.

Pages

Saturday, August 30, 2014

அதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் !

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளராக ஏழாவது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதிரையில் நேற்று நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே இனிப்பு வழங்கி, வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் நகர கிளையின் பொறுப்பாளர்கள் - வார்டு செயலாளர்கள், பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் : 
நூர் முஹம்மது ( நூவன்னா )

Friday, August 29, 2014

மரண அறிவிப்பு [ தொனா கானா முத்து மரைக்காயர் ]

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தொ.க நெ.ஷேக் தாவூது அவர்களின் மகனாரும் மர்ஹூம் தொ.க.முகம்மது முகைதீன்,மர்ஹூம் தொ.க.முகம்மது நூர்தீன் ஆகியோரின் சகோதரரும்   மர்ஹூம் துவர்பாக்கு என்கிற M.முகைதீன் அப்துல் காதர்,மர்ஹூம் தொ.க. முகம்மது பாசின் கா.செ.அ.பகுருதீன் ஆகியோரின் மைத்துனருமாகிய தொ.க.முத்து மரைக்காயர் என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

விரைவில் புதிய தோற்றத்தில் செக்கடி குளம் - [புகைப்படங்கள் இணைப்பு]

அதிரையின் குளங்களின் அடையாளமான செக்கடிக்குளம் விரைவில் புதிய தோற்றத்தில் காட்சி அளிக்கவுள்ளது.

அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக செக்கடிக்குளத்தை தூர் வாரி, பின்பு குளத்தின் ஓரங்களில் நடைபாதை அமைத்து அனவரும் நடைபயிற்சி செய்வதற்கு ஏதுவாக வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.




விதியை மதியால் வெல்வோம் !

மனிதன் தான் செய்யும் தவறுகளால் தனது வாழ்வில் ஏற்படும் நிலைமைகளுக்கு விதியின் மீது பழி போடுவது இயல்பாகிவிட்டது.  காலில் முள் குத்திவிட்டது என்றும் கல்,  காலை தடுக்கிவிட்டது என்றும் நிலைப்படி தலையில் இடித்துவிட்டது என்றும் கூறுவது மனிதனின் வழக்கம்.

உண்மையில் முள்ளோ, கல்லோ, நிலைப்படியோ தானாக வந்து மனிதனை காயப்படுத்துவதில்லை. மாறாக, தனது பாதைகளைப் பார்த்து நடக்கத் தெரியாத மனிதன்தான் தானே சுயமாக  முள்ளிலும் கல்லிலும் காலை வைத்து காயப்படுத்திக் கொண்டு பழியை திசை திருப்பிவிடுகிறான்.

குனிய வேண்டிய நேரத்தில் குனிந்தும் பணிய வேண்டியபோது பணியாமலும் நடப்பதால் நடுத்தலையில்  நிலைப்படியில் இடித்துக் கொள்கிறான். ஆழம் தெரியாமல் ஆற்றில் காலைவிடுபவன் ஆற்று வெள்ளத்தில் அடித்தே செல்லப்படுவான் . அது ஆற்றின் குற்றமல்ல; அந்த மனிதனின் குற்றம். படிக்கட்டுகளில் இறங்கும்போது பாசி வழுக்குமென்று பார்த்து இறங்காமல் வழுக்கி விழுந்த பிறகு  படிக்கட்டை குறை சொல்லலாமா ? இதே போல்தான் மனிதன் தனது தவறுகளினாலும்  கவனக்குறைவாலும் வாழ்வில்  ஏற்படும் இழப்புகளுக்கு  விதியைக் காரணமாகக் காட்டித் தனது தவறுகளில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறான்.

தங்களது வெற்றிக்கும் தோல்விக்கும் விதியைக் காரணமாகக் காட்டாதவர்களே உலகில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்கள். நோபல் பரிசு பெறுகிறார்கள்.

காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது என்பதை உணர்ந்து, காலத்தை சரிவர உணர்ந்தவர்களும் கடமையைக் கண் போலக் கருதிச் செய்தவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

நான் உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது நான் என்ன செய்வேன் என்றும் நான் கயிற்றைப் பிடித்தாலும் அது பாம்பாக மாறிவிடுகிறது நான் என்ன செய்வேன் என்றும் விதியின் கரங்களில் வாழ்வை ஒப்படைத்துவிட்டுப் புலம்பும்    பலரைப் பார்க்கிறோம். உப்பு விற்கப் போகும் போதும் மாவு விற்கப் போகும் போதும் புத்தியைப் பயன்படுத்தி அவைகளை பாதுகாப்பாக பைகளில் கட்டி வைத்து விற்கப்போனால் காற்றடித்தால்  என்ன? மழை பெய்தால் என்ன? முள் இல்லாத ரோஜா எந்த நாட்டிலும் பூத்ததாக சரித்திரம் இல்லை. முள் குத்தாமல் ரோஜாவைப் பறிக்கும் நுணுக்கத்தில்தான் மனிதனின் ஆற்றல் இருக்கிறது.

எந்த மனிதனும் காலம், செல்வம், சக்தி ஆகியவற்றை விரயம் செய்யக் கூடாது என்று புரிந்து கொள்ள வேண்டும். “ காலத்தை ஒரு போதும் குறை கூறாதீர்கள் ஏனென்றால் காலத்தை நான்தான் சுழலச் செய்கிறேன் என்று அல்லாஹ் அறிவுறுத்தி இருக்கிறான் “ என்று   பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஞாலம் கருதினுங் கை கூடும் காலம் 
கருதி இடத்தார் செயின் – என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார். ஒரு செயலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காலத்தை அறிந்து செய்யபப்டும் இடத்திற்கு ஏற்றபடி செய்தால் இந்த உலகமே உனது கையில் வந்து விடும் என்பது இந்தக் குறளின் கருத்தாகும்.

காலத்தின் மீது சத்தியமாக என்று சத்தியம் செய்து அல்லாஹ் காலத்தின் சிறப்பை சிந்திக்கத் தூண்டுகிறான். ஆகவே காலத்தின் மீது குறை காணாமல் மனிதன் தன்னில் உள்ள குறைகளை அறிந்து அவைகளைக் களைந்து  செய்ய வேண்டியவைகளை செய்தாலே வெற்றி கிடைக்கும் அதைவிட்டு விட்டு விதியின் மீது பழியைப் போடுவது வேடிக்கையானது.

அது போகட்டும் விதி என்று ஒன்று இருப்பது உண்மையா?
உண்மைதான். இறைவன் அவரவருக்கு விதிகளை தனது கைகளால் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். ஆனால் அந்த விதியை தனது நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மாற்றிக் கொள்ளும் முயற்சி மனிதனின் கரங்களில்தான்  ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

கவிஞர் அல்லாமா இக்பால் அவர்கள்
இறைவனிடத்தில் உனக்காக 
பல விதிகள் உள்ளன.
உனக்கு வேண்டிய விதி எது என்று 
நீ கேட்டுப் பெற்றுக் கொள் “  - என்று கூறுகிறார். து ஆ க்களும் பிரார்த்தனைகளும் நாம் செய்யும் தர்மங்களும் நற்காரியங்களும் புத்திசாலித்தனமும் இறைவனிடத்தில் இருக்கும்  நமது விதியை மாற்றும் வல்லமை படைத்தவை.

“ கருமத்தைச் செய்- பலனை எதிர்பாராதே “ என்று பகவத் கீதையில் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒருவகையில் இந்த வார்த்தைகளும் விதிகளின் மீது பாரத்தை தூக்கிப் போட்டுவிட்டு உனது கடமை மற்றும் காரியங்களில் இருந்து வழுவியும் நழுவியும் செல்லாதே என்றே எச்சரிக்கிறது. நமது கடமைகளை  சரிவரச் செய்து கொண்டிருந்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்குமென்றே இதுவும்  பொருள் தருகிறது.

“கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கும்” என்று பைபிளின் வாசகங்கள் கூறுவதாக சொல்கிறார்கள். எதுவும் நமது மடிகளில் தானாக வந்து வீழ்ந்து நமது பெட்டகங்களை  நிரப்பி விடாது நமக்கு வேண்டியவைகளைத்தேடி அவைகளுக்காக  நாம் முயற்சி செய்ய வேண்டுமென்றே அவ்வார்த்தைகள் நமக்கு உபதேசிக்கின்றன.

காஞ்சிக்கு சென்று காலாட்டினால் கஞ்சி கிடைக்குமென்று ஒரு சொலவடை உண்டு. இதன் உண்மைப் பொருள் காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது – அங்கு போய் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொண்டு  காலால் செய்கிற நெசவு வேலைகளைச்  செய்தால் சோற்றுக்கு வழி கிடைக்கும் என்பதுதான். ஆனால் காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டுத்  திண்ணையில் காற்றாட உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தால் சோறு கிடைத்துவிடுமா என்பதை சிந்திக்க வேண்டும்.

விதைக்கிற காலத்தில் வீதிகளில் சுற்றிவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு  போகிறவனுக்கு புல்லும் பூண்டும் கூட கிடைக்காதே!

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வை நம்புகிறேன். அவனை நம்பி எனது ஒட்டகத்தை கட்டாமல் அவிழ்த்து விட்டுவிடுவதா அல்லது கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா என்று கேட்ட  ஒரு நபித் தோழருக்கு முதலில் உனது ஒட்டகத்தைப் பாதுகாப்பாக கட்டி வை ; அத்துடன் அல்லாஹ் மீதும் நம்பிக்கை வை என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் பதில் அளித்ததாக அறிகிறோம்.

விதி தொடர்பாக பல அறிஞர்களும் பல விளக்கங்களைத் தந்தாலும் ஒரு செய்தியை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விதி என்பது உண்மை என்று இருந்தாலும் அந்த விதியை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பது அறிவீலிகளின் செய்கையாகும்.

விதிகளை முன் கூட்டி அறிவிக்கும் சோதிடம் முதலியவைகளை நம்பி வாழ்நாட்களை வீணாக்கிவிடாமல் ,  விதிகளின் நாட்டம் என்பதை இறைவனின் நாட்டம் என்றே நம்ப வேண்டும். மாறாக விதி என்பதைக் காரணம் காட்டி சோம்பிப் போய் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு மூலையில் முடங்கிக் கிடப்பதும் முயற்சிகளை முறித்துப் போட்டுவிட்டு கையறு நிலையில் கதறுவதும் தவறு.

இந்தக் கணினி யுகத்தில் கூட சோதிடங்களை கணினியில் காது வைத்துக் கேட்கும் பத்தாம் பசலிகளைக் காண்கிறோம். சோதிடத்துக்காக ஒரு மென்பொருளே உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். நாளும் நட்சத்திரமும் முகூர்த்தமும் பார்க்காமல் திருமணங்கள் நாட்டில் நடைபெறுகின்றனவா? அப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் யாவும் வெற்றியளிக்கும் என்றால்  நாட்டில் இத்தனை விவாகரத்து வழக்குகள் ஏன்?

மகாகவி பாரதியார் , “ சோதிடம் தனை இகழ்” என்றார். பண்டித நேரு போன்ற மேதைகளுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. பெரியார், அண்ணா போன்றோர்  காலமெல்லாம் சோதிடத்தை நம்பி வாழ்வைத் தொலைப்பதை கண்டித்துப் பிரச்சாரங்கள் செய்தார்கள். “ மொரார்ஜியை நீங்கள் ஏன் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை ? “ என்று காமராஜரிடம் கேட்டபோது “ தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால் சோதிடத்தையும் சோதிடரையும் நம்பி நாட்டை நடத்துபவரிடம் நாட்டை ஒப்படைக்க நான் விரும்பவில்லை “ என்றாராம்.

