.

Pages

Wednesday, October 15, 2014

காவல் நிலைய படுகொலையை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் - சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கடும் கண்டனம் !

தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய படுகொலை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் - சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
காவல் உதவி ஆய்வாளர், இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15.10.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தற்போது நடந்துவரும் சம்பவங்கள் தமிழக மக்களை அதிர்சி அடைய செய்துள்ளது. நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது காவல்துறையின் கொடூர ஆட்சியா? என தெரியவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுக்கா, எஸ்.பி.பட்டிணத்தை சார்ந்த செய்யது முகமது என்ற இளைஞரை, தகராறு செய்ததாக சொல்லி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கே கடுமையாக தாக்கப்பட்டு, அந்த காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் காளிதாஸ் என்பவர் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து இருக்கிறார். இதை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இதுநாள் வரையிலும் காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்கு புறமான மலைபகுதிகளுக்கு அழைத்து சென்று கொலை செய்தனர். ஆனால் தற்போது காவல் நிலையத்திலேயே வைத்து கொலை செய்யும் அளவிற்கு இந்த ஆட்சியில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா? என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒரு சிறுவனை காவல் ஆய்வாளர் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்ற காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இச்செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதுடன். காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் காவல்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
’’இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியபட்டினம் (எஸ்.பி.பட்டினம்) காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சையது முகமது என்ற இளைஞரை காவல்நிலைய சார்பு ஆய்வாளரான காளிதாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார். காவல்துறை அதிகாரியின் அரக்கத்தனமான இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறையினரில் சிலர் எந்த அளவுக்கு மனிதத்தன்மை அற்றவர்களாகவும், கொலைவெறி கொண்டவர்களாகவும் மாறி வருகின் றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம் ஆகும். காவல்துறையினர் பொதுமக்களின் நண்பர்கள் என்று அத்துறையின் தலைமை கூறிவருகிறது. காவல் நிலையத்திற்கு வருவோரை வரவேற்க வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது, காவல்நிலைய வரவேற்பு என்பதே அச்சமூட்டுவதாக உள்ளது.

சையது முகமதுவை கொலை செய்த காவல் அதிகாரியை அந்த குற்றத்திற்கான தண்டனை யிலிருந்து காப்பாற்றுவதற்காக கொல்லப்பட்டவர் மீது அவதூறு பரப்பும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது.

கொல்லப்பட்ட சையது முகமது தீவிரவாதி என்று காவல்துறையின் ஒருபிரிவினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இன்னொரு பிரிவினரோ, விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட சயைது முகமது காவல் நிலையத்தில் இருந்த சார்பு ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகவும், இதையடுத்து தான் தற்காப்புக்காக அவரை காவல் அதிகாரி சுட்டதாகவும் கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். ஆனால், நடந்த உண்மை வேறு ஆகும்.

சையது முகமது தீவிரவாதியோ அல்லது போக்கிலியோ அல்ல. அவருக்கும், இன்னொருவருக்கும் இடையிலான மோதல் பற்றி விசாரிப்பதற்காகத் தான் அவர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவரை விசாரித்த காளிதாஸ், கடுமையாக தாக்கியதுடன் உடலில் துப்பாக்கியை வைத்தும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் தம் மீதான தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத சையது முகமது காவல் அதிகாரியின் சட்டையை பிடித்து ஏன் என்னை தாக்குகிறீர்கள்? என்று கோபமாக கேட்டுள்ளார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத காளிதாஸ், வெறிப்பிடித்தவர் போல மாறி தமது துப்பாக்கியால் அப்பாவி சையது முகமதுவை சரமாரியாக சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் கத்தி வைத்திருந்தார் என்றும், அதைக் கொண்டு அதிகாரியை குத்த முயன்றார் என்பதும் நம்ப முடியாத கட்டுக்கதையாகவே தோன்றுகிறது. கொல்லப்பட்டவர் இஸ்லாமியர் என்பதாலேயே அவரை தீவிரவாதியாக சித்தரிக்க முயல்வது மோசமான அணுகுமுறை ஆகும். தங்களை பாதுகாத்துக் கொள்ள காவல்துறையினர் எந்த எல்லைக்கும் செல்வர் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை சையது முகமது கத்தியால் குத்த வந்தார் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அவரை காலுக்கு கீழ் சுட்டு செயலிழக்க வைத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மிகவும் நெருக்கமாக நின்று மார்பில் சுட்டுக் கொன்றுள்ளார். இதிலிருந்தே இது என்கவுண்டர் அல்ல; வெறியுடன் நடத்தப்பட்ட படுகொலை என்பதை உணரலாம். நடத்தப்பட்டது உண்மையான என்கவுண்டராக இருந்தால், பத்திரிகையாளர்களை அழைத்து நடந்தது என்ன? என்பதை காவல்துறையினர் விளக்கியிருக்க வேண்டும். ஆனால், அனைத்துக் காவலர்களும் காவல் நிலையத்திலிருந்து ஓடிவிட்டதுடன், சார்பு ஆய்வாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்திருப்பதிலிருந்தே காவல்துறை விளக்கம் பொய் என்பதை உணர முடியும்.

