.

Pages

Friday, February 22, 2013

முத்துப்பேட்டை : லகூன் தீவில் சிறுவர்களின் லூட்டி !

முத்துப்பேட்டை கடல் பகுதி ஆசியாவிலேயே காணாத ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள லகூன் தீவுக்கு பெரிய வரலாறு உண்டு. இப்பகுதியில் அதிகளவில் கொடுவா, வெள்ளான், மடவா, இறால் போன்ற மீன் வகைகள் அதிகளவில் கிடைப்பதால், இப்பகுதி மீன்களுக்கு தனி மவுசு உண்டு.

முத்துப்பேட்டை சுற்றியுள்ள ஜாம்புவானோடை, செங்காங்காடு, முனாங்காடு, தில்லைவிளாகம், ஆசாத் நகர், பேட்டை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீன் பிடிக்க மோட்டார் படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு காலத்தில், பாய் மர படகுகள் மூலம் சென்று வரும் போது சுமார் 3 அல்லது 4 நாட்கள் ஆகும். தற்போது மோட்டார் படகு என்பதால் நள்ளிரவு போகும் மீனவர்கள் அதிகாலை வந்து விடுவதால் மீன் உயிருடன் மார்கெட்டில் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனவர்களுக்கு துணையாக அவர்களின் குழந்தைகள் சிறுவர்கள் உதவி செய்யும் வேலையில் வலைகளை சீர்படுத்துவது, படகுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை கவனிப்பது உண்டு. இது நாளடைவில் படகுகளை சிறுவர்களே இயக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில குறும்புக்கார சிறுவர்கள் தனது நண்பர்களுடன் படகுகளை இயக்கி கும்மாளம் அடிப்பதும், வேகமாக போட்டி போட்டு ஒட்டுவதும் இது வாடிக்கையாக மாறி விட்டது. இதனை காணும் சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சியில் பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மேலும், அலம் என்னும் கடல் முகத்துவாரத்துக்கு முன் உள்ள பகுதி சேறுபகுதி என்பதால் சிறுவர்களின் படகில் அடிக்கும் லூட்டியால் அந்த பகுதி சேறுகுளப்பாகி காட்சியளிப்பதால் மற்ற படகுகள் செல்ல இடையூறு ஏற்படுவதும், அப்படியே கவிழ்ந்தால் படகு சவாரி செய்யும் பயணிகள் சேற்றுக்குள் சிக்கி பலியாக வாய்ப்புகள் உள்ளன.  இது குறித்து, சுற்றுலா வந்த ஆசிரியர் தங்கபாபு மற்றும் நண்பர்கள் கூறியதாவது, சிறுவர்கள் படகுகளை இயக்குவது ஆச்சரியமாக இருந்தாலும் இது அவர்களது உயிரை உலை வைக்கும் செயலாக உள்ளது, இதனை காணும் என்னை போன்ற சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கலந்து பயணமாக உள்ளது. இதனை அரசு தடுக்க வேண்டும்.

என்றார். இப்படி சிறுவர்களின் சுட்டி குறும்பால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த செயலை அரசு தடுக்க முன் வருமா..? அல்லது எதையுமே விபத்துகள் சம்பவங்கள் நடந்த பிறகு தான் யோசிக்கும் அரசு இதிலும் அப்படி தான் நடந்து கொள்ளுமா..? என கூறிகிறார்கள் அப்பகுதி மக்கள்.

நன்றி : ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 
[ முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் ]
Photos Credit : Google

மதுக்கூரில் ‘ஹாரப் அல் நயீமி’ புதிய பள்ளி திறப்பு !

மதுக்கூரில் கடந்த [ 20-02-2013 ] அன்று புதன்கிழமை மாலை பெண்கள் பயானுடன் திறப்பு விழா கண்டது புதிதாக கட்டப்பட்ட ஹாரப் அல் நயீமி பள்ளி ! 
அடுத்த நாள் [ 21-02-2013 ] காலை சுமார் 10:30 மணிக்கு  பள்ளிவாசல் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த மர்ஹும் P.S.K.N.நூர்தீன் ராவுத்தர் , S.N.A நத்தர்ஷா ஆகியோர் நினைவு விழா மேடையில் ஜாமிஆ பள்ளிவாசல் துணை இமாம் மெளலவி M.முகம்மது அலி நூரி அவர்கள் இறை வசனம் ஓத நிகழ்ச்சி இனிதே தொடங்கியது, 

நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மஸ்ஜித பரிபாலன கமிட்டியின் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.மிப்தாஹுல் இஸ்லாம் சங்க முன்னாள் செயலாளர் சகோதரர் A.M. முகம்மது பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி M.முகம்மது முகைதீன் நூரி,மஸ்ஜித் நூர் பள்ளி இமாம் மெளலவி M.முகம்மது யூசுப் அவர்கள்,ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் சகோதர முகம்மது பாரூக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர் K.M.H.ஷாகுல்ஹமீது அவர்களும் இப்பள்ளிக்காக ஒழைத்தவர்களை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரியப்பள்ளிவாசலின் இமாம் மெளலவி S.M.முகம்மது யூசுப் அவர்கள் உரைநிகழ்த்தினார்.

உரைகளுக்கு மத்தியில் மதுக்கூர் அல்ஃபாஸ் கம்யூட்டர்ஸ் உரிமையாளர் சகோதரர் K.T.M.J.நிசார் அகமது அவர்களின் முயற்சியில் உருவான பள்ளிவாசல் திறப்புவிழா சிறப்பு மலரை ராசல்கைமா அரபியர் சகோதரர் ராஷித் ஹாரப் சாலம் அல் நயீமி அவர்கள் முதல் பிரதியினை  வெளியிட நமதூர் ஜமாத் தலைவர் சகோதரர் PSKA அமானுல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

சிறப்புரையாக மெளலவி M.சேக் முஹ்யித்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இறுதியில் மிப்தாஹுல் இஸ்லாம் சங்க இணைச்செயலாளர் சகோதரர் R.செய்யது சலீம் மெளலானா அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுப்பெற்றது.

நன்றி : த.மு.மு.க - மதுக்கூர்

தினத்தந்தி செய்தி : அதிரை பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்பட வில்லை !

கடந்த [ 20-02-2013 ] அன்று வெளியான தினத்தந்தி நாளிதழிலில் அதிரை பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டப்படவில்லை என்றும், புதிய பேருந்து நிலையம் உருவாக்க மத்திய மந்திரி பழனிமாணிக்கம் அவர்கள் ரூபாய் 38 இலட்சம் ஒதுக்கி உள்ளதாகவும் அதற்காக பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்ததாகவும் அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.


குழந்தை வளர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ?


குழந்தை வளர்ப்பு என்பது உண்மையில் ஒரு தனிக்கலை. கல்லூரிகளில் பாடமாக வைக்கும் அளவிற்கு நிறைய விசயங்களை உள்ளடக்கியது. குழந்தை பிறந்ததில் இருந்து அது நன்றாகப் பேசத் தொடங்கும் வரை, ஒவ்வொரு தாயும் தன் குழந்தை மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதில் உள்ள சிரமங்களை குழந்தை பெற்று, வளர்ப்பவர்கள் மட்டுமே அறிவார்கள். அதுவும் புதிய தாய்மார்கள் படும் சிரமம் ஏராளம். என்ன ஆயிற்று, ஏன் இப்படி, என்ன செய்யலாம் என்று விடை தெரியாமல் தடுமாறும் சந்தர்ப்பங்கள் நிறையவே வரும். பெரியவர்களை துணைக்கு வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தைரியமாக இருப்பார்கள்.

தனியே வெளிநாடுகளில் இருக்கும் தாய்மார்களுக்கு சிரமங்கள் அதிகம். ஒவ்வொன்றிற்கும் மருத்துவரிடம் ஓட வேண்டிய சூழல் வரும். சில அடிப்படை விசயங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்தினால், டாக்டரிடம் தொடர்ந்து செல்ல வேண்டிய நிலையை குறைக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில் தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை மாறாக பெரியவர்களிடம்  ஆலோசனை கேட்டால் மற்றும் துணையுடன் மட்டுமே குழந்தைகளை வளர்க்க முடியும்.

பரிந்துரை : மான் A.ஷேக் [ கனடா ]
நன்றி : தளிகா 

Thursday, February 21, 2013

[ 5 ] டீக்கடை சந்திப்பு !


