.

Pages

Tuesday, July 21, 2015

வெளிநாட்டு வேலைக்கு செல்கிறீர்களா...? ஜாக்கிரதை !

'பையன் என்ன பண்றாரு...?

'பயணத்துல இருக்காரு'

-  என வெளிநாட்டு வேலையை பற்றி பெருமையாக சொல்ல கேட்கிறோம் .

இன்னும் பலர் 'Camp -dubai' என்று போட்டு மாப்பிள்ளையின் வேலை பற்றி திருமண அழைப்பிதழில் பெருமையாகப் போடுவதை காணலாம்.

இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலைக்காக, படிப்புக்காக ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' - பொதுவாக அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கூற்று பொருத்தமாக இருந்தது. இப்போது வெளிநாட்டு  நிறுவனங்களுக்கும் பொருந்தி வருகிறது. வேலைக்கு சேர்க்கும்போது தருவதாக கூறும் சம்பளம், சலுகைகள் எதுவும் தராமல் கொடுமைப்படுத்துவதும்,  'பார்த்தவரைக்கும் போதும்... இந்த வேலையே வேண்டாம்!' என தொழிலாளர்கள் தலைதெறிக்க தாயகம் திரும்புவதும் இப்போதெல்லாம் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வேலைக்காக வீடு, நிலத்தை விற்றும், கடன் வாங்கியும் பணம் சேர்த்தவர்கள், இறுதியாக அந்த பணத்தை சம்பாதிப்பதற்காகவாவது உழைப்போம் என தயாராகிவிடுகிறார்கள். அவர்கள் ஊருக்கு திரும்பியவுடன், இதைப்போல் ஏமாற்றி அடுத்த செட் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கின்றன மோசடி நிறுவனங்கள். ஏமாற்றுவதும், ஏமாறுவதும் தொடர்கின்றன.

வேலை தேடிச் செல்பவர்கள், இதேபோல் அங்குள்ள நிறுவனங்களின் தரத்தினை தெரிந்துகொண்டுதான் செல்கின்றனரா என்றால் இல்லை. படித்து முடித்தவுடன், எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வெளிநாடு செல்வோரின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாக ஆகிவிடுகின்றன. பொறியியல் போன்ற மேல் படிப்பு  படித்தவர்களுக்கு பெரும்பாலும்  இந்த பிரச்னை இல்லை. குறைந்த அளவிலான கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தையல், கட்டுமானம், மீன் பிடித்தல், தோட்டத் தொழில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவோரின் நிலைமை பரிதாபத்துக்குரியது.

அதிக ஊதியம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி இங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள், அங்கு கொத்தடிமைகளாகவும், வேறு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதன் மூலம் படும் இன்னல்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்தாலும், இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடுகின்றன.

"இந்தியாவிலேயே ஏராளமான வேலைவாய்ப்புகளும், வியாபார வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. வெளிநாட்டு வேலை மோகத்தை ஒழித்துவிட்டு இங்கேயே வேலை, வியாபாரம் செய்தாலும் வாழ்வில் உயரலாம்" என்று சிலர் சொல்லி கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெளிநாடு செல்பவர் அதிகம் சென்று கொண்டுதான் இருக்கின்றனர்.

இவ்வளவு சிக்கலை கேட்டும், மக்களிடம்  வெளிநாட்டு மோகம் இன்னும் உள்ளதால் வெளிநாட்டில் வேலையை நாடுபவர்கள், முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் சாத்தியப்படும் என்பது குறித்து அறிய வேண்டும். பொதுவாக துபாய், ஓமன், அபுதாபி போன்ற கல்ஃப் நாடுகளில் எப்போதும் கட்டட வேலை நடந்துகொண்டே இருக்கும். அதனால் கட்டடத் கூலித் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பொறியாளர்களுக்கு அங்கே தேவை அதிகம்.

மலேஷியா, சிங்கப்பூரில் ரப்பர் தோட்டங்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு தோட்டத் தொழிலாளர் களுக்கு அதிக தேவை இருக்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் துறை யினருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

வெளிநாடு செல்ல நினைப்போர்  செய்ய வேண்டியது என்ன...
மத்திய  அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உரிமம் பெற்ற ஏஜென்சிகளே, வெளிநாட்டுக்குப் பணியாட்களை அனுப்பும் தகுதி பெற்றவையாகின்றன. ஒருவேளை நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏதாவது ஒரு ஏஜென்ஸியை அணுகும்பொருட்டு, அவர்களிடம் அரசாங்கத்தின் லைசென்ஸ் எண்ணைக் கேட்டு, அதை அயல்நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் வெப்சைட்டில் பரிசோதித்துக் கொள்ளுங்கள் (www.moia.gov.in).

பின் அந்த ஏஜென்சிக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் ஆட்கள்,  தேவைக்கான டிமாண்ட் லெட்டரில் அளிக்கப்பட்டிருக்கும் வேலை விவரம், சம்பளம், விடுமுறை நாட்கள், விதிமுறைகள் என அனைத்தையும் அந்த லெட்டரை கேட்டுப் பெற்று, தெரிந்துகொள்ளுங்கள். அந்த டிமாண்ட் லெட்டரில் வேலை வழங்கும் நிறுவனம்,  அந்த நாட்டில் பெற்ற லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதன் மூலம் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம். வேலைக்கு ஆள் எடுக்க, சம்பந்தப்பட்ட கம்பெனி,  தன் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து 'நோ அப்ஜெக்ஷன்' லெட்டர் வாங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை பார்ப்பவர், நிறுவனம் இருவருக்கும் அது சிக்கல்களைத் தரும்.

- ஷான்
நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.