.

Pages

Friday, October 25, 2019

அதிராம்பட்டினத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்!

அதிராம்பட்டினம், அக்.25
அதிராம்பட்டினத்தில் காவலர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அறிவுரையின் பேரில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் வழிகாட்டுதலில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை யுனானிப் பிரிவு சாா்பில், அதிராம்பட்டினம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை (யுனானிப் பிரிவு) மருத்துவர் சி. ஷெரீன் பேகம் முகாமை தொடங்கி வைத்து, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை கவுன்சிலர் பாரதி டெங்கு ஒழிப்பு வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

Thursday, October 24, 2019

தஞ்சை மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு, புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் நடைபெறும் பொருளாதார கணக்கெடுப்பு பணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (24.10.2019) செல்போன் செயலி மூலம் துவக்கி வைத்தார்.

மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக வழிகாட்டுதலின்படி 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் மத்திய அரசு நிதி உதவியுடன் இக்கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இக்கணக்கெடுப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை இன்று தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள கடைகளில் கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை துவக்கி வைத்தார்.

மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பலத்துடன் இயங்கிவரும் தொழில் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள, தொழிற்சாலைகள்,  வீடுகளில் செயல்படும் நிறுவனங்கள், வளாகம் இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட நிர்வாகங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

இக்கணக்கெடுப்பு விவரங்கள் இந்திய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் தீட்டும் தொழில் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், பிற அரசின் செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.
 
எனவே, இந்த கணக்கெடுப்பு பணிக்கு இல்லம் தேடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் சரியான புள்ளி விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புள்ளியியல் துறை துணை இயக்குநர் மோகன், புள்ளியியல் துறை உதவி இயக்குநர்கள், வட்டார புள்ளியியல் அலுவலர்கள், தேசிய புள்ளியியல் துறை அலுவலக முதன்மை புள்ளியியல் அலுவலர் வெங்கட்ராமன், மத்திய பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

TIYA அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்!

அதிராம்பட்டினம், அக்.24
அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA),  தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாலகர்வாடி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் டாக்டர் பி.பிரியதர்சினி, டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், TIYA அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

ஏரி வடிகாலில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: கடலில் கலந்து வீணாகும் அவலம்!

அதிராம்பட்டினம், அக். 24
அதிராம்பட்டினம் அடுத்துள்ள தொக்காலிக்காடு, மஹாராஜா சமுத்திர அணைக்கட்டு அக்னியாற்றின் உபரி நீர் வெளியேறி, ஏரிப்புறக்கரை பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றில் நிரம்பி வழிந்து, பின்னர், கிழக்கு கடற்கரை சாலை பிலால் நகர், காதிர் முகைதீன் கல்லூரி, ஏரிப்புறக்கரை கிராம இணைப்பு சாலை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி) வாய்க்கால் வழியாக கடலில் வீணாகக் கலந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக ஏரி வடிகாலை  முறையாக தூர் வாரி, கரையை பலப்படுத்தாததால், தற்போது ஏரியிலிருந்து நிரம்பி வழிந்து கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், வடிகால் உடைந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதியினுள் வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் நிலவி உள்ளது.

எனவே, பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடாதவாறு மணல் மூடைகளைக் கொண்டு கரையை பலப்படுத்தும் பணிகளில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரியிலிருந்து வெளியேறி வரும் உபரி நீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த நீரை அருகில் உள்ள குளங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

மரண அறிவிப்பு ~ ஏ.கமாலுதீன் (வயது 70)

