.

Pages

Thursday, April 21, 2016

நாங்கள் குடித்த 'டீ' இருவருக்கும் மீண்டும் இனித்தது...

வங்கி மேலாளருடன் அவரது அறையில் பேசிக்கொண்டு இருந்தேன்.

அப்போது ஒரு நண்பர் தனது கையில் பாஸ்புக்குடன் அறைக்குள் வந்தார். அவரை அடிக்கடி  பள்ளிவாசலில் பார்த்து இருக்கிறேன். ஆனால் பேசிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது இல்லை. ஆனாலும் என்னைப் பார்த்து சலாம் சொல்லிவிட்டு வங்கி மேலாளருடன் பேசத்தொடங்கினார்.

தன கையிலிருந்த வங்கி பாஸ்புத்தகத்தை மேலாளரிடம்காட்டி, “ என்ன சார்! கடந்த மார்ச் முடிய வருஷ முடிவில் இருந்த பேலன்சுக்கு வட்டி வரவுவைக்கவில்லையே ஏன்?” என்று கேட்டார்.

மேலாளர், “ உங்களுடைய கணக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக வங்கி உங்களுக்கு லைப் இன்சூரன்ஸ் முதலிய பல சலுகைகளை பிரிமியம் இல்லாமல் வழங்குகிறது. ஆகவே வட்டி வரவு வைக்கப்படாது.

இதற்கான ஒப்புதல் பாரத்தில் நீங்கள் கையெழுத்துப்போட்டு இருக்கிறீர்கள் மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். “ என்றுகூறினார்.

நான் மவுனமாக மேஜையில் இருந்த தமிழ் இந்துவைப் படித்துக்கொண்டே உரையாடலை கவலையுடன் கவனித்துக்கொண்டு இருந்தேன்.

அதற்கு நண்பர், “ அப்படியா! நான் வட்டி வாங்குவது இல்லை. அதைப் பயன்படுத்துவதும் இல்லை. ஆனால் அந்தப் பணத்தை வாங்கி ஒரு குடும்பத்துக்கு உதவியாக தர்மம் செய்கிறேன். அவர்கள் எதிர்பார்த்து ஏமாந்துவிடக்கூடாது. இப்போது நான் கையில் இருந்துதான் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது ” என்று  மிகவும் சலிப்புடன் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

வட்டிப்பணத்தை தர்மம் செய்யலாமா? அப்படி செய்தாலும் வட்டியால் ஏற்படும் பாவம் நம்மைவிட்டு நீங்கிவிடுமா? நீங்காதே!  என்ற விபரம் நண்பருக்குத் தெரியவில்லை .ஆகவே அவருக்கு இதை எடுத்துச் சொல்லிவிடவேண்டுமென்று இறைவன் என்னைத் தூண்டினான்.  உடனே, நானும் வங்கியை விட்டு வெளியேறினேன். நண்பர் மெல்ல வெளியே நடந்து சென்று கொண்டுஇருந்தார். அவரைப்  பெயர் சொல்லி அழைத்தேன்.

" கொஞ்சம் பேசவேண்டி இருக்கிறது. வாங்க! ஒரே தாகமாக இருக்கிறது. இந்தக்கடையில்சர்பத் நன்றாக இருக்கும் குடித்துகொண்டே பேசலாம் " என்று அழைத்தேன்.

முகம் நிறைந்த கவலையுடன் இருந்தவர் நான் அழைத்ததும் இலேசான புன்முறுவலுடன்  " சரிவாங்களேன்  " என்றார்.

சர்பத் கடையினுள் அமர்ந்ததும் நான்தான் பேசத்தொடங்கினேன்.

" ஒருவிஷயம் சொல்கிறேன் நீங்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடாது. நீங்கள் மேனேஜரிடம் பேசியதை கவனித்தேன். வட்டித்தொகையை தர்மமாகக் கொடுப்பதைவிட உங்களிடம் இருக்கும் தொகையிலிருந்து  தர்மமாக கொடுப்பதுதான்  இறைவனுக்கு மிகவும் பொருத்தமானது. வட்டியை எந்த வடிவிலும் பயன்படுத்துவதை அல்லாஹ் தடை செய்து இருக்கிறான். . இதை உங்களுக்கு சொல்லவேண்டியது எனது கடமையாக உணர்ந்தேன். ஆகவேதான் உங்களை அழைத்தேன் “ என்று  சொன்னேன்.

