.

Pages

Wednesday, January 24, 2018

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் மறியல் ~ 100 க்கும் மேற்பட்டோர் கைது!

ஒரத்தநாடு, ஜன.24
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தஞ்சாவூர் , ஒரத்தநாட்டில்
வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், கல்லூரி மாணவிகள் மறியல்
100 க்கும் மேற்பட்டோர் கைது.

தமிழக அரசு திடீரென பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 'குருவி தலையில் பனங்காயை வைத்தது' போல சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கும் மக்கள் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலமெங்கும் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர்சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பொதுமக்களை பாதிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும். ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தினாலே போக்குவரத்து கழகத்தை லாபத்தோடு நடத்த முடியும். நிர்வாகத்தை சீரமைத்து லாபநோக்கின்றி துறையை செம்மைப்படுத்த வேண்டும்  என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

வாலிபர் சங்கம் மறியல்
புதன்கிழமை அன்று காலை ஒரத்தநாடு அண்ணாசிலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, வாலிபர் சங்க ஒன்றியச்செயலாளர் ஏசுராஜா தலைமையில்  சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் அருளரசன், நிர்வாகிகள் ரகுபதி, வீர்ராகவன், அய்யாசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் 12 பேரை ஒரத்தநாடு காவல்துறையினர் கைது செய்தனர்.

கல்லூரி மாணவிகள்
"பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். அண்ணாசிலை அருகிலேயே மாணவிகளை இறக்கி விடாமல், கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவிகளை இறக்கி விடவேண்டும். இலவச பயண அட்டையில் பயணிக்கும் மாணவிகளை, பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம்  நிறுத்தி வைத்து, பயணிகள் ஏறிய பிறகு பேருந்தில் அனுமதிப்பது. இருக்கையில் அமர்ந்து உள்ள மாணவிகளை 'ஓசி டிக்கெட்' தானே.... நின்று வந்தால் என்ன ? என்று சொல்லி எழுப்பி விட்டு, மற்ற பயணிகளுக்கு இருக்கை ஒதுக்குவது போன்று மாணவிகளை அவமதிக்கும் செயல்களை கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தநாடு பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவிகள் 800 க்கும் மேற்பட்டோர், புதன்கிழமை அன்று கல்லூரி முன்பாக சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் 
தஞ்சாவூரில் மணலி ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, கரந்தை உமா மகேஸ்வரனார் கல்லூரி, கும்பகோணம் சங்கரா கல்லூரி, தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் மாணவர்கள் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணா, தமிழ்ப்பல்கலைக்கழக கிளை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.