.

Pages

Wednesday, April 20, 2016

பட்டுக்கோட்டை தொகுதி: ஒரு சிறப்பு பார்வை !

ஜில்லா போர்டு தலைவர் ஸ்ரீமான் வி. நாடிமுத்துப்பிள்ளை, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இந்திய முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் ஆகிய பிரபலங்கள் பட்டுக்கோட்டை மண்ணின் மைந்தர்கள். இது தவிர திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, முன்னாள் அமைச்சர் வி.ஆர். நெடுஞ்செழியன், அவர் தம்பி இரா. செழியன் ஆகியோர் அரசியல் தலைவர்களாக உருவெடுத்த ஊர் பட்டுக்கோட்டை.

தொகுதி: பட்டுக்கோட்டை,
தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுதி எண்:......... 176
பதற்றமான இடங்கள்:.. 27
ஆண் வாக்காளர்கள்:............ 1,09,221. 
பெண் வாக்காளர்கள்:............ 1,17,279.
இதரர் (திருநங்கை):.............       18.
மொத்த வாக்காளர்கள்:...........2,26,518. 

தஞ்சை மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய நகரம் பட்டுக்கோட்டை. பட்டுக்கோட்டை தாலுகாவில் ஒரு நகராட்சி (பட்டுக்கோட்டை), 2 ஊராட்சி ஒன்றியங்கள் (பட்டுக்கோட்டை, மதுக்கூர்), 2 பேரூராட்சிகள் (அதிராம்பட்டினம், மதுக்கூர்) மற்றும் 76 ஊராட்சிகள் உள்ளன.

பட்டுக்கோட்டை தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,97,827 ஆகும். பட்டுக்கோட்டை நகரின் மொத்த மக்கள் தொகை 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73,097 ஆகும்.

பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. பட்டுக்கோட்டை பேரூராட்சி 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது. இந்நகராட்சி 33 வார்டுகளை உள்ளடக்கியது. நகராட்சி எல்லைக்குள் மொத்தம் 106 தெருக்கள் உள்ளன. பட்டுக்கோட்டை நகரத்தின் ஒட்டு மொத்த சாலை நீளம் 114.6 கி.மீ. இதில் நகராட்சி சாலை நீளம் 94.53 கி.மீ. தினசரி நகரத்திற்கு சராசரியாக 10,000 பேர் வந்து செல்கின்றனர்.

பட்டுக்கோட்டை தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் இதுவரை 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ்  5 முறை, திமுக 3 முறை, அதிமுக 3 முறை, பிரஜாசோஷலிஸ்ட் 2 முறை, தமாகா 1 முறை வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் முத்தரையர், வேளாளர், தலித், அகமுடையார், கள்ளர், செட்டியார், முதலியார், யாதவர் என பல்வேறு சமூகத்தினர் உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் விவரம்:
1952 வி. நாடிமுத்துப்பிள்ளை (காங்)............21,372 (வெற்றி)
     ஏ.ஆர். மாரிமுத்து (பிரஜாசோஷலிஸ்ட்)...15,926

1957 ஆர். சீனிவாச ஐயர் (காங்).................24,237 (வெற்றி)
     வி. அருணாச்சலத்தேவர் (சுயே)............16,435

1962 வி. அருணாச்சலத்தேவர் (திமுக)...........35,151 (வெற்றி)
     ஆர். சீனிவாச ஐயர் (காங்)..................28,806

1967 ஏ.ஆர். மாரிமுத்து (பிரஜாசோஷலிஸ்ட்)....35,198 (வெற்றி)
     என். ராமசாமி (காங்).......................28,056

1971 ஏ.ஆர். மாரிமுத்து (பிரஜாசோஷலிஸ்ட்).....44,565 (வெற்றி)
     நம்பிவயல் நாகராஜன் (பழைய காங்)........26,229

1977 ஏ.ஆர். மாரிமுத்து (இ.காங்)................25,993 (வெற்றி)
     வி.ஆர்.கே. பழனியப்பன் (அதிமுக).........25,982

1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அதிமுக)..............52,900 (வெற்றி)
     ஏ.ஆர். மாரிமுத்து (இ.காங்).................42,302

1984 பி.என். ராமச்சந்திரன் (அதிமுக).............50,493 (வெற்றி)
     ஏ.வி. சுப்பிரமணியன் (திமுக)...............35,376

1989 கா. அண்ணாதுரை (திமுக)...................41,224 (வெற்றி)
     ஏ.ஆர். மாரிமுத்து (இ.காங்).................26,543

1991 கே. பாலசுப்பிரமணியன் (அதிமுக)............67,754 (வெற்றி)
     கா. அண்ணாதுரை (திமுக)....................39,028

1996 ஏனாதி பாலசுப்பிரமணியன் (திமுக)............69,880 (வெற்றி)
     சீனி. பாஸ்கரன் (அதிமுக).....................36,259

2001 என்.ஆர். ரெங்கராஜன் (தமாகா)................55,474 (வெற்றி)
     ஏனாதி பாலசுப்பிரமணியன் (திமுக)............48,524

2006 என்.ஆர். ரெங்கராஜன் (காங்)..................58,776 (வெற்றி)
     சு. விசுவநாதன் (மதிமுக)......................43,442

2011 என்.ஆர். ரெங்கராஜன் (காங்)..................55,482 (வெற்றி)
     என். செந்தில்குமார் (தேமுதிக)................46,703

இப்பகுதி மக்களின் பிரதானக் கோரிக்கைகள்: 
பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ரூ. 22 கோடி செலவில் அணைக்காடு கிராமத்திலிருந்து பட்டுக்கோட்டை நகரம் வளவன்புரம் வழியாக ஆலடிக்குமுளை வரை 8 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி பல ஆண்டுகளாகியும் நிறைவடையாமல் பாதியுடன் நிற்கிறது. இதை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். புறநகர் பகுதியில் மற்றொரு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

நகரில் கொசுத் தொல்லையைப் போக்கி, சுகாதாரத்தைப் பாதுகாக்க, புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சீர்கெட்டுக் கிடக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையை மாவட்ட மருத்துவ மனைக்கு நிகராக மேம்படுத்தி, இங்கு வரும் நோயாளிகளுக்கு உயர்தரமான சிகிச்சையளிக்க வேண்டும். இங்கு மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் புதன்கிழமை தோறும் ஏலம் நடத்தப்பட்டு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொப்பரை மற்றும் தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர். இந்த நடைமுறையை மாற்றி, வார வேலை நாட்கள் முழுவதும் விவசாயிகளிடமிருந்து அரசே கொப்பரை, தேங்காய் ஆகியவற்றை கொள்முதல் செய்ய வேண்டும். அதிகளவில் தென்னை சாகுபடி நடைபெறும் பட்டுக்கோட்டை தொகுதியில் தென்னையை மூலப் பொருளாகக் கொண்டு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அரசு நிறுவ வேண்டும். பெயரளவில் இயங்கி வரும் வேப்பங்குளம் தென்னை ஆராாய்ச்சி நிலையத்தில் வேளாண் பல்கலைக் கழகத்தின் மூலம் தென்னை சார்ந்தப் படிப்புகளை தொடங்க வேண்டும்.

இப்பகுதி காட்டாறுகளில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை பகுதிகளில் உற்பத்தியாகும் நெல், தேங்காய், அதிராம்பட்டினத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆகியவை தற்போது அதிக கட்டணம் கொடுத்து லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடித்தால் விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருளை குறைந்த செலவில் ரயில் மூலம் அனுப்பிப் பயன் பெறுவர்.

நன்றி:தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.