மனிதர்களின் பொருள்களுடன் (சேர்ந்து) பெருக்குவதற்காக வேண்டி, வட்டிக்கு நீங்கள் எதனைக் கொடுக்கிறீர்களே, அது அல்லாஹ்விடம் (நன்மையைக் கொண்டு) அதிகரிக்காது. அல்லாஹ்வின் பொருத்தத்தை நீங்கள் நாடியவர்களாக ஜகாத்திலிருந்து நீங்கள் கொடுப்பதானது (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்) அத்தகையோர்தாம் (தம் நன்மைகளை) இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். (30:39) என்ற வசனத்தை சொல்லிக் காட்டினேன்.

வட்டி அமைப்பிலான வங்கிகளில் தனது பணத்தைப் போட்டு வைப்பதால் அவருக்கு அவ்வங்கிகளில் இருந்து வட்டிப் பணம் வரவாக வழங்கப்பட்டால் அதனை பெற்றுக்கொள்வதையும் இஸ்லாம்  தடைசெய்கிறது . ஏனெனில் அப்பணம் அடிப்படையில் அவருக்குச் சொந்தமில்லாத ஒன்றாகும். அதனைப் பெற்று, அதனை ஏழைகள், தேவையுடையவர்களுக்கு உதவி செய்வதோ, பொதுக் காரியங்களுக்காக செலவு செய்வதோ கூடாது. அதுவும் ஹராமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

“ஓர் அடியான் ஹராமான முறையில் பணமீட்டி அதனைச் செலவிட்டாலும், அல்லது தர்மமாகச் செலவிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவன் அதனை விட்டுச்செல்லும் போது நரகின் கட்டுச்சாதனமாகவே அன்றி விட்டுச்செல்வதில்லை “ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்)
என்பதை எடுத்துக் கூறினேன்.

“ நீங்கள்  இதுவரை செய்துவந்த தர்மத்தை உங்கள் கையிலிருந்து செய்து வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு  ஏதாவது வகையில் பரக்கத்தை அதிகமாக்குவான் “  என்றேன்.

“  இன்ஷா அல்லாஹ் “ என்று ஒப்புக் கொண்டார்.  சர்பத்தும் இனித்தது. அவரது வார்த்தைகளும் இனித்தது.

அதற்கு அடுத்த வாரம் அந்த நண்பரை பள்ளிவாசலில் இஷாத்  தொழுகைக்கு ஒளூச் செய்யும்போது சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.        

“ தொழுதுவிட்டுப் போய்விடாதீர்கள். செய்தி இருக்கிறது “  என்று கூறினார்.

தொழுகை முடிந்து இருவரும் வெளியே வந்தோம். “ அன்று நீங்கள் சர்பத் வாங்கித் தந்தீர்கள் இன்று நான் டீ வாங்கித் தருகிறேன்  . வாருங்கள் “ என்று கடைக்கு அழைத்துப் போனார்.

“ நீங்கள் சொன்னது போல அந்தக் குடும்பத்துக்கு உதவி செய்தேன். அல்லாஹ் எனக்கு உதவிசெய்தான்.. எனது மூன்றாவது  மகன் நான்கு முறை துபாய்க்கு விசிட் விசாவில் போயும்   வேலை கிடைக்கவில்லை.  சிவில் இஞ்சினீயர் படித்து இருக்கிறான். ஏகப்பட்ட செலவும் விரயமும் ஏற்பட்டு  மிகவும் கவலையாக இருந்தது. நேற்று தகவல் வந்தது ஒரு பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது.  என் ஒரே கவலை நீங்கிவிட்டது. “ என்று சொல்லி மகிழ்ந்தார்.

“ அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் “ என்றேன் நான்.
அதோடு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள். வானிலுள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.'' (முஃஜமுத் தப்ரானி)  என்பதையும் சொல்லிவைத்தேன்.

நாங்கள் குடித்த  டீ இருவருக்கும் மீண்டும் இனித்தது...

