தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துதல் தொடர்பான மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசியதாவது :–
நீரினால் பரவும் பல்வேறு நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும். கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
முதல்–அமைச்சரின் விஷன்–2023 தொலைநோக்கு திட்டத்தின்படி 2015–ம் ஆண்டுக்குள் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் மாற்றிடும் நிலையை உருவாக்கிடும் வகையில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் தனிநபர் கழிவறைகள் கட்டுவதற்கான புள்ளி விவர சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அம்மா திட்டத்தின் கீழ் அனைத்து வருவாய் கிராமங்களிலும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வருவாய்த்துறை அலுவலர்கள் 6 மாத கால அளவிற்குள் நேரில் சென்று மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப்பட உள்ளன. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நீரினால் பரவும் நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் கொசுக்கள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் அவற்றை அளிப்பதற்கான வழிமுறைகள், பொதுசுகாதாரம் குறித்த விளக்கப்படம் மக்கள் பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாராணிரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வரதராஜன், நகர சபை தலைவர்கள் சாவித்திரிகோபால், ரத்னாசேகர், ஜவகர்பாபு, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை மற்றும் அனைத்து பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் - தஞ்சை
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅறிந்து கொள்ளவேண்டிய தகவல்.
நல்ல திட்டம். தகவலுக்கும் நன்றி.
ReplyDelete