.

Pages

Sunday, June 21, 2015

ஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்... எதிர்ப்பும் !

தமிழ்நாட்டு நடுத்தர வர்க்க மனிதர்களின் லேட்டஸ்ட் பரபர விவாதங்களில் ஒன்று கட்டாய ஹெல்மெட் சட்டம்தான். ஜூலை நெருங்க நெருங்க... ஹெல்மெட் கடைகளில் கூட்டம் குவிகிறது. சலிப்புடனோ. பொறுப்புடனோ இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வாங்கத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் 'கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்!' என்ற தலைப்பில் வாசகர் பக்கம் பகுதியில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு கமெண்ட் பதிவிட்ட வாசகர்களும் கட்டாய ஹெல்மெட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை முன்வைத்து காரசார விவாதத்தை நடத்தி வருகின்றனர். அந்த விறுவிறு விவாதங்களில் இருந்து...

Karthikeyan : எந்த ஒரு விபத்திலும் உயிரிழந்தாக்கூட பரவாயில்லை. ஆனால், உடலுறுப்புகளை இழந்து வாழ்க்கையே வீல்சேராயிட கூடாது. எனவே ஹெல்மெட் கட்டாயம் அல்ல. தவறிழைக்கும் மற்ற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Joseph : இதனால் சந்தோஷம் போலீசுக்கும், ஹெல்மெட் விற்பனையாளர்களுக்கும்தான், மக்களுக்கு துன்பம்தான்.

Jayam : அட போங்கப்பா, எல்லாம் ஒரு 2 வாரத்துக்குதான். அப்புறம் எல்லாம் பழையபடி ஆயிடும்.

sukumaran : நம்ம ஊர்லதான் வெச்சா குடுமி, அடிச்சா மொட்டை என்பது போலத்தான். ஹெல்மெட் போடாமலே இருந்தா கேட்கப்போவதுமில்லை; ஹெல்மெட் போடவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், பினனால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் போடவேண்டும் என்பது.

Karthick : தமிழக அரசு விலைவாசியை உயர்த்தி மக்கள் தலை மேல் சுமையை ஏற்றியது போதாது என்று, தலைகவசம் என்ற பெயரில் மேலும் சுமையை போடுகிறது. முறையாக சாலை போடாத அரசுக்கு மக்கள் மீது என்ன அக்கறை?

BHASKAR : போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் ஊர்வலம் போன்ற இருநூறு கார்களில் பவனி வரும் அரசியல்வாதிகளை நீதிமன்றம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. அவர்களை முறைப்படுத்த முடியுமா? செயற்கையான வாகன நெரிசலை ஏற்படுத்தி விட்டு நம்மை பாதுகாப்பாக இருக்கச் சொல்வது ஏன்?

Wilson : ஹெல்மெட் அணிவது என்பது சரியானதே, இதனால் காவல்துறை கடுமையாக செயல்படும், இதனால் நடுத்தர மக்களின் நீலை?

HERLIN BOAZ : ஹெல்மெட் போட்ட ஒரு நபர் உயிரிழந்தால் அதற்கு நீதிமன்றம் என்ன சொல்கிறது? ஹெல்மெட் போடுவதினால் பின்னால் வரும் வாகனம் ஹார்ன் சவுண்ட் கேக்காமல், சரியான கவனிக்க முடியாததால் ஹெல்மெட் அணிவதன் மூலமாகவும் விபத்து நடக்கிறது. கனரக வாகனம் பைக்தான என்று உதசீனமாக ஓட்டுவதால் பைக் ஓட்டுபவவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பஸ் எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும். நீதிமன்றத்துக்கும் தெரியும். எப்படி இந்த வாகனங்கலெல்லாம் நீதிமன்றத்துக்கு தெரியாதா?

seetharaman : ஹெல்மெட் அணிவது என்பது சரியானதே. அதே சமயம் சாலைகள் சரியாக இருக்கின்றனவா, அந்த சாலைகளில் வாகனம் தடுமாற்றம் இன்றி ஓட்ட முடியுமா என்பதையும் இந்த நீதிமன்ற நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டு, அதனையும் விசாரித்து சரியாக தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும். சாலை சரியில்லாத நிலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு வண்டி ஓட்டுவது மிக ஆபத்தானது.

ராஜேஷ் குமார் : நமது சாலை ஓரங்களில் விற்கும் ஹெல்மெட்கள் தரமானவையா என்பதை ஏன் இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை?

kumar : ஏற்கெனவே ஏதோ ஒரு கருப்பு கண்ணாடி போட்ட காரில் தீவிரவாத செயல் நடந்தது என்று எல்லா காரிலும் கருப்பு ஸ்டிக்கர் உரிக்க சொன்ன ஊரு இது. இப்ப தீவிரவாத செயல் நடைபெறவில்லையா?

