.

Pages

Saturday, February 2, 2019

தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ.521.8 கோடி நிவாரணம்!

தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக  இதுவரை 521 கோடியே 81 இலட்சத்து 68 ஆயிரத்து 831 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2018 அன்று அதிகாலை வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கஜா புயலால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.1,70,00,000 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் முழுவதும் சேதமடைந்த 17,614 குடிசை வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.17,61,40,000 நிவாரண உதவித்தொகையும், பகுதியளவு சேதமடைந்த 54,668 குடிசை வீடுகளின்  உரிமையாளர்களுக்கு ரூ.22,41,38,800 நிவாரண உதவித்தொகையும், பகுதியளவு சேதமடைந்த 68,891 ஓட்டு வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.35,82,33,200 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 1,49,766 குடும்பங்களுக்கு ரூ.74,88,30,000 வாழ்வாதார உதவித்தொகையும், கஜா புயலால் உயிரிழந்த பசு, காளை, எருது, கன்று, ஆடு, கோழி மற்றும் இதர பறவையினம் உள்ளிட்ட 2,25,188 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,61,88,405 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் தென்னை மரங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்ட 49,285 தென்னை விவசாயிகளுக்கு ரூ.354,56,05,800 இழப்பீட்டு நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் நெல் மற்றும் இதர  வேளாண்மை பயிர்கள் சேதம் ஏற்பட்ட 1956 விவசாயிகளுக்கு ரூ.2,38,58,373 நிவாரண உதவித்தொகையும், வாழை மற்றும் இதர தோட்டக்கலை பயிர்கள் சேதம் ஏற்பட்ட 5,923 விவசாயிகளுக்கு ரூ.4,11,58,753 நிவாரண உதவித் தொகையும், கஜா புயலால் சேதமடைந்த நாட்டுப்படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,10,15,500  நிவாரண உதவித்தொகையும், விசை படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,60,00,000 நிவாரண உதவித்தொகை என தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக இதுவரை  521 கோடியே 81 இலட்சத்து 68 ஆயிரத்து 831 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இரவு, பகலாக நடந்துவரும் பணிகள் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.02
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறுப் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது.

காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தில், உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களாக இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இரவில் ஜெனரேட்டர் உதவியுடன் ரயில் நிலையத்தில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், சிக்னல் ரிலே, சிக்னல் கேபிள் புதைப்பது, பிளாட் பார்ம்-2 ல் மேற்கூரை மற்றும் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு 'அபராதம்' விதிக்கப்படும் என ரயில்வேதுறை அதிகாரிகள்  தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பணிகள் இரவிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயலின் காரணமாக அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சேதமடைந்த சிக்னல் கோபுரம் மற்றும் ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி துரிதமாக சீர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தஞ்சையில் ரூ.150 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை!

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்த மருத்துவமனை கட்டும் பணி முடிவடைந்து உபகரணங்களும் வந்து விட்டன. தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவிற்கு இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 8.3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 20 ஆயிரத்து 196 சதுர அடி பரப்பளவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இதில் இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மருத்துவ சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு, கதிரியக்க அறுவை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் சிகிச்சை பிரிவு, மருத்துவ ஆய்வகம், ரத்த வங்கி ஆகியவை செயல்பட உள்ளது.

இந்த கட்டிடம் மொத்தம் 5 மாடிகளுடன் 3 பிரிவுகளை கொண்டது. தரைதளத்தில் ரேடியாலஜிதுறை, ரத்த வங்கி, லேப், சமையல்கூடம், சலவைக்கூடம் ஆகியவை உள்ளன. முதல்தளத்தின் ஏ பிரிவு 56 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது. 2-வது தளத்தின் ஏ பிரிவு 34 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும், 3-வது தளத்தின் பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது. இதே போல் 4 மற்றும் 5-வது தளத்தின் பி பிரிவு தலா 40 படுக்கைகள் என மொத்தம் 290 படுக்கைகள் கொண்டது. இதில் 5 அறுவை சிகிச்சை மையங்களும் அடங்கும்.

இந்த மருத்துவமனையில் தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்கள் ரூ.80 லட்சத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ரூ.20 லட்சத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும், ரூ.50 லட்சத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதியும் இடம் பெற்றுள்ளது.

