.முத்துமாணிக்கம் நன்றி கூறினார்.

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச்.29
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் முகாம் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொ) எம். முகமது முகைதீன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், சென்னை அல்கான்ஸ் டெக்னாலஜி நிறுவன அலுவலர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலை அந்நிறுவன எச்.ஆர் மேலாளர் அருண் நடத்தினார். இதில், கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவ, மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாட்டினை கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மைய அமைப்பாளர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் செய்திருந்தார்.


 

காதிர் முகைதீன் கல்லூரியில் ஜிஎஸ்டி கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம், மார்ச் 29
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில், ஜிஎஸ்டி ~ பொருளாதார விளைவுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொ) எம். முகமது முகைதீன் கருத்தரங்கை தொடங்கி வைத்து அறிமுக உரை நிகழ்த்தினார். துணை முதல்வர் எம்.நாசர் வரவேற்றுப் பேசினார். பட்டுக்கோட்டை ஆடிட்டர் ஹாபிஸ் அகமது, பேராசிரியர்கள் பி.சிலார் முகமது, ஏ.ஆஷிக் இக்பால், கே.செய்யது அகமது கபீர், எச்.சுலைமான், ஆகியோர் பங்கேற்று, ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள், அனைத்து நாடுகளிலும் இதனால் ஏற்பட்ட தன்மைகள், முன்னேற்றம், நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு, பயன் முழுவதும் நுகர்வோருக்குச் சென்றடைதல் குறித்து விவரித்தனர்.

முடிவில், பேராசிரியர் ஏ.ஜியாவுதீன் நன்றி கூறினார். இதில், பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

Tuesday, March 26, 2019

CBD சார்பில் 'தண்ணீர் சேமிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

மதுக்கூர், மார்ச். 26
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில், மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் 'தண்ணீர் சேமிப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை ராஜ பாக்கியம் தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மதுக்கூர் பேரூர் செயலர் எச். இம்தியாஸ் அகமது கலந்துகொண்டு தண்ணீரின் இன்றியமையாமை குறித்தும், தண்ணீரை பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதின் வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இதில், 70 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், மரங்களை வளர்க்கவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் உறுப்பினர் நூர் முகமது உட்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியர் தகுதித் தேர்வு பயிலரங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 26
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத்துறை சார்பில் பேராசிரியர் தகுதித் தேர்வு (SET / CSIR - NET) குறித்து ஒரு நாள் சிறப்பு பயிலரங்கம் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கணிதத் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ். ஜெ. அபுல் ஹசன், துணை முதல்வர் எம். நாசர், கணிதத்துறை பேராசிரியர் டி. லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிலரங்கில் திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் என். பிரகாஷ் கலந்து கொண்டு பேராசிரியர் தகுதித் தேர்வு குறித்து பயிற்சியளித்து பேசினார். இதில் 150 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.  அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிலரங்கு ஏற்பாட்டினை கல்லூரி கணிதத்துறை பேராசியர்கள் என்.வீரபாண்டியன், எஸ். அப்பாஸ், எம். சுமதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த முன்னாள் மாணவர்!

தஞ்சாவூர் மார்ச்.26-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே முன்னாள் மாணவரான டாக்டர் ஒருவர் தான் படித்த அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.

பேராவூரணி அருகே உள்ளது, பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியை பயின்றவர் டாக்டர் து.நீலகண்டன். பிரபல எலும்பு முறிவு மருத்துவரான இவர் தான் படித்த ஆரம்பப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். இவரது மனைவி புவனேஸ்வரி கணவரின் கனவை நனவாக்க ஒத்துழைப்பு தந்தார். இவரது மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ 2 இலட்சத்தில் பள்ளி வகுப்பறை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பணிகள் முடிவடைந்து சீரமைக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியைத் தத்தெடுத்து ரூ.2 லட்சம் செலவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, மேசை, நாற்காலி, வகுப்பறைக்கு டைல்ஸ், நூலக புத்தகங்களை வைக்க அலமாரி, கணினி  ஆகியவற்றை டாக்டர் து.நீலகண்டன் வழங்கினார். வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வகுப்பறைகளை சீரமைத்து தருவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வீரம்மாள் வரவேற்றார். டாக்டர் து.நீீலகண்டன் சீரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறையைத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், நாடிமுத்து, அம்பிகாவதி, வீரையன், ஜெயா, செல்வராணி, ரமேஷ், பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, துர்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் செ.ராமநாதன் நன்றி கூறினார்.