அதிரை நியூஸ்: அக். 24
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஏ.அப்துல் அஜீஸ் அவர்களின் மகனும், மர்ஹும் தொ.கா அப்துல் லத்தீப் அவர்களின் மருமகனும், மர்ஹும் இ.மு சாகுல் ஹமீது, மர்ஹும் இ.மு ஹாஜி ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மருமகனும், தொ.கா அப்துல் ஹமீது, மர்ஹும் தொ.கா முகமது பாசின், தொ.கா அபூபக்கர் ஆகியோரின் மச்சானும், ஹாஜி எஸ்.எம்.ஏ அப்துல் வாஹித் அவர்களின் சகோதரரும், பி. ஜாஹிர் உசேன், எஸ். சுலைமான் ஆகியோரின் மாமனாரும், கே. முகமது பாருக், கே. இக்பால், மர்ஹும் கே. முகமது முகைதீன். கே. அப்துல் வஹாப். கே. அப்துல் அஜீஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ.கமாலுதீன் (வயது 70) அவர்கள் இன்று  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (24-10-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் பலத்த மழை: 44.70 மி.மீ பதிவு, பிலால் நகர் பெரிதும் பாதிப்பு!

அதிராம்பட்டினம், அக்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை, நேற்று புதன்கிழமை இரவு தொடங்கி இன்று  வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.

அதிராம்பட்டினம், பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தன. இப்பகுதியில், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிராம்பட்டினத்தில் இன்று (அக்.24) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி 44.70 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் 577.40 மி.மீ மழையளவு பதிவானது. அதிகபட்சமாக வல்லத்தில் 90 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக அய்யம்பேட்டையில் 11 மி.மீட்டரும் பதிவானது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு வருமாறு (மி.மீ):
தஞ்சாவூர் 25, வல்லம் 90, குருங்குளம் 14, திருவையாறு 25, பூதலூர் 36.20, திருக்காட்டுப்பள்ளி 36.60, கல்லணை 65.20, ஒரத்தநாடு 23, நெய்வாசல் தென்பாதி 13.80, வெட்டிக்காடு 11.60, கும்பகோணம் 13, பாபநாசம் 18.20, அய்யம்பேட்டை 11, திருவிடைமருதூர் 16, மஞ்சளாறு 42.20, அணைக்கரை 14.40, பட்டுக்கோட்டை 12.50, அதிராம்பட்டினம் 44.70, ஈச்சன்விடுதி 22.40, மதுக்கூர் 20, பேராவூரணி 22.60 மி.மீ என பதிவானது.
 

அதிரையில் கொட்டும் மழையில் 2000 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 24
அதிராம்பட்டினம், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா  இளைஞர்கள் சங்கம் சாா்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் இன்று (24-10-2019) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

முகாமிற்கு, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கத் தலைவர் ஏ.தாஜுதீன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் ஹாஜி என்.எம்.எஸ் மன்சூர் முகாமை தொடங்கி வைத்தார். அதிரையில் பெய்து வரும் தூறல் மழையையும் பொருட்படுத்தாது, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினர். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வர்த்தகர்கள், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி சென்றனர். இதில், சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் சென்றனர்.

முகாமில், இளைஞர் சங்க நிர்வாகிகள் முகமது புஹாரி, யா முகமது, ஃபாமிம், ரிழா, சர்பத்கான், பைசல், ஜிப்ரில், அசார், முகமது அஸ்லம், நிஜாம், தமீம் அன்சாரி, எஸ்.சேக்தாவூது, எம்.சேக்தாவூது, ஓய்.சேக்தாவூது, மான் ஏ.சேக், முகமது பாவாஜி, அஜ்மல்கான், இஸ்மாயில், நூருல் அமீன், சேட் அமானுல்லா உள்ளிட்ட மஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, October 23, 2019

டெங்கு கொசு ஒழிப்பு பணி: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் டெங்கு சொசு ஒழிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (23.10.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் டெங்கு சொசு ஒழிப்பு பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தபோது, கட்டுமான பொருட்களில் தண்ணீர் தேங்கியதால், மாநகராட்சி அலுவலர்களை டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா என பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார். டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டத்தால் ஒப்பந்ததாரர் மீது ரூ.10,000 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள், தஞ்சாவ10ர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் திருவள்ளுவர் பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக வளாகம், கரந்தையில் அமைந்துள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை டெங்கு கொசு ஒழிப்பு பணியினை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி ஜானகி ரவீந்திரன், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையின் கோட்ட மேலாளர் திரு.நடராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.