தமிழக காவல்துறையினர் எந்த சட்டத்தையும், விதிகளையும் மதிப்பதில்லை. இதற்கு முன் கடந்த 07.01.2014 அன்று சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 15 வயது இஸ்லாமிய சிறுவனை ஆய்வாளர் புஷ்பராஜ் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து தொண்டையில் சுட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகும் முன் இப்படி ஒரு படுகொலை நடந்துள்ளது. என்கவுண்டர்கள் தடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்ட சில வாரங்களில் இப்படி ஒரு போலி என்கவுண்டர் நடத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இதற்கு மேலும் தொடருவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கில் 08.08.2011 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘போலி என்கவுண்டர்களை கொடூரக் கொலைகளாக கருத வேண்டும்.

இதை அரிதிலும் அரிதான நிகழ்வாக கருதி இதற்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்’’ என்று பரிந்துரை வழங்கியிருந்தது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் காளிதாசை கைது செய்து விசாரித்து தண்டிக்க வேண்டும். கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மற்றவர்களை மதிப்பது எப்படி? மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வது எப்படி? என்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.’’

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
''இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, சுந்தரபாண்டியபட்டினம் என்னுமிடத்தில் காவல் நிலையத்தில் சையத் முகம்மது என்னும் இசுலாமிய இளைஞர் உதவி ஆய்வாளர் காளிதாசன் என்பவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட சையத் முகம்மது, விசாரணை செய்த உதவி ஆய்வாளர் காளிதாசன் அவர்களை அரிவாளால் தாக்கியதாகவும் அதனால் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் உதவி ஆய்வாளர் தனது கைத்துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாகவும் அதில் சையத் முகம்மது பலியானதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

 காவல் நிலையத்திலேயே அதிகாரிகளைத் தாக்கும் அளவுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.  எனவே, சையத் முகம்மது உதவி ஆய்வாளரைக் கொடூரமாகத் தாக்கினார் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. காவல்துறையினரின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மையில் உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி மாண்புமிகு லோதா வழங்கிய தீர்ப்பு ஒன்றில், காவல்துறையினர் ‘என்கவுன்ட்டர்’ என்னும் பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கொலை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில், தமிழக அரசு சையத் முகம்மதை படுகொலை செய்த உதவி ஆய்வாளர் காளிதாஸ் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும்.  தற்போது அவரை இடைநீக்கம் செய்திருப்பது போதிய நடவடிக்கை ஆகாது. தமிழகக் காவல்துறையே அவ்வழக்கை விசாரிப்பது பொருத்தமாக அமையாது.

எனவே அவரை முற்றிலுமாக பணிநீக்கம் செய்து, வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான சையத் முகம்மது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 25 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமெனவும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் ‘என்கவுன்ட்டர்’ எனும் பெயரில் ஏற்கனவே பலர் படுகொலை செய்யப்பட்டி ருக்கின்றனர்.  அதன் மீது எத்தகைய விசாரணை நடவடிக்கையும் மேற்கொள்ளப்ப டவில்லை என்பது வேதனைக்குரியதாகும். காவல்துறையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தமக்கு வேண்டாதவர்களையும் பழி தீர்த்துக்கொள்வதற்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு வளர்ந்திருக்கிறது.  ஆகவே, எந்தவகையிலும் என்கவுன்ட்டர் நடவடிக்கையை ஏற்க இயலாது.  தமிழக அரசு ‘என்கவுன்ட்டர்’ போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
நேற்று மாலை இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது என்ற இளைஞரை, காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் காளிதாஸ் அவர்கள் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார். முன்னதாக அடித்துக் கொன்ற பிறகுதான் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
செய்யது முகம்மது கத்தியால் கீறியதால் தான் சுட நேர்ந்தது என்று சினிமா பாணியில் வழமைப்போல் காவல்துறை விளக்கம் தந்தது. அவரிடத்தில் தவறு இருந்தாலும் கூட, சுட்டுக் கொல்வதற்கு சட்ட அனுமதியை காவல்துறைக்கு யாரும் தந்துவிடவில்லை.

