.

Pages

Tuesday, November 28, 2017

அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் செயல்படும் தனலட்சுமி வங்கியின் 91 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கிளை 35 ஆம் ஆண்டு விழா - வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை மாலை வங்கியில் நடைபெற்றது.

விழாவிற்கு வங்கி கிளை மேலாளர் வி. காமாட்சி தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் மீரா சாஹிப், சமூக ஆர்வலர்கள் அக்பர் ஹாஜியார், சைஃபுதீன் ஹாஜியார், கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக். கல்லூரி நிர்வாகி  என்.எம் ஜெஹபர் அலி  ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விழா முடிவில் வங்கி ஊழியர் எஸ்.ஏ அயூப்கான் நன்றி கூறினார்.

இவ்விழாவில் உதவி மேலாளர் டி. சுரேஷ், வங்கி ஊழியர்கள் பி. காதர் பாட்சா, கே. ரம்யா, பி.சண்முகம் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 

துபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிராம்-பஸ் இயக்கும் நேரங்கள் அறிவிப்பு (முழு விவரம்)

அதிரை நியூஸ்: நவ.28
துபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் மற்றும் பொது போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு

துபையில் அமீரக தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதால் அரசுத்துறை நிர்வாகங்களுக்கு நவ.30 முதல் டிச.3 ஆம் தேதிவரையிலான 4 நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது அறிந்ததே. இந்த 4 நாட்களும் துபையில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங்களில் மட்டும் வழமைபோல் கட்டணம் உண்டு.

4 நாட்களும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் எனப்படும் வாடிக்கையாளர் மையங்கள் திறக்கப்படாது.

துபை மெட்ரோ:
வியாழன், நவம்பர் 30:
ரெட் லைன், அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
கிரீன் லைன், அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை

வெள்ளி, டிசம்பர் 1:
ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டும் காலை 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை

சனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:
ரெட் லைன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
கிரீன் லைன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

துபை டிராம்:
வியாழன், நவம்பர் 30:
அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
வெள்ளி, டிசம்பர் 1:
காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
சனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:
அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

துபை பஸ்:
கோல்டு சூக் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.29 வரை
குபைபா (பர்துபை) பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.10 வரை
சத்வா பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 முதல் இரவு 11.35 வரை
தடம் எண் C01: 24 மணிநேரமும் சேவை வழமைபோல் நீடிக்கும்
அல் கிஸஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
அல் கோஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரை
ஜெபல் அலி பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

மேலும் விபரங்களுக்கு: 
RTA website https://www.rta.ae/wps/portal/rta/ae/about-rta/news-and-media/all-news/NewsDetails/service+timing+during+prophet+birthday+commemoration+day+and+national+day+holiday+2017

Sources: Gulf News & The National
தமிழில்: நம்ம ஊரான் 

துபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கான அறிவிப்பு !

ஐக்கிய அரபு அமீரகம்  தேசியதின விடுமுறை அன்று (டிசம்பர்-2,2017 - சனிக்கிழமை)  துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட மஹல்லாவாசிகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

அதுகுறித்த விபரம் வருமாறு:

சிறார்/சிறுமி பிரிவு
1) முதுகில் பந்து சுமந்து ஓடுதல் (Back Ball Race)
2) சாக்கு ஓட்டம் (Sack race)
3) லெமன் & ஸ்பூன் (Lemon in Spoon Race)

குழந்தைகள் பிரிவு
4) சாக்லேட் சேமிப்பு (Chocolate Collection)
5) பிஸ்கட் கவ்வுதல் (Biscuit Bite)
6) சிப்ஸ் சாப்பிடுதல் (Cheese Ball Eating)

பெண்கள் பிரிவு
7) நூல் கோர்த்தல் (Needle & Thread)
8) ஆப்பில் தோலுரித்தல் (Apple Peeling)
9) கூடையில் பந்து வீசுதல் (Basket & Ball)

ஆண்கள் பிரிவு
10) கூடையில் பந்து வீசுதல் (Basket &  Ball)
11) 100 மீட்டர் ஓட்டம் (Running Race)

அனைத்து தரப்பினர்
12) மிஸ்டு கால் (Missed Call)

போட்டி விதிமுறைகள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

காலை 9:00 மணி முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி விடும் என்பதால் பூங்கா வளாகத்தில் நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் முன்பதிவு (Registration) செய்து கொள்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இவண்,
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) துபாய் கிளை

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள் விடுதலை!

அதிரை நியூஸ்: நவ.28
46வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி 46வது அமீரக தேசிய தினம் கொண்டாடப்படுதை முன்னிட்டு துபை மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் சுமார் 1200 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அமீரக ஜனாதிபதியும் அபுதாபி எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில் அபுதாபி சிறைகளிலிருந்து 645 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்..

அதேபோல், அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமரும், துபை எமிரேட்டின் ஆட்சியாளருமாக ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் துபை சிறைகளிலிருந்து 606 கைதிகள் விடுதலையாக உள்ளனர்.