                   
அஸ்ஸலாமு அலைக்கும் என்ன சாதிக். சௌக்கியமா இருக்கீங்களா..? ஆளையே பாக்க முடியல. அன்னக்கி ராலு வாங்கி கொடுத்துட்டு இந்தா வந்துரெண்டு சொல்லிப்புட்டு போன ஆளு திரும்பி வரவே இல்லே..!

வ அலைக்கும் சலாம் சலீம். நீங்க எப்புடி இருக்கீங்க. வருத்தப்படாதிங்க. அன்னக்கி ரேசன் கடைவரைக்கும் போய் இருந்தேன். நம்ம தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி தொடங்குறாங்கலாம் மாசம் எழுவது ரூபாதான் வருமாம். அதான் இந்த கேபிள் டி வி க்கி பாரம் எழுதிக்கொடுக்கனும்ன்டு வூட்டுல சொன்னாங்க அதான் போய் நின்டு எல்லா வெவரமும் எழுதிக்கொடுத்துட்டு வரும் போது லொகருக்கு பாங்கு சொல்லிட்டாங்க. தொழுதுட்டு அப்புடியே வூட்டுக்கு போயிட்டேன். வேற ஏதும் நெனச்சிக்கிடாதீங்க. சரி...நீங்க எழுதி கொடுத்துட்டீங்களா..?

இப்ப நீங்க சொல்லித்தான் எனக்கே இதப்பத்தி தெரியிது சாதிக். ஊர் செய்தியெல்லா உங்ககிட்ட கேட்டாத்தான் நம்மதெரிஞ்சிக்க முடியிது. அப்பறம் இதுக்கு நாம் போய் நிக்க முடியாது. எம்மொவனத்தான் அனுப்பி வைக்கணும். எப்படியோ இனிமே நமக்கு கேபிள் டி வி லைன்லே கொஞ்சம் காசு மிச்சப்ப்படும்ண்டு சொல்லுங்க..ஹி..ஹி..ஹி..

அப்பறம் இன்னொரு செய்தி பரவலா ஜனங்க பேசிக்கிட்றது காதுலே உலுந்திச்சி சலீம். என்னான்டா முக்கியமான இடங்கல்லைஎல்லாம் சுகாதார வளாகமுன்டு பொதுக்கழிப்பிடம் கட்டுனாங்கல்ல அது கட்டி முடிஞ்சி இவ்வளவு நாலு ஆயிம் இன்னமும் தொறக்காம இப்புடியே போட்டு வச்சிக்கிராங்களே .அதெ எப்போதான் தொறக்க போறாங்களாம் உங்களுக்கு எதுவும் தெரியுமா..?

ஆமா இப்போதான் எனக்கும் ஞாபகம் வருது சாதிக். வர்ற வழிலே அதப்பத்திதான் பேசிக்கிட்டு நின்டாங்க. என்னாண்டு தெரியல கட்டி போட்டுட்டு கண்டுக்காம் சும்மா இருக்காங்க. ஏதோ காரணத்துனாலேதான் இப்புடி இருக்காங்க இதே சீக்கிரமா தொறந்து வச்சிட்டான்கண்டா நல்லது. எத்தனையோ வூட்டுலே டாய்லட் வசதி இல்லாதவங்களுக்கு .இது ரொம்ப உதவியா இருக்கும்.

நீங்க சொல்றது சரிதான் சலீம். நம்ம ''அனைத்து முஹல்லா'' காரவங்களாவது பேரூராட்சியிலே போய் முரயிடலாம்ல.அதான் என்னாண்டு ஒன்னும் புரியல.

அப்பறம் சாதிக் செய்தி கேள்விப்பட்டிங்களா..? துபாயிலே இருக்கிற கீழத்தெரு முஹல்லா, மேலத்தெரு முஹல்லாவாசிகள் கூட்டம் போன வாரம் நடந்திச்சாம். என் தங்கச்சி மொவன் போன் பண்ணும்போது சொல்லிக்காட்டுனான். அவங்க அவங்க தெரு சார்பா நல்ல நல்ல திட்டமெல்லாம்.தீர்மானிச்சி பேசி இருக்காங்க. எல்லாம் நம்ம ஊரும் தெருவும் வளர்ச்சியடைய நல்லதுக்காகத்தான் பேசி இருக்காங்க.

