.

Pages

Wednesday, October 21, 2015

2016 தமிழக சட்டமன்ற தேர்தல்: 'அரசியல் விமர்சகர்' அதிரை பாருக்கின் சிறப்பு பார்வை !

2016 தமிழக சட்டமன்ற தேர்தல்:
இதுவரை நீங்கள் எந்த ஊடகங்களிலும் படித்திடாத, பார்க்காத சில முக்கிய தகவல்களை இதன்மூலம் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். காரணம் இந்த தேர்தல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பரபரப்பானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஆனால் இன்றுவரை எந்தவொரு பிரதான அரசியல் கட்சியும் என்னமுடிவு எடுப்பது என்பதை இன்றுவரை தீர்மானிக்க முடியவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களை சரியாக முன்கூட்டியே கணித்து சம்மந்தப்பட்ட கட்சித் தலைவர்களுக்கு நான் தெரியப்படுத்தியது பெரும்பாலனோருக்கு தெரிந்த விசயம் தான். வரவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை 3 காரணங்கள் தீர்மானிக்க போகின்றன என்பதையே தற்போது என்னால் கூறமுடியும். இதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் சம்மந்தப்பட்ட கட்சித்தலைவர்களின் மனநிலையை பொருத்தது.

முதல் காரணம்: 
234 தொகுதிகளிலும் பதிவாகக் கூடிய வாக்குகளில் 45 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை  அனுதாப ஓட்டுக்களே அடுத்த ஆட்சியை முடிவு செய்யக் கூடியதாக இருக்கும். 

இரண்டாவது காரணம்: 
வேட்பாளர்கள் தேர்வு 

மூன்றாவது காரணம்: 
கூட்டணி மற்றும் வலுவான பிரச்சாரங்கள் 

அனுதாப  ஓட்டுக்கள் என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி அமைக்க தகுதியான கட்சிகளுக்கு தான் கிடைக்கும். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், தே.மு.தி.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இந்த நான்கு கட்சிகள் தான் அந்த அனுதாப வாக்குகளை குறிவைக்கக்கூடிய கட்சிகளாக உள்ளன. அதே நேரத்தில் அனுதாப வாக்குகள் என்பது கட்சிக்கு கட்சி மாறுபடும். ஒவ்வொரு கட்சிக்கும், வௌ;வேறு காரணங்களுக்காக இந்த தேர்தலில் அனுதாப வாக்குகள்  கிடைக்கும். இந்த வகையில் நீண்டகாலமாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத, ஆட்சி செய்ய தமிழக மக்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கின்ற காங்கிரசுக்கும் ( நான் குறிப்பிடுவது இந்திய தேசிய காங்கிரசை) தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கும் மிக அதிக அளவில் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடிய சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளன. இதை சரியாக, முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டியது இந்த கட்சிகளின் பொறுப்பாகும்.

அனுதாப ஓட்டுக்கள் நீங்களாக (45 முதல் 55 சதவீதம்) வேட்பாளர்கள் தேர்வும் வலுவான பிரச்சாரங்களும் முக்கியமானவை என்பதையும், சம்மந்தப்பட்ட கட்சிகள் தீவிரமாக சிந்தித்து செயல்படவேண்டும். இளைஞர்கள், பெண்கள் மற்றும் திறமையான புதிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து இந்த தேர்தலில் போட்டியிட செய்வது முக்கியமான ஒன்றாகும். அப்படி இல்லாமல் பழைய முறைப்படி ஏற்கனவே 2 தடவைகளுக்கு மேல் தேர்தல்களில் (சட்டமன்ற தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல்) போட்யிட்டு வென்றவர்கள் அல்லது தோற்றவர்கள், மிக வயதானவர்கள் (70 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும்), திறமை இல்லாதவர்கள், ஜாதி ஓட்டுகளை மட்டும் நம்பக்கூடியவர்கள் ஆகியோர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளித்தால் கடுமையான தோல்வியே மிஞ்சும்.

தேர்தல் முடிவு வெளியாகும் போது நான் கூறிய கருத்துக்கள் எல்லாம் உண்மையாகிவிட்டது என்று கட்சிகள் புலம்பவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ( மே மாதம் 2014-ல் நடந்து). எப்படி கூட்டணி அமைக்கவேண்டும் என்பது தொடர்பாக 3 பிரதான கட்சிகளுக்கு வழக்கம்போல் தெளிவாக நான் முன்கூட்டியே முக்கிய ஆலோசனைகளை வழங்கியும் அதை அவர்கள் புறக்கணித்து வேறுவேறு பாதையை தேர்ந்தெடுத்ததால் மோசமான தோல்வியை சந்தித்தார்கள்.

என்னுடைய இந்த செய்திகளுக்கு பிறகு இன்னும் ஓரு சில வாரங்களில் யார் யாரோடு அணி சேர்வது என்பதில் தெளிவான முடிவு ஏற்படும். அதுவரை ஊடகங்களில் வரக்கூடிய எந்த செய்தியும் உறுதியானவைகளாக இருக்காது. நான்கு கட்சிகளை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறீர்களே அப்படி என்றால் தமிழகத்தில் இருக்கின்ற மற்ற கட்சிகள் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படாதா? என்ற சந்தேகம் உங்களுக்கெல்லாம் வரக்கூடும்.