அதிரையில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை!

அதிராம்பட்டினம், பிப்.02
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுமனைத்தெரு பகுதியில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை பணி தொடங்கப்பட உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் 2018 - 2019 ன் (IUDM) கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், சேர்மன்வாடி தொடங்கி செக்கடிமேடு, புதுமனைத்தெரு வழியாக மரைக்கா குளம் செல்லும் சாலை வரையிலான 1000 மீட்டர் நீளத்தில் புதிதாக தார் சாலை போடும் பணி தொடங்கப்பட உள்ளது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில்  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (02.02.2019) துவக்கி வைத்தார்.

விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
2018-2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று (02.02.2019) முதல் 05.02.2019 வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகள், நீச்சல் போட்டி, வாலிபால் போட்டி, கூடைபந்து போட்டி, கபாடி, கைபந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், மேசை பந்து, பூப்பந்து ஆகியவை நடைபெறவுள்ளது.  இப்போட்டிகளில் 2178 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க.பாபு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) தேன்மதி, விளையாட்டு பிரிவு பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மல்லிபட்டினத்தில் மீனவ சமுதாய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு!

மல்லிபட்டினம், பிப்.02-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தஞ்சாவூர் மாவட்ட கடலோரக் கிராம மீனவ சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்திய வன உயிர் நிறுவனம், வனத்துறை, மீன்வளத்துறை, கடலோரக் காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் இணைந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்கும் கடல்பசு (ஆவுரியா) உள்ளிட்ட, அரசால் பிடிக்க தடை செய்யப்பட்ட அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கடல்பசு (ஆவுரியா) உதவித்தொகை திட்டம் இந்திய வன உயிர் நிறுவனம் மற்றும் வனத்துறை சார்பில் மாதம் ரூ 500 வீதம் 24 மாதங்களுக்கு ரூ 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான போட்டித் தேர்வை 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்டு எழுதினர்.

முன்னதாக, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் கே.மதுமகேஷ் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் எஸ்.குருசாமி கலந்து கொண்டு பேசுகையில், ''அபூர்வ வகை உயிரினங்களான கடல்பசுக்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அழிந்து வரும் நிலையில் உள்ள இதுபோன்ற கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார்.

பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் மோகன், கடலோரக் காவல்துறை ஆய்வாளர் சுபா, மீன் வளத்துறை ஆய்வாளர் கங்கேஷ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மீனவர் கிராமத்தலைவர் பேத்தையா, இந்திய வன உயிர் நிறுவன அதிகாரிகள் குழுவினர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் ருக்மிணி சேகர் நன்றி கூறினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் என்.குருசாமி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
 
 
 

மரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 80)

அதிரை நியூஸ்: பிப்.02
அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.க சீனி முகமது அவர்களின் மகளும், மர்ஹும் எம்.அலியார் அவர்களின் மனைவியும், மர்ஹும் எம். ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மாமியாரும், எம்.சேக் மைதீன் அவர்களின் தாயாரும், ஏ.பீர் முகமது, ஏ.அசாருதீன், ஏ.நசுருதீன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய கதிஜா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று ஆறுமுகக்கிட்டங்கித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, February 1, 2019

அதிரையில் நாளை (பிப்.02) மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம், பிப்.01
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பின் சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நாளை (பிப்.02) சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் இஷா வரை அதிராம்பட்டினம். ஏ.எல். ஜும்ஆ மஸ்ஜித் ( ஏ.எல். மெட்ரிக் பள்ளிக்கூடம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், சிறப்பு அழைப்பாளர் மவ்லவி. யூசுப் பைஜி, 'தமிழக தர்ஜுமாக்களில் காணப்படும் வழிகெட்ட கொள்கைகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

குறிப்பு: உரையின் இறுதியில் தலைப்பை ஒட்டி எழுப்பப்படும் கேள்விகளுக்கு அந்தந்த தர்ஜுமா மொழிபெயர்ப்புக்களிலிருந்தே ஆதாரம் காட்டி விளக்கம் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மவ்லவி. முஹம்மது நாசர், 'இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பது யார் யார் மீது கடமை?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)அமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
நிஜாம் 9597841980
அமீன் 9789350331