மேலத்தெரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களின் கடும் முயற்சியின் கீழ் உருவாக்ககப்பட்டு தொடர்ந்த சிறப்பாக நடத்தி வரப்பட்டதுதான் இந்த ரஹ்மத் நூலகம். அதிரையின் நல் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து வந்தது என்றால் மிகையல்ல.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய பெரியவர் மர்ஹூம் M. M. S. அபுல் ஹசன் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட இந்த நூலகத்தில் அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரையின் பிற பகுதியிலிருந்து வருகை தரும் இளைஞர்கள், பெரியோர்கள் போன்றோர் இங்கு வைக்கப்பட்டுள்ள சமூக அரசியல், மார்க்கம், கல்வி, குடும்பவியல், மொழியியல், ஆரோக்கியம், வரலாற்று நூல்கள் ஆகியவற்றோடு அன்றாடம் வெளிவரக்கூடிய நாளிதழ்கள், வார இதழ்கள் என படித்து பயன்பெற்று வந்தனர்.
இந்த பணிக்காக நல்லுள்ளங்கள் அளித்த நிதி உதவியின் கீழ் இயங்கிவந்த இந்த நூலகத்தின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக பராமரிப்பின்றி காணப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்து வாசித்து மகிழ்ந்த இடம் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன. இளைஞர்கள் - மூத்தோர்கள் வயது வித்தியாசமின்றி ஒருவருக்கொருவர் பாசத்துடன் வாங்க பழகலாமுன்னு வழிவகுத்து கொடுத்த இந்த நூலகம் இன்று அடியோடு சாய்ந்து கிடக்கிறது. ஆடு மாடுகள் அடையும் கூடாரமாகவும் காணப்படுகின்றன.
அடியோடு சாய்ந்து கிடக்கும் இந்த நூலகத்தை மீண்டும் புதுப்பித்து தூக்கி நிறுத்த வேண்டும் என்பதே இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்களின் ஆர்வமாக இருக்கிறது. அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய இந்த நூலகத்தைப் புதுப்பிப்பதற்கு நமதூர் வாசிகள் அனைவரும் நிதி உதவியளித்து மீண்டும் செயல்படுவதற்கு உரிய முயற்சியில் இறங்க வேண்டும் என்பதும் இப்பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..
பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலக்கட்டங்களில் இளைஞர்களின் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச்செய்து, நூலகங்களின் பயன்கள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமானதொன்றாகிறது. நூல் பல கற்று நமது அறிவை வளர்த்துக் கொள்வோம் - வாசிப்பை நேசிப்போம். நமது நூலகத்தை நாமே தரத்திலும் சேவையிலும் உயரச்செய்வோம்.
செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ்
தகவல் : M. அப்துல் ரஹ்மான்
புகைப்படங்கள் : T. முஹம்மது இஸ்மாயில்
என்ன தான் நாம் நவீன உலகத்தில் வாழ்ந்தாலும் நூலகத்திற்குச் சென்று பற்ப்பல நூல்களை கையில் எடுத்து வாசிப்பது அலாதி சுகமே.! எப்போதும் பழமை பொன் போன்றது.[old is gold]ஆகவே இந்நூலகத்தை மீண்டும் புதுப்பிக்க அனைவர்களும் நிதி உதவியளிக்க முன்வர வேண்டும்.
ReplyDelete