.

Pages

Tuesday, June 25, 2019

மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் திறப்பு!

மல்லிபட்டினம், ஜூன் 25
அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மீன்பிடி துறைமுகத்தை திங்கள்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

துறைமுகம் மறுசீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், மல்லிப்பட்டினத்தில் படகு அணையும் துறை, படகு பழுதுபார்க்கும் தளம், நிர்வாக அலுவலக கட்டடம், மீன் ஏலக் கூடங்கள் 2, வலை பின்னும் கூடங்கள் 2, முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரண்டு, சிமெண்ட் சாலைகள், மழைநீர் வடிகால்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், துறைமுகப் பகுதியில் தூர்வாரும் பணி ஆகியவை இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், துறைமுகத்தில் 213 விசைப்படகுகளும், 102 வல்லம் படகுகளும், 967 பாரம்பரிய மீன்பிடி படகுகளும் நிறுத்தம் செய்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4,249 மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவர்.

புதிய மீன்பிடி துறைமுகம் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாள்வதற்கும், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். மீன்களை ஏற்றுமதி செய்ய வழி செய்யப்பட்டு உள்ளதால், அரசுக்கான வருவாய் கணிசமான அளவில் பெருகும். துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் வேலை வாய்ப்பு ஏற்படும் என மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.

மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு, ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ. மதிவாணன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவகுமார், மீன்வளத் துறை ஆய்வாளர் கெங்கடேஸ்வரி, சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் வீர. அண்ணாதுரை, மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் அல்லாபிச்சை மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.