.

Pages

Thursday, January 24, 2013

அதிரை நூலகம் – ஓர் பார்வை !!!




நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை புத்தகமே. இவற்றைக்கொண்டு நம் அறிவித்திறன்களை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக விசயங்கள் பலவற்றை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நமது அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழும் நூலகம் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. 

வாசகர்களின் எண்ணிக்கை :
அதிரையில்  கடந்த 15-06-1955 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நூலத்தில் கவிதை, நாவல், நாடகம், பொது அறிவு, இயற்கையியல், கணிதவியல், இயற்பியல், பொறியியல், வேதியியல், தொழில்நுட்பவியல், உயிரியல், புவியியல், தாவரவியல், வேளாண்மை, விலங்கியல், மருத்துவயியல், பயன்படு கலைகள், கவின் கலைகள், இலக்கியம், மொழியியல், சமயம், தத்துவயியல், உளவியல், கல்வி, நிலவியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், சட்டவியல் போன்ற தலைப்புகள் அடங்கிய 31517 புத்தகங்கள் இருந்தும் 8 புரவலர்களையும், 3227  உறுப்பினர்களையும் மட்டுமே பெற்றிருப்பது வேதனை தருவதாக இருகின்றது.
இவைகள் நமது மக்களிடயே வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதையே காட்டுகின்றன. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஊரில் தினமும் சுமார் 90 - 100  வாசகர்கள் மாத்திரம் நூலகத்திற்கு வந்து செல்வது அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது. ஒரு வேலை நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் மத்திய பகுதியில் இல்லாமல் ஊரின் கடைகோடியில் இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ !?`

நூலகத்தின் கட்டிடம் :
நமதூர் கரையூர் தெரு பஞ்சாயத்தார் சார்பாக வழங்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில் கடந்து [ 30-09-1980 ] அன்று கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று கடந்த  [ 16-01-1993 ] அன்று முதல் இந்நூலகம் செயல்பட துவங்கியது.

கட்டிடம் இன்றைய நிலையில் பராமரிப்புகளின்றி சுவற்றில் காணப்படும் வெடிப்புகளாலும், உப்புக்கற்றால் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு கீழே இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. நீண்ட காலமாக நூலக கட்டிடத்திற்கு பெயின்ட் அடிக்காமல் விட்டதனால் மங்கிப் போய் காட்சியளிக்கின்றன.

நூலகத்தின் வசதிகள் :
நூலாக வாசகர்களுக்கு அமர்ந்து படிப்பதற்கு நாற்காலிகள், மேஜைகள், போதிய வெளிச்சத்துடன் கூடிய மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளற்று மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன.

அறிவிப்பு பலகை :
நூலகம் குறித்த வாசகர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரும் ‘அறிவிப்புப் பலகை’யை அனைவரின் பார்வையில் படுமாறு நூலகத்தில் இடம்பெறுவது அவசியம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. நூலகக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதன் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தலாம்.

2. வாசிக்கும் திறனை அதிகரிக்கச் செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
3. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் கடைகோடியில் அமைந்து இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஊரின் மத்தியில் கிளை நூலகம் ஒன்றை ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லலாம்.

4. நூலகத்தில் புத்தகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம்.

5. புரவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு நூலகத்திற்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

6. நமதூரைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து நிதி உதவிப் பெற்று நூலகத்திற்கு தேவையான பெயின்ட் அடித்தல், குடிநீர் வசதி மற்றும் இன்னபிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக Go.ms.no.1408/EDN (k) Dated 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற தகவல்கள் இன்று வலைதளங்களின் உதவியால் விரைந்து கிடைக்கின்றன. உலகின் எந்த நூலகத்தில் உள்ள நூல்களையும் "மவுஸி'ன் மூலம் "கிளிக்' செய்தால் இருக்கும் இடத்தில் இருந்தே படிக்க முடிகிறது. இன்டர்நெட் மூலமாக மின் புத்தக நிலையங்களில் புத்தகங்களை நமக்கு நாமே வாங்கும் சூழல் இருந்தாலும் கனிந்த சேவை, காயம் ஏற்படுத்தாத சொற்கள், நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தளத்தை பெரும்பான்மையாக நூலகம் நோக்கி அழைக்க முடியும் என்பதை மனதில் இருத்தி பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலக்கட்டங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் ‎பழக்கத்தை அதிகரிக்கச்செய்து, நூலகங்களின் பயன்கள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ‎ஏற்படுத்துவது அவசியமானதொன்றாகிறது.

இதற்காக நாம் நூலகம் தரும் பயன் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம் - வாசிப்பை நேசிப்போம். நமது நூலகத்தை நாமே தரத்திலும் சேவையிலும் உயரச்செய்வோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

2 comments:

  1. ///நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை புத்தகமே. இவற்றைக்கொண்டு நம் அறிவித்திறன்களை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக விசயங்கள் பலவற்றை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நமது அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழும் நூலகம் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன.///

    ''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆரம்பித்த சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

    இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி இப்பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.

    உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    அதிரை.

    முதல் அடி எடுத்து வைக்கையிலேயே கையில் நூலகத்தை எடுத்திருப்பது சகோதரர் சேக்கனா எம் நிஜாம் அவர்களின் சமூக நல ஆர்வத்தைக் காட்டுகின்றது.

    நூலுக்கு ஒருபோதும் முடிவு கிடையாது, எத்தனை பக்கங்களானாலும் அது தாங்கும். எல்லா வரிகளையும் அது தனக்குள் அடக்கி வைத்துக்கொள்ளும், வேண்டுவோர்க்கு வேண்டும் நேரத்தல் திறந்து காட்டும், அந்த வகையில் நான் பார்க்கும்போது இந்த் அன்பின் சகோதரரை ஒரு நூலகம் என்று குறிப்பிடுவதில் சந்தோஷப்படுகின்றேன். இந்த நூலை கையாலத்தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி என்ன சொல்வது.

    நூல்கள் எல்லாம் பொதுவானது அதே நேரத்தில் தரமான நூல்களும் இருக்கத்தானே செய்கிறது.

    பல்லாண்டு காலம் தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.