அப்புடியா சலீம். நம்ம ஊரு புள்ளைங்க வெளிநாட்டுல பொழப்புக்காக போன எடத்துலேயும் ஆயிரத்தெட்டு பிரச்னைக்கு நடுவுலே நம்ம ஊரப்பத்தியும் தெருவப்பத்தியும் இந்த அளவுக்கு அக்கறையா ஒவ்வொரு காரியமும் செஞ்சிக்கிட்டு இருக்காங்களே உண்மையிலேயே பாராட்டனும் தெரியுமா..!

என்னத்த சென்ஜாலும் நம்ம வூரு காரவங்க ஏதாவது கொற சொல்லிக்கிட்டு தானே இருக்காங்க சாதிக். இப்புடி ஒவ்வொரு முஹல்லாவுளையும் நல்ல  திட்டங்கள  தீர்மானிச்சி நம்ம தெருவுலயும் ஊர்லயும் உள்ள கொறபாடுகள சரி சென்ஜாங்கண்டா இன்னும் நம்ம ஊரு முன்னேத்தமா போவும். அதுக்கு எல்லாரும் நாம  ஒத்துமையா இருக்கணும்.

சொல்றவங்க எதையும் சொல்லிட்டு போகட்டும்ண்டு அத பெருசா எடுத்துக்கிடாம சமுதாயத்துக்கு நல்லது செய்யனும்ன்டு நெனக்கிறாங்களே அது பெரிய விசயம்தானே சலீம். இனி வருங்காலத்துலே எல்லாத்துக்கும் ஒன்றுபட்டு நிப்பாங்க.  இப்போ எல்லா இளைய சமுதாயமும் நல்லா  படிக்கிறாங்க. உலகவிசயத்துலே கவனமா இருக்கிறாங்க. அதெல்லாம் போக போக சரியாய்டும். நீங்க உங்க வயசுலே எவ்வளவு கலுசரத்தனம் பண்ணுனீங்க எல்லாரும் அப்புடித்தான்.

சரி அப்பறம் என்னா செய்தி சாதிக். நா பேத்திய கூட்டிக்கிட்டு உம்மா வூட்டுக்கு போவனும். நேரமாச்சி. உங்ககிட்ட ஊரு செய்தி பேசுனாலே நேரம் போறது தெரியாது. போயிட்டு வரட்டுமா. !

அதிரை மெய்சா                        
                                                       

Wednesday, February 20, 2013

அதிரையில் பிஜே சொற்பொழிவு புரோஜெக்டர் மூலம் ஒளிப்பரப்பு !


சென்னை மண்ணடியில் கடந்த 17-2-13 அன்று நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் சகோ. பிஜே அவர்கள் "அப்சல் குருவிற்கு தூக்கு சரியா ?" என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு நமதூர் தக்வா பள்ளி அருகில் நேற்று [ 19-2-13 ] இஷா தொழுகைக்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் திரளாக மக்கள் கலந்து கொன்டனர் !



புகைப்படங்கள் மற்றும் செய்தி : சகோ. அப்துல் ரஹ்மான்

மத்திய அரசை வலியுறுத்தி காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் கோஷம் !

இன்று காலை 10 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்பு JAC, AUT, TNGCTA, MUTA, TANTSAC  ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் பேராசிரியர்கள் மத்திய அரசை வலியுறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடுதல், பிற்போக்கான உயர்கல்வி மசோதாக்களைக் கைவிடுதல், கல்லூரிகளில் ஆசிரியர் மட்டும் ஆசிரியரில்லாப் பணியிடங்களை நிரப்புதல், மக்களுக்கு எதிரான தாரளமயமாக்கல் கொள்கையைக் கைவிடுதல், சுயநிதிக்/ஒப்பந்த/கெளரவ ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 25,000/- வழங்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

காதிர் முகைதீன் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா !

காதிர் முகைதீன் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட கல்லூரி கலையரங்கின் திறப்பு விழா சிறப்பு துஆ-வுடன் செயலர்.ஹாஜி. K.S. சர்புதீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.  விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவர் A.அப்துல் சுக்கூர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முதல்வர் முனைவர் A. ஜலால் முனைவர் A.M.உதுமான் முகைதீன் பேராசிரிய பேராசிரியர்கள் அலுவலக ஆய்வகப் பணியாளர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். இப்புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவின் முடிவில் கல்லூரி முதல்வர் நன்றி கூறினார்.