SHAN : ரோட்ல பள்ளம் பறிக்கற பெரிய பெரிய கம்பெனிங்களை, முதல்ல கரெக்டா பள்ளம் எல்லாம் மூட சொல்லுங்க. நெறைய ஆக்சிடன்ட் குறையும். ஒரு மாவட்டத்துல இவ்ளோ தான் வண்டிங்க இருக்கணும்னு சட்டம் போடுங்க பாஸ்.

CJ : பஸ், லாரி ஓட்டுனர் மீது தவறு இருந்தாலும், உயிர் போவது என்னமோ பைக் ஓடுனவனுக்குதானே? அது மட்டும் இல்ல. எப்போதும் விகிதபடி கணக்கு எடுக்கக் கூடாது. எத்தனை பேர் இறந்தார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். அனைத்துக்கும் மேல இது உங்களின் பாதுகாபிற்காக. யாரோ ஒருவருக்காக அல்ல.

KRISHNA : செயின் திருடுபவர்களுக்கு இது வசதி

Mansfield RobertGuna at NLC EMPLOYEE : நாட்டில் போடும் தேவையில்லாத சட்டங்களில் இதுவும் ஒன்று. இதில் பின்னால் அமரும் பெண்களுக்கு, முதியவர்களுக்கும் ஹெல்மட் போட வேண்டும். அப்படியே போட்டாலும் இவற்றை பாதுகாக்க வேண்டும். இப்படி பல கொடுமைகளை அனுபவிக்க போகிறோம்.

வினோத்.சு : இனி மனிதாபிமானம் குறைந்து இல்லாமல்தான் போகும். முன்பு எல்லாம் சாலையில் நடந்து செல்பவர்கள் சிறிது தூரம் நான் வரலாமா என்று கேட்கும்போது அவர்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், இனி அதுவும் இல்லை. ஏன் என்றால் அவர்களுக்கு ஹெல்மெட் நாமா கொண்டுசெல்ல முடியும்?

vaikundamurthy : இதில் பல தவறான வாதங்கள். உதாரணத்திற்கு மற்றவர்கள் தப்பு செய்வதை தடுக்காத நீதிமன்றம், இதை தடுக்க பார்கிறதே என்ற வாதம். எத்தனையோ கலப்பட உணவுகளால் மரணங்கள் இருக்க, கஞ்சாவை தடை செய்வது ஏன் என்ற ரீதியில் இருக்கு. ஹெல்மட் போடுவதால் சாகாமலேயே இருக்க முடியாதுதான். ஆனால், ஹெல்மட் போட்டால் எதிர்பாராத மரணங்களை குறைக்க முடியும் என்பது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையே. இறந்து போன 4000 பேரில் ஹெல்மட் அணிந்திருந்தால் ஒரே ஒருவர் காப்பாற்றப்பட்டு இருந்தாலும் அது கட்டாயப்படுத்தப்பட வேண்டியதே. கார்களில் சீட் பெல்ட் அணிந்திருந்தாலும் சில நேரங்களில் இறப்பை தடுக்க முடியாது. அதனால் அதை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை என்றும் சொல்லிவிடுவோமா? காக்கப்படும் ஒவ்வொரு உயிரும் ஒரு குடும்பத்தின் ஆதாரம் என்று ஏன் புரியவில்லை. போலீஸ் லஞ்சம் வாங்கட்டுமே. நீங்கள் ஹெல்மட் அணியும் பட்சத்தில் அதை தவிர்க்க முடியுமே! அதை செய்வதை விட்டு, நான் அணிய மாட்டேன், அவர்கள் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று சொல்வது பொறுப்பின்மையைக் காட்டுகிறது. எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். ஏனெனில் அந்த மாதிரி உலகில் எங்கும் இல்லை, நடைமுறை சாத்தியமும் இல்லை என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள்.

Mohankumar Raja : இந்த அரசு முதலில் அடிப்படை வசதியான தரமான சாலைகளைப் போடட்டும். கான்ட்ராக்டர்களுடன் கை கோர்த்துக்கொண்டு கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு, தரத்தில் முன்னேறட்டும். சாலைகளிலுள்ள குண்டு குழிகள்தாம் முதல் அபாயம்!