இப்ராஹீம் அன்சாரி 
கல்லூரி முதல்வர் 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

12 comments:

  1. மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு

    ஓர் அடியான் ஹராமான முறையில் பணமீட்டி அதனைச் செலவிட்டாலும், அல்லது தர்மமாகச் செலவிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவன் அதனை விட்டுச்செல்லும் போது நரகின் கட்டுச்சாதனமாகவே அன்றி விட்டுச்செல்வதில்லை “ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்)

    ReplyDelete
  2. மக்களுக்கு சொல்லப்படவேண்டிய காலத்திற்கேற்ற கருத்து.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு

    ஓர் அடியான் ஹராமான முறையில் பணமீட்டி அதனைச் செலவிட்டாலும், அல்லது தர்மமாகச் செலவிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவன் அதனை விட்டுச்செல்லும் போது நரகின் கட்டுச்சாதனமாகவே அன்றி விட்டுச்செல்வதில்லை “ என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்)

    மக்களுக்கு சொல்லப்படவேண்டிய காலத்திற்கேற்ற கருத்து.

    ReplyDelete
  4. ALLAHU AKBAR, VERY HAPPPY TO READ THIS.
    AFTER READING THIS, THIS MAKE'S OUR EEMAN STRONG..
    ALHAMDULILLAH ZAZAK ALLAH KAKA

    ReplyDelete
  5. காக்கா நீங்க சொல்லி காட்டிய விதமும் அந்த இரண்டையும் விட இனிப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  6. நல்ல தொண்டு.மெண்மையான அறிவுரை.நல்ல பயன்கிட்டும்.

    ReplyDelete
  7. இப்படியான மார்க்க அறிவுரையை மனம்நோகாமல் தயங்காமல் ஒவ்வொருவருக்கும் வழங்குங்கள் காக்கா அல்லாஹ் உங்களுக்கு இதற்கான நற்கூலியை தருவான்.

    ReplyDelete
  8. மக்களுக்கு சொல்லப்படவேண்டிய காலத்திற்கேற்ற கருத்து.

    ReplyDelete
  9. சமுதாயத்தில் வட்டி கொடுப்போரைவிட தங்களுடைய தேவைக்காக வட்டிக்கு பணம்வாங்குவோர் அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. செல்வந்தர்கள் வங்கியில் முதலீடு செய்வதில்லை மாறாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து சாதூரியமாக வருமானத்தை பெறுகிறார்கள். இது ஹலால் முறை என்கிறார்கள் சிலர் இல்ல இல்ல இது ஒரு வகை வட்டி என்கிறார்கள் ; சரி போகட்டும்.
    ஷரியத் சட்டத்தின் படி வெளிநாட்டில் வங்கி செயல்படுது அதில் பணத்தை போட்டு வைத்தாலும் குறுப்பிட்ட காலகெடுவில் வாடிக்கையாளருக்கு கொஞ்சம் பணம் கிடைக்குது இதற்கும் ஒரு காரணம் சொல்லுகிறார்கள் அதே சமயம் நாம் எந்தவகை லோன் எடுத்தாலும் வட்டிக்கு பதிலாக சர்வீஸ் சார்ச் வங்கி வசூலிக்கிறது ஆக பரிவர்த்தனை ஓன்று தான் சொல்லு தான் வெவ்வேறாக இருக்கு. வட்டிஎப்படியோ அதேப் போல் லஞ்சம்; வட்டிகொடுப்போரை விட லஞ்சம் கொடுப்போர் அதிகம் இது ஹலாலா? ஹராமா? கட்டுரையில் இடம்பெற்ற சம்பவம் சிந்தனைக்கு விருந்து;, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  11. மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்து இவர் மூலியமாக உங்க அக்கவுண்டில் கணக்கு ஏறிக்கொண்டே இருப்பதற்கு மிக அருமையான காரியத்தை செய்துள்ளீர்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  12. மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்து இவர் மூலியமாக உங்க அக்கவுண்டில் கணக்கு ஏறிக்கொண்டே இருப்பதற்கு மிக அருமையான காரியத்தை செய்துள்ளீர்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.