இதற்கான பதில் நான், இதில் மேலே சொன்ன காரணத்தை மட்டுமே திரும்ப சொல்லமுடியும். அதாவது ஆட்சி அமைக்கக்கூடிய செல்வாக்குள்ள கட்சிகள் எவை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் மக்கள் மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை மையமாக வைத்தே இந்த கருத்துக்களை நான் தெரிவிக்கின்றேன். வாக்குபதிவின் போதும் இதே மனநிலை தான் தமிழக மக்களிடம் இருக்கும் என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்.

காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா ?

திமுக தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா?

அஇஅதிமுக தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா?

தேமுதிக தனித்து போட்டியிடுமா? கூட்டணி அமைக்குமா?

நால்வர் கூட்டு இயக்கம் (விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தனித்து போட்யிடுமா? ஏதாவதொரு பிரதான கட்சியுடன் கூட்டணி அமைக்குமா?

பா.ம.க , த.மா.கா போன்ற கட்சிகளும் சில இயக்கங்களும் (சிறுபான்மை இயக்கங்கள் மற்றும் கட்சிகள் உட்பட) எந்த அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள்?

பா.ஜ.க கட்சி என்ன முடிவெடுக்கும்?

என்பதற்கெல்லாம் கூடிய விரைவில் (வரும் நவம்பர் இறுதிக்குள்) பதில் கிடைக்க ஆரம்பித்துவிடும்.

காங்கிரசை விட்டு பிரிந்து செல்லக்கூடிய கட்சிகள் எல்லாம் அவர்களது கட்சியின் பெயரில் காங்கிரஸ் என்ற பெயரையே பயன்படுத்துகின்றார்கள். இல்லையென்றால் அவர்களது அரசியல் பயணம் பலனற்றதாகிவிடும்.

இதற்கு நாட்டில் பல கட்சிகளை உதாரணமாக சொல்லலாம்.
திரிணாமுல் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் (புதுச்சேரி – திரு.என்.ரெங்கசாமி), த.மா.கா. (தமிழ் மாநில காங்கிரஸ்), தேசியவாத காங்கிரஸ் (  திரு. சரத் பவார்). ஓய்எஸ்ஆர்  காங்கிரஸ் (ஆந்திரா – ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்த திரு.ராஜசேகர ரெட்டி அவர்களுடைய மகன் ஜெகன்மோகன ரெட்டி தலைமையிலானது ) போன்ற சில கட்சிகள் ஏதோ சில காரணங்களுக்காக பிரிந்து செயல்பட்டாலும், அந்த கட்சிகள் எல்லாம் இந்திய தேசிய காங்கிரஸின் பாதி அங்கம் தான் என்பதை இந்த நாட்டுமக்கள் உணராமல் இல்லை.

நாட்டில் தற்போது நிகழந்து கொண்டிருக்கும் மோசமான சில சம்பவங்களை மக்கள் மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கின்றனர். நாட்டில் தீர்க்கப்படாத எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளபோது மாட்டுக்கறிக்கும், ஒட்டகக்கறிக்கும் மிகப்பெரிய கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை எல்லாம் தீர்க்க அரசியல் கட்சிகள் கோர்ட்டு கதவை தட்டக்கூடிய அவலநிலை உருவாகிவிட்டது. எந்த கறியை யார் சாப்பிடுவது என்பதை முடிவு செய்வதெல்லாம் நீதிபதிகள் வேலையா ? அவர்களுக்கு வேறு வேலை கிடையாதா ? மதசார்பற்ற நாடு என்று சொல்கிறோம். ஆனால் அந்த நிலைக்கு இன்னும் இந்த நாட்டில் பல கட்சிகள் முன்னேறவில்லை.

எனவே இதில் உள்ள கருத்துக்களை சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக பரிசீலித்து ஓட்டுக்கு பணம் கொடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து நேர்மையான முறையில் ஆட்சிக்கு வர முயற்சி செய்யவேண்டும். மேலும் பல விஷயங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வெளியிடுவேன்.

நன்றி!

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்' 
68 காலியார் தெரு, 
அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை தாலுகா, 
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு. 

1 comment:

  1. அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது தமிழகத்தை ஆண்ட ஆளும் திராவிட கட்சிகள் முன்பெல்லாம் முன்னணி நடிகர்களிடம் ஆதரவை பெறுவார்கள் இப்போதெல்லாம் வீதிக்கு வந்து மக்கள் குறை என்னன்னு கேட்டு தேர்தல் அறிக்கை செய்கிறார்கள் ஆக மொத்தத்தில் இலவசத்தை யாரு அள்ளி கொடுப்பா என்று தான் மக்கள் பார்ப்பார்கள். மதுவிலக்கை மையமாக வைத்து அரசியல் பண்ணும் பாமக; திராவிடம் என்றால் ஊழல்... ஊழல் என்றால் திராவிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் இவர்கள் மாறி மாறி திராவிடக் கட்சியில் இருந்ததை "சந்தர்ப்ப வாதின்னு " மக்கள் நினைக்கிறார்கள் இவர்களின் முதல்வர் கனவு பலிக்காது.
    திமுக அனைத்து கட்சிகளையும் தன் அணியில் இணைப்பது கஷ்டம் காரணம் ஊழல்; மெகா கூட்டணி அமைத்து எல்லோருக்கும் சீட்டு கொடுத்தால் குறு சிறுபான்மை அரசாக அமையலாம்.

    முன்பு தேர்தலில் கிடைத்து போல் இல்லாமல் அம்மா தனித்து நின்று அனுதாபளையோடு மீண்டும் வரவாய்ப்புண்டு ; நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படுத்திய கேஜ்ரிவால், நடிகர் விஷால் போல் தமிழக சட்ட சபை தேர்தலில் நடக்க வாய்ப்பே இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.