தேவகவுடா பிரதமரானதும் நாமக்கல் சோதிடர் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு உங்களை அசைக்க  முடியாது என்று சொன்னாராம். அதனால் தன்னிச்சையாக தேவகவுடா எடுத்த முடிவுகள் அவரை சிலமாதங்களிலேயே ஆட்சியை விட்டு அப்புறப்படுத்தியது.

செவ்வாய் தோஷம் பிடித்தவர்கள்  என்று சொல்லப்படும் பெண்கள் தங்களுக்கு திருமணம்  ஆகாது என்று சோதிடர்கள்  சொன்னதைக் கேட்டு தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் நிரம்ப உள்ளன.

சோதிடப்பரிகாரங்களுக்காக தங்களின் நகைகளை இழந்த செய்திகளும் செய்தித்தாள்களில் வெளிவந்தன. சோதிடர்கள் சொன்னதை நம்பி பெற்ற தலைப் பிள்ளைகளை நரபலி கொடுத்தவர்களும் நாட்டில் இருந்தனர்.

தாமஸ் ஆல்வா எடிசன் , “ எனது ஆய்வு முயற்சிகளில் தோல்விகள் வரும்போது நான் மனமொடிந்து போவது கிடையாது; காரணம் எனது ஒவ்வொரு தவறான முயற்சியும் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படிக்கட்டு “ என்று சொன்னார். விழுவது விதியால் அல்ல; மீண்டும் எழுவதற்கே என்று எண்ண வேண்டும். எடுத்து வைக்கும் அடிகளில் கவனம் வேண்டும் . கூடவே இறைவனின் கருணையையும் கேட்டுப் பெற வேண்டும்.

ஆகவே, துன்பங்கள் துயரங்கள் வரும்போது   இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை. தோல்விகளை வெற்றிக்கான படிகளாக்கினால் வெற்றி நிச்சயம். அந்த மனநிலை வரும்போதும் வளரும்போதும் அங்கு விதிக்கு வேலை இல்லை.

முயற்சிப்போம் ! முன்னேறுவோம் !

உலக மொழிகளில் தட்டச்சு செய்து உலக சாதனை புரிந்த 8 வயது சென்னை சிறுவன்!


50 மொழிகளில் தட்டச்சு செய்து 8 வயது சென்னை சிறுவன் மஹ்மூத் அக்ரம் உலக சாதனை புரிந்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, இத்தாலிக், கொரியா, அரபிக், ஃப்ரெஞ்ச், ஹீப்ரு உட்பட சுமார் 50 மொழிகளில் தட்டச்சு (Typing) செய்து சாதனை புரிந்த சிறுவன் அக்ரமின் அபாரத் திறமையை அறிந்த, யுனிக் உலக சாதனைகள் (Unique World Records) அமைப்பு, பலர் முன்னிலையில் சிறுவனின் சாதனனையை உலகுக்கு காட்ட முன் வந்தது.

அதன்படி மகமூத் அக்ரம் கடந்த அகஸ்ட் 24 அன்று பஞ்சாபின் பதிண்டா (Bathinda) என்ற இடத்தில் நடைபெற்ற யுனிக் உலக சாதனைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூடியிருந்த அனைத்து மீடியாவின் முன்பும், மற்றும் விழாவிற்கு வந்திருந்த அனைவரின் முன்பாகவும் மகமூத் அக்ரம் 50 மொழிகளிலும் தட்டச்சு செய்து எல்லோரையும் வியக்க வைத்தார்.

இதையடுத்து ‘WORLD’S YOUNGEST MULTILINGUAL TYPIST’ என்ற சாதனையாளர் விருதினை யுனிக் வேல்ர்ட் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் அக்ரமிற்கு வழங்கியது.

Thursday, August 28, 2014

பட்டுக்கோட்டையில் வெடிகள் பறிமுதல் ! 2 பேர் கைது !!