இதுபோன்று ஒரு நிகழ்வு சென்னைக்கு அருகே நீலாங்கரையில் தமிமுன் அன்சாரி என்ற சிறுவன் காவல்துறையால் சுடப்பட்டார். தொடரும் இதுபோன்ற அராஜகங்களை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்களை கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்க வேண்டும். தற்போது காளிதாஸ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எந்த முகாந்திரமும் இல்லாமல் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு, கடுமையாக நடந்த காளிதாஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகிறது. இல்லையெனில் கடுமையான தொடர் போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தும் என்று தமுமுக எச்சரிக்கிறது.

அன்புடன்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக

காவல் நிலையத்தில் விசாரணை கைதி சையத் முஹம்மதுவை சுட்டுக் கொலை செய்த உதவி ஆய்வாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவரது குடும்பத்திற்க்கு 50 லட்சம் இழப்பீடு தழிழக அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலப் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணத்தை சார்ந்த சையத் முஹம்மதுவை காவல் நிலையத்தில் அழைத்து, அங்கு உதவி ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதை தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது,

சட்டத்தை மதிக்க வேண்டிய காவல்துறையினரே, சட்டத்தை கையில் எடுத்து சட்டத்தை மீறுவதும் தங்களுக்கு பிடிக்காதவர்களை கொலை செய்து என்கவுண்டர் என்று கூறுவதும் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.

இதற்கு முன் கானத்தூரில் விசாரனைக்கு அழைத்துவரப்பட்டவர் சுடப்பட்டார். விசாரனைக்கு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டவர் காவலரை தாக்கும் அளவுக்கு தைரியம் உடையவராக இருக்கமாட்டார். தாக்கியதாக சொல்லப்படும் நேரத்தில் மற்ற காவலர்கள் எங்கே போனார்கள்? காவல்துறை சொல்வது நம்பும்படி இல்லை. தற்காத்து கொள்ள சுடுவது சட்டத்தை மீறும் செயளாகும்.

தழிழக அரசு சையத் முஹம்மதுவை கொலைசெய்த உதவி ஆய்வாளர் காளிதாசனை நிரந்தர பணி நீக்கம் செய்து, அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். சையத் முஹம்மது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ஆா்.ரஹ்மத்துல்லாஹ்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
15.10.2014

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
’’இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செய்யது முகம்மது என்ற இளைஞர், கைகலப்பு புகார் தொடர்பாக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சப்-இன்ஸ்பெக்டரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதும், அவரை சுட்டுக் கொல்வதும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை ஒருபோதும் ஏற்க இயலாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல்நிலைய விசாரணையின் போது தன்னை கொலை செய்ய முயற்சித்ததால் தற்காப்புக்காக சுட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமீபத்தில் சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரால் சிறுவன் சுடப்பட்டது முதல் பல்வேறு காவல்நிலைய மரணங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர், சட்டம் ஒழுங்கை மீறும் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களது குற்றங்களை மறைக்க முயற்சி மேற்க்கொள்வதும், குற்றவாளியான அதிகாரியை காப்பாற்றும் வகையில் அறிக்கை விடுவதும் காவல்துறை மதிப்பை கெடுக்கும் செயலாகும்.

இந்த சம்பவத்தில் பலியான செய்யது முகம்மது மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் இல்லை. காவல்நிலைய வாக்குவாதத்தால் ஏற்ப்பட்ட கைகலப்பில் தான் அவர் பலியானதாகவும், அந்த தாக்குதலில் செய்யது முகம்மது பலியானதால் அதனை மறைக்க துப்பாக்கியால் சுடப்பட்டு தற்காப்பு தாக்குதல் என சம்பவத்தை திசை திருப்பும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக்கூத்தாக்கிவிடும். காவல் நிலையங்களில் இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடருமானால் காவல்துறை மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையும் இல்லாமல் போகும்.

ஆகவே இந்த சம்பவத்தை உச்சநீதிமன்ற நெறிமுறை வழிகாட்டுதலின் படி குற்றச்செயலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் அவருடன் துணை நின்ற காவல்துறையினரின் மீது கொலைவழக்கு பதிவு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் பலியான இளைஞர் கூலி வேலை செய்து தனது குடும்ப பொருளாதாரத்தை நிவர்த்தி செய்துவந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரின் இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என எஸ்.டி.பி.ஐ சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம் பாக்கர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது...
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த மெக்கானிக் அருள்தாஸ் என்பவர் கொடுத்த ஒரு புகார் தொடர்பாக எஸ்.பி பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சைய்யது முஹம்மது என்பவரை காவல் நிலைய துணை ஆய்வாளர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறார்.

விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நியாயப்படுத்த முடியாத துணை ஆய்வாளர் காளிதாஸின் இந்த செயலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

விசாரணைக்காக ஒருவரை அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிகள் எதையும் பொதுவாக காவல்துறை பின்பற்றுவதில்லை என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகும்.

அப்பட்டமான கொலையை நியாயப்படுத்தும் வகையில், சைய்யது முஹம்மது கத்தியால் துணை ஆய்வாளர் காளிதாசை குத்தியதால் தன்னை தற்காத்துக்கொள்ள காளிதாஸ் அவரை துப்பாக்கியால் சுட்டார் என்கிறது காவல்துறை.

இந்த சம்பவம் நடைபெற்ற சூழலில் வேறு காவலர்களும் காவல்நிலையத்தில் இருந்துள்ளனர். இருந்தும் கத்தியால் குத்த முயற்சித்த சைய்யது முகம்மதுவிடமிருந்து கத்தியைப் பிடுங்கவோ, அவரை மடக்கிப் பிடித்து கைது செய்ய முயற்சிக்காமல் துப்பாக்கி பிரயோகம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த கொலைவெறிச் செயலில் ஈடுபட்ட துணை ஆய்வாளர் காளிதாஸ் மீது நேர்மையான விசாரணை நடத்தி, சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதியாமல் அவர் மீது கொலைவழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். பலியான சைய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய வகையில் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

பொதுவாக இதுபோன்ற சம்பவங்களின்போது, குற்றச் செயலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியை பாதுகாக்கும் வகையில்தான் காவல்துறையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்பதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் திறந்த நிலை விசாரணை நடத்தி அறிக்கைகள் மூலம் சுட்டிக் காட்டியுள்ளன.

இதுபோன்ற காவல் மரணங்களின் பல வழக்குகளில் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன.

காவல்துறையின் இத்தகு நடவடிக்கைகள் காவல்துறை அதிகாரிகளின் குற்ற நடத்தையை தடுக்காது என்பதை காவல்துறை தலைமை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காதவாறு குற்றத்தில் ஈடுபடும் அதிகாரிகளை கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

"காவல்துறையினர் அறிவுப்பூர்வமான, அறிவியல்பூர்வமான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்; பொது மக்களுக்கு எதிராக துப்பாக்கியை பிரயோகிப்பதை தவிர்க்க வேண்டும்'' என காவல்துறை தொடர்பான நிகழ்சிகளில் பங்கேற்கும் தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாக உள்ளது.

காவல் மரணங்கள் அதிகம்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காவல் மரணங்கள் அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன என்பது கவனத்திற்குரியது. தமிழக காவல்துறை தலைமை காவல்துறை அதிகாரிகளின் குற்றச் செயல்களை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது என்று எஸ்.எம். பாக்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சட்டத்தைகாக்ககும்கடமைக்குகடன்பட்டகாவல்நிலையமே சட்டதைமீறி;கொலைசெய்யும்அளவுக்குசட்டம்ஒழுங்குகெட்டுவிட்டது.உண்மையானகொலைகார்கள்குற்றவாளிகள் லஞ்சத்தின் வழி வெளியே வந்து விடுகிறார்கள். ஆனால் லஞ்சம் கொடுக்க முடியாதஅப்பாவிகள்பலியாகிறார்கள் இது போன்ற அரக்கதனமான காவலர்களையும் மக்கள் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும்..என்கவுண்ட்டர்அப்பாவிகளையும் காவலர் களே இஷ்டம் போல் சுட்டுக் கொல்லும் உரிமை யாகி விட்டது.

    ReplyDelete
  2. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெருவிப்பதொடு நின்று விடாமல் சட்டப்படி அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். எந்தவகைளும் அரக்கன் தப்பித்து விடக் கூடாது மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பது தான் கேள்வி? காவல் துறை இடம் காவு வாங்கும் இடமாக மாறிவிட்டது , காவல் துறை உங்கள் நண்பன் என்பது ஏட்டளவில் தான் உள்ளது மக்கள் மனதில் அல்ல ஏன்?, ரவ்டிஉம் போலிசும் ஒன்னு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.