Suryagnaneswar : உயிர் பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அணியுங்கள், தலைக்கவசம் உயிர் கவசம், குடும்ப பாதுகாப்பிற்கு ஹெல்மெட் அவசியம் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் மக்கள் கண்ணில் படும்படி வைத்துவிட்டு சிவனே என்று இருந்துவிட வேண்டியதுதானே - சிகரெட்டுக்கும், மதுபானத்திற்கும் எச்சரிகை வாசகங்களை வைத்துவிட்டு இருப்பதுபோல. தமிழ்நாடு போன்ற வெப்பம் அதிகமுள்ள பகுதியில் சட்டம் போட்டவர்களை 12 மணி வெயிலில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வண்டியை ஓட்டச் சொல்லவேண்டும். அப்போதுதான் சட்டத்தின் வாயிலாக பொதுமக்களிடம் திணித்திருப்பது தவறு என்று புரிய வரும்.

shankaran : நான் என் பிள்ளைகளை (இரண்டு) பள்ளிக்கு கூட்டிப்போக வேண்டும். திரும்பும் போது மூன்று ஹெல்மெட்டுகள் (வியாபாரி போல) எப்படி எடுத்து வர முடியும்? வழியிலே எனக்கு சர்க்கஸ் செய்து சங்குதான்!

skv : சில ஆயிரம் தந்து வண்டி வாங்குகிறீங்க. ஹெல்மெட் வாங்க எதனால் சோம்பல் அல்லது சிக்கனம்?

kiruba : ஹெல்மெட் போடுவது நல்லதுதான். ஆனால், இப்படி பயம் காட்டி செய்ய வேண்டாம். ஹெல்மெட் போட்டால் ரியர்வீயூ கண்ணாடி அவசியம்.

sivakamy : இது என்ன அநியாயமா இருக்கு? பைக்கிலிருந்து தூக்கியடித்து நாம் விழும்போது தலையில் பலத்த அடிபட்டால் சம்பவ இடத்திலேயே மரணம் - நீங்கள் சொல்வது போல் உடம்பில் அவ்வளவு அதிகமாக வாய்ப்பில்லை. நெஞ்சுப்பகுதியிலோ வயிற்றுப் பகுதியிலோ, கழுத்துப் பகுதியிலோ வேறு வாகனங்கள் ஏறி இறங்கினால்தான் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. நம் உயிரை பாதுகாக்க நமக்குத்தான் அக்கறை இருக்கவேண்டுமே ஒழிய, அரசு இதில் தேவையே இல்லை. நம்மை நம்பிதான் நம் குடும்பமே இருக்கிறது.

anandh : சல்மான்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி கொலை செய்தால் தண்டனையில்லை, மாறாக சாமான்ய மக்களின் இயலாமையை ஏகடியம் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாதது. ஹெல்மெட் அணியாதோர்க்கு அபராதத் தொகையை அதிகப்படுத்தலாம். ஆனால், ஓட்டுநர் உரிமம் ரத்து என்பது அதிகப்படியான தண்டனை. இவ்வகையான தண்டனை சட்டங்கள், போக்குவரத்து துறையும், காவல்துறையும் லஞ்சம் வசூலிக்கவே பயன்படும். வாகனங்கள் அனைத்தும் 60 கி.மீ. வேகத்திற்கு மேல் சென்றால் வாகன உரிமம் ரத்து என ஆணையிடுமா உயர் நீதிமன்றம்? தரமான சாலைகள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமா உயர் நீதிமன்றம்? 60 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களின் உற்பத்திக்கு தடை விதிக்குமா உயர் நீதிமன்றம்? சாலை விபத்துகளுக்கு பெரும்பகுதி காரணமாக அமையும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடச் சொல்லுமா உயர் நீதிமன்றம்?

M. muthumaran : நீதிமன்றத்துக்கு எதிரான இக்கேள்விகள் சரியே என வைத்துக்கொள்வோம். ஆனால், அதிகமாக பார்த்தால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களுடைய இறப்பு விகிதம்தான் அதிகமாக உள்ளது. அப்படி பார்க்கும்பொது நாம் ஏன் இதை ஒரு பெரிய விசயமாக பேச வேண்டும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அதனாலதான் முதலில் தலைக்கு பாதுகாப்பு கொடுக்க முன்னுரிமை போல தெரிகிறது. என்னை பொறுத்தவரை இது சரியானதுதான். ஒரு நாளைக்கு நாம் தேவையில்லாத செலவு எவ்வளவோ செய்கிறோம். ஆனால், உயிருக்கு முக்கியம் தலை. அதற்கு ஒரு பாதுகாப்பு தேவை என்பதை பார்க்கும்போது இது சரிதான் என்பது பொதுமக்களில் ஒருவனான என் கருத்து.

