.

Pages

Wednesday, April 27, 2016

சீட் ஒதுக்காததால் அதிரை பாருக் அதிருப்தி !

இந்திய தேசிய காங்கிரஸின் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஆலோசகரான நான் உங்களுக்கெல்லாம் சில விளக்கங்களை கூறவே அவசரமாக இந்த தகவல்களை வெளியிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களிடம் 25.04.2016 அன்று காலை 07.41 மணிக்கு அவரது செல்லில் தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்டவகையில் பட்டுக்கோட்டை மற்றும் சில தொகுதிகளில் இப்படி சில சூழ்நிலை உருவாகிவிட்டது. உங்களுடைய வருத்தம் எனக்கு புரிகிறது. நீங்கள் வருத்தப்படவேண்டாம். வழக்கம்போல் உங்களது கட்சி பணிகளில் நல்லபடியாக செயல்படுங்கள் என்பதாக என்னிடம் கனிவுடன் கூறினார்கள். மற்ற விஷயங்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. கட்சி எனக்கு தந்த 5000 ரூபாயை கடந்த 17.02.2016 அன்று விருப்பமனுவுடன் சேர்த்து சத்தியமூர்த்திபவனில் செலுத்தினேன். அதன்பின் 24.02.2016 அன்று தஞ்சையில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு மாநிலத்தலைவர் அவர்களிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. அடுத்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் உயர்திரு. டி.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களிடமிருந்தும் 23.02.2016 அன்று தகவல் வந்தது. காங். மேலிட பார்வையாளர் ஜனாப் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா மற்றும் மாவட்டத்தலைவர் முன்னிலையில் நடந்த நேர்காணலில் நான் பங்கேற்ற போது மற்றவர்களிடம் கேட்டது போல் என்னிடம் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்று கேட்கவில்லை. கேட்க கூடாது என்ற மேலிட உத்தரவால் அவர் என்னிடம் கேட்கவில்லை. தொகுதி நிலவரம் பற்றி மட்டுமே என்னிடம் கேட்டார்.

இந்தநிலையில் முக்கிய தகவலை உங்களுக்கெல்லாம் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்துவிடப்படும் எனவும், திமுக-வை சீண்டவே ஆளில்லை எனவும், கேலியும் கிண்டலுமாக பத்திரிக்கைகள் எழுதிக்கொண்டிருந்ததை கூர்ந்து கவனித்த எனக்கு மூன்று ஆண்டுகளாக தொடர்பில்லாத திமுக-வையும் காங்கிரசையும், தேமுதிக-வையும் இணைப்பதற்கான ஒரு கூட்டணி முயற்சியை உடனடியாக துவங்குமாறு 05.02.2016 அன்று மாண்புமிகு.காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியாகாந்தி அவர்களுக்கும், துணைத்தலைவர் திரு.ராகுல் அவர்களுக்கும் முதல்முதலாக தெரிவித்தேன். அதில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாகவும் தேவையான புள்ளி விபரங்களை தெரிவித்திருந்தேன். இது தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் பரப்பரப்பாக பேசக்கூடிய செய்தியானது. இந்த தொகுதியில் நான் போட்டியிட விரும்பவதை கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து என்னுடைய நோட்டீசுகள் மூலமாக தெரிவித்து வந்தேன். முக்கிய கட்சிகளுக்கும், இமெயில் மூலம் எனது தகவல்கள் அனுப்பப்பட்டன. இந்த தொகுதியும் நான் விரும்பியபடி காங்கிரசுக்காக பெறப்பட்டது. கட்சி பொறுப்பேற்றுக்கொண்டால் நான் போட்டியிடுவேன். எனக்காக மட்டுமின்றி கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் மற்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் என்ற தகவல்கள் எல்லாம் முன்கூட்டியே என்னிடமிருந்து காங்கிரஸ் கமிட்டிக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் தொகுதியை ஏன் காங்கிரசுக்கு கொடுத்தீர்கள் என சமூக வளைதளத்தில் செய்தியை ஓடவிட்டதும் அதை நகர திமுக-வினர் கண்டிக்காததும் காங்கிரஸ்காரர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது.

கூட்டணியை உருவாக்கி கொடுத்தவருக்கே குழிபறிக்கும் வேலையில் திட்டமிட்டு செயல்படுவதாக செய்திகள் பரவின. இதைவிட கொடுரம் ஆரம்பத்திலேயே என்னுடைய பெயர் காங்கிரசில் இந்த தொகுதிக்கு தேர்வு செய்யப்பட உள்ளது என்பதை தெரிந்தும் சில இயக்கங்கள் சகிப்புத்தன்மை இல்லாமலும் இன உணர்வு இல்லாமலும் தொகுதியை எங்களுக்கு தாருங்கள் என்று திமுகவிடமும் காங்கிரஸ் கட்சியிடமும் பேசிய விபரங்களும் எனக்கு தெரியவந்தது. பண உணர்வு முன்னிலையில் இருக்கும்போது இன உணர்வு காணாமல் போய்விடும். நயவஞ்சகமும், நம்பிக்கை துரோகமும் நன்றி மறத்தலும் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அரசியலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. வேட்பாளர் தேர்வு (41 இடங்கள்) காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால் அநாவசியமாக கற்பனையில் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க வேண்டாம் என்பது தான். 17.04.2016 மற்றும் 21.04.2016 அன்று மாண்புமிகு. காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவருக்கு ஆங்கிலத்தில் முக்கிய தகவல்கள் சென்றுள்ளன. இதுவரை எனக்கு ஆதரவளித்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் 1990 முதல் என்னுடைய ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்திய முக்கிய அமைச்சகங்களுக்கும் என்னுடைய திட்டங்களுக்காக அடுத்தடுத்து எனக்கு பல கடிதங்கள் அனுப்பிய மரியாதைக்குரிய முன்னாள் பிரதமர்.டாக்டா.மன்மோகன்சிங் அவர்களுக்கும் என்னோடு கடிததொடர்பில் இருந்த முன்னாள் கப்பல்துறை அமைச்சர் திரு.ஜி.கே.வாசன் அவர்களுக்கு, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.கே.வி.தங்கபாலு அவர்களுக்கும், திரு.ஞானதேசிகன் அவர்களுக்கும், இதே பொறுப்பில் ஏற்கனவே இருந்த திரு. ஜி.கே.வாசன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியலில் தொடர்வதா ? அரவிந்த் கெஜிரிவால் அவர்களுக்கு ஆலோசகராக செல்வதா ? மத்திய அரசின் முக்கிய நிர்வாகங்களுக்கு ஆலோசகராக செல்வதா ? இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதா ? என்பதை 29.04.2016-க்குள் நானே முடிவு செய்வேன். கட்சியில் இனிமேல் கோஷ்டி இல்லை திறமையானவர்களும் சீட் பெறலாம். பணம் முக்கியத்துவம் இல்லை என்றெல்லாம் அறிக்கை கொடுத்துவிட்டு 27 பேரை தேர்வு குழுவில் நியமித்து தொண்டர்கள் விரும்பாத செயல்கள் அதிகமாக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நிகழ்கின்றன.

இளைஞர் காங்கிரஸ் - இளைஞர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல் இதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான இளைஞர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களாகவும், கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களாகவும், விஜய், அஜித், கமலஹாசன், விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களாக உள்ளனர். அதிகமாக நான் எழுத விரும்பவில்லை. இறைவன் உதவியால் என்னுடைய எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது என்பது எனக்கு தெரியும். ஆறு ஆண்டுகள் 1980 முதல் 1986 வரை சவுதி அரேபியாவில் பணியிலிருந்தபோதே நான் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவன். மற்ற விபரங்களை இன்ஷா அல்லாஹ் பிறகு தெரிவிக்கின்றேன்.
அறிவிக்கப்பட்ட எந்த வேட்பாளர்களும் எனக்கு வேண்டாதவர்கள் அல்ல. புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் இனிமேல் காங்கிரஸ் கட்சியில் எந்தகாலத்திலும் முக்கியத்துவம் இருக்காது என்பதால் என்னுடைய முடிவை நானே எடுத்துக்கொள்கிறேன்.

ஏ. பாருக், 
செயலாளர், அதிரை
இந்திய தேசிய காங்கிரஸ் 
68 காலியார் தெரு, அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் 

2 comments:

  1. மற்றதை எல்லாம் விடுங்க. அரவிந்த் கேஜ்ரிவாளுக்கு ஆலோசகராப் போங்க. அவர்தான் இப்போதைக்கு அப்பழுக்கற்ற அரசியல்வாதி.

    ReplyDelete
  2. இன்றைய அரசியலில் பல வகைகளிலும் செல்வாக்கு உள்ளவர்கள்தான் களத்தில் இறங்க முடியும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பது அவரவர்களின் உரிமை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.