மேலும், ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவூது பின் சகர் அல் கஸிமி அவர்களும் 246 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் மொத்தமாக அமீரகத்தில் 1497 கைதிகள் விடுதலையாகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அதிரை பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.28
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, ரூ. 711 கோடி செலவில், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக,பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் இடையே உள்ள அகல ரயில் பாதையில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

தற்போது, பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முதல் மாளியாக்காடு ஊராட்சி பகுதி வரையிலான ரயில் பாதையில் ஜல்லிகள் கொட்டப்பட்டு, அதன் மீது ஸ்லீப்பர் கட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு, தண்டவாளங்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பகுதி வரையிலான தண்டவாளம் அமைக்கும் பணிக்காக ஸ்லீப்பர் கட்டைகள் டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு ஜெ.சி.பி இயந்திரம் உதவியோடு ரயில் பாதையில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இப்பணிகள் இன்னும் சில வாரங்களில் முழுமை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 

அதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவு ~ காலை 8.30 மணி நிலவரம்

அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த 3 நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திடீரென பலத்த காற்று வீசியது. அதிரையில் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. லேசாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மழை நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (நவ.28) செவ்வாய்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக லோவர் அணைகட்டில் 79.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 5.50 மி.மீ, பேராவூரணியில்  5 மி.மீ, மதுக்கூரில் 3.2 மி.மீ மழை பதிவாகியது.

அதிரை மீன் மார்க்கெட்டுக்கு தாளன் சுறா மீன்கள் வரத்து அதிகரிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தொழிலாக படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அதிரை கடலோரப்பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்களின் வலைகளில் தாளன் சுறா மீன்கள் அதிகளவில் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடைத்தெரு மீன் வியாபாரி முகைதீன் கூறியது;
'அதிராம்பட்டினம் கடலோரப்பகுதியில் இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான தாளன் சுறா மீன்கள் கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் இம்மீனை இப்பகுதியினர் விரும்பி வாங்கிச்செல்கின்றனர். சுமார் 500 முதல் 700 கிராம் வரை எடை கொண்ட ஒரு தாளன் சுறா மீன் ரூ. 50 லிருந்து ரூ. 70 வரை விற்பனையாகிறது' என்றார்.
 
 
 
 
 

அபுதாபி விமான நிலையத்தில் 1/2 மணி நேரத்தில் 4 நாட்களுக்கான டிரான்ஸிட் விசா !

அதிரை நியூஸ்: நவ.28
அமீரக, அபுதாபி விமான நிலையத்தில் 4 நாட்கள் தங்கும் டிரான்ஸிட் விசா 30 நிமிடங்களில் கிடைக்கும்

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதியில் புதிதாக ஒரு விசா கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே 'விசா ஆன் அரைவல்' கவுன்டர் ஒன்றும் ஏற்கனவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கவுன்டரில் அபுதாபி வழியாக டிரான்ஸிட்டில் செல்லும் பயணிகள் அல்லது அபுதாபிக்கு உள்ளே வரும் பயணிகளின் விசா விண்ணப்பங்களை பரிசீலித்து சுமார் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் விசா வழங்கப்படும்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கவுன்டரில் அனைத்து நாட்டு டிரான்ஸிட் பயணிகளுக்கு 4 நாட்களுக்கு அதாவது 96 மணிநேரத்திற்கு அபுதாபி உள்ளே பிரவேசிக்க விசா வழங்கப்படும். முன்பு குறிப்பிட்ட சில நாடுகளின் பயணிகளுக்கு மட்டுமே விமான நிலையத்தில் டிரான்ஸிட் விசா வழங்கப்பட்டது. மேலும் 96 மணிநேர டிரான்ஸிட் விசாவில் அபுதாபிக்கு வருபவர்கள் மீண்டும் அதே விசாவை சுற்றுலா விசாவாக மாற்றிக் கொண்டும் அதிகநாட்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.

இந்த புதிய 96 மணிநேர விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதையொட்டி எதிஹாத் விமான நிறுவனமும் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. எதிஹாத் விமானம் மூலம் பயணிக்கும் அனைத்து வகுப்பு டிரான்ஸிட் பயணிகளும் தேர்வு செய்யப்பட்ட 60 அபுதாபி ஹோட்டல்களில் 2 இரவுகளுக்கு முன்பதிவு செய்தால் 2 வது இரவு தங்குவதற்கு இலவசம் என அறிவித்துள்ளது.

பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு ஓர் இரவும், முதல் வகுப்பு பயணிகளுக்கு 2 இரவுகளும் ஹோட்டல் தங்கல் இலவசம். ஏர்பஸ் 380 ரக விமானத்தில் ரெஸிடென்ஸ் கேபின் ஆன்போர்டு வகுப்பில் பயணம் செய்யும் டிரான்ஸிட் பயணிகளுக்கு 'எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில்' 2 இரவுகள் தங்கிச் செல்ல இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்