EMG.sarathy : வண்டியை ஓட்டுபவர்கள் மட்டும் ஹெல்மெட் போட்டா போதாது... பின்னால் உட்கார்ந்துகொண்டு போறவர்களும் ஹெல்மெட்டை போட சொன்னா... 'டூ வீலர் ஸ்டாண்ட்ல வண்டிய விடவே இடம் இல்லை ஹெல்மெட்டை வேற தூக்கிக்கொண்டு வந்துட்டியா, இடம் இல்ல போ'ன்னு சொல்வாங்க.

gouthamanaath : 360 கோணங்களிலும் வாகனங்கள் வரும் சாலைகளை உடைய நாடு நம்நாடு. அப்படி இருக்கையில் ஹெல்மட் அணிந்தால் பக்கவாட்டில் வரும் வாகனங்களை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஹெல்மட் அணிய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் மக்கள் அணியாமல் வாகனம் ஓட்டும்போதே அதில் சில குறைகள் உள்ளதை அரசோ, நீதிமன்றமோ உணர வாய்ப்பு இல்லை. சட்டம் இயற்றுபவர்கள் காரில் செல்பவர்கள்! 1. முடி கொட்டும். 2. தலைக்குள் வேர்ப்பதால் கடும் கோபம் வரும். 3. பக்கவாட்டில் பார்க்க முடியாததால் விபத்து ஏற்படும். 4. ஹெல்மெட்டை வேலைசெய்யும் இடத்தில எங்கே பத்திரப்படுத்துவது. 5. ஹெல்மெட் லாக் வாங்கி வண்டியில் வைத்தாலும் தொலையும். 6. வயதானவர்களுக்கு ஹெல்மட் அணிந்து வண்டி ஓட்டுவது மிகவும் சிரமம் (பார்வை குறைபாடு, கவனமின்மை...). 7. பத்து கிலோமீட்டர் வேகம் மட்டுமே பயணிக்க கூடிய வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில் ஹெல்மட் தேவை பெரும்பாலும் இல்லை. 8. டி.வி.எஸ்.50ல் செல்பவர்கள்கூட ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது மிகுந்த சங்கடங்கள் கொண்டது. 9. திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஹெல்மெட் ஒரு வரப்பிரசாதம். (எவனையும் கண்டுபிடிக்க முடியாது) 10. வழக்கமா ஹெல்மெட் போட சொல்லிட்டு கொஞ்ச நாள்ல விட்டுடுற மாதிரி இப்போதும் விட்டுடுங்க. உங்க வேண்டுகோளுக்கு இணங்க வாங்கிடுறோம் ஹெல்மட்டை. ஐயா.... தொடர்ந்து போட மட்டும் சொல்லாதீங்க.

T.THANDAPANI : ஹெல்மட் அணிவதை நீதிமன்றம் அறிவுரையாகத்தான் சொல்லியிருக்க வேண்டும் ஹெல்மெட் அணியவில்லை என்று லைசன்ஸ் பறிப்பது கொடுமை. போகிற போக்கில் ரேசன் கார்டை பறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி:விகடன்

2 comments:

  1. உயிர் காக்கும் தலைகவசம் இருசக்கர ஓட்டிகளுக்கு மிகவும் அவசியம் இருப்பினும் ....???
    இந்தியாவில் இதுபோன்ற சட்டங்களால் மக்கள் கூடுதல் சிரமத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது.

    பொதுவாக ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள் கலையில் தலைக்கு பூவைத்து போட்டு வைத்து ரெட்டை ஜடை ,ஒற்ற ஜடை பின்னால் மற்றும் கொண்டை போன்றவற்றால் ஹெல்மெட் அணிவதில் தலை மற்றும் முகம் இவைகள் காற்று இன்றி சிரமம் ஏற்படும் .

    மேலும் வாகனங்களை Parking செய்யும்போது ஹெல்மட்டை கழற்றி வாகனத்தில் இட்டு செல்வதால் நமது நாட்டில் அவைகள் திருடுபோக வாய்புக்கள் அதிகம் .

    ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஒட்டுவோரை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம் மாறாக நமது நாட்டில் குற்றம் செய்வோர் அவற்றை ஒத்துகொள்வது கிடையாது ஆகவே ஏறக்குறைய இது ஒரு முகமூடியாகவும் பயன் படுத்தப்படும் .

    சீக்கியர்கள் டெல்லி பஞ்சாப்பில் இந்த தலை கவசத்திற்கு அவர்களின் தலைப்பாகையால் சிரமம் என்று கோர்ட்டில் முந்தய காலங்களிலேயே Stay வாங்கியதும் இது சமயம் ஒருகணம் நினைவு கூற படவேண்டும்.

    ReplyDelete
  2. ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் மணிக்கு 25 கி.மீ ஸ்பீடை தாண்டக் கூடாது என்று ஒரு போ(ர்)டு போட்டால்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.