.

Pages