பட்டுக்கோட்டையில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் நாட்டு வெடிகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.

பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் 2 இடங்களில் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் தஞ்சாவூர் திட்டமிட்ட குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் லக்குமணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், போலீஸ் ஏட்டுகள் காமராஜ், செந்தில், சரவணன், ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் உள்ள 2 இடங்களை திடீர் சோதனையிட்டனர்.

சோதனையில் உரிமம் இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதில் அதிர்வேட்டு, மாப்பிள்ளை வெடி, நாட்டு வெடி, பேப்பர் வெடி, தோரண வெடி உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்ததாக மாணிக்கவாசகம் (வயது 53), வைரமணி (52) ஆகிய இருவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து இருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நகரின் முக்கிய பகுதியில் இருந்து நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : தினத்தந்தி

Wednesday, August 27, 2014

மரண அறிவிப்பு !

மல்லிபட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் T.M. முஹம்மது தாவூத் அவர்களின் மகனும், மர்ஹூம் T.M சகாபுதீன், T.M முஹம்மது ராவூத்தர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரவூப், சரபுதீன், ரஃபி அஹமது ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் கா.மீ.மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும், அதிரை D.M.K மீராசாஹிப் அவர்களின் மருமகனுமாகிய T.M அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று மாலை மல்லிபட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் மல்லிபட்டினம் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

செய்தி : நூர் முஹம்மது ( நூவன்னா )

அதிரை கடற்கரை இட ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் தடுத்து நிறுத்தியும் மீண்டும் ஆக்கிரமனம் ! அதிரடியாக களத்தில் இறங்கிய அதிரை TNTJ அமைப்பினர் !!

அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து நேராக கடற்கரைக்கு செல்லும் கஸ்டம்ஸ் சாலையின் முடிவில் வலதுபுறத்தில் அரசுக்கு சொந்தமான சில ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. இதில் பண்டிகை காலங்களில் அனைத்து தரப்பு பொதுமக்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இந்த பகுதியில் ஏராளமான மணல் குமிந்து சுற்றுலா தளமாக காட்சியளித்தது. சுனாமி தடுப்புக்காக அரசு சார்பில் ஏராளமான சவுக்கு மரங்களும் நடப்பட்டது.

அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறால் பண்ணை அமைப்பதற்காக சிலர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட மார்க்க பிராசாரகர் அன்வர் அலி அவர்களால் அரசு அலுவலருக்கு தொலைபேசியில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் அலுவலர் பழனிவேல், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் மகரஜோதி, அதிரை காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதுகுறித்து அதிரை நியூஸில் புகைப்படங்களுடன் கடந்த [ 19-05-2014 ] அன்று செய்தியாக வெளியிடப்பட்டது.

செய்தியைக் காண்க :
'அதிரையில் கடற்கரையோர அரசு நிலம் ஆக்கிரமிப்பை அதிரடியாக தடுத்து நிறுத்திய அரசு அலுவலர்கள் !'

இந்நிலையில் இந்த நிலத்தில் மீண்டும் இறால் பண்ணை அமைக்கப்பட்டு அதற்குரிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதை அறிந்து கொண்ட  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட மார்க்க பிராசாரகர் அன்வர் அலி அவர்கள், அதிரை கிளை செயலாளர் S.P பக்கீர் முஹம்மது, துணை செயலாளர் A.K.S நவாஸ்கான், நகர மருத்துவ அணி செயலாளர் ஹாஜி முஹம்மது, சகாபுதீன் ஆகியரோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்பு முழுவதையும் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் பொதுநலன் கருதி இவற்றை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் மாவட்டம் மற்றும் தலைமையகத்தின் அனுமதியோடு அரசு இடத்தை மீண்டும் ஆக்கிரமனம் செய்தோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட மார்க்க பிராசாரகர் அன்வர் அலி கூறியதாவது... 






படங்கள் மற்றும் வீடியோ உதவி : 
AKS நவாஸ், SP பக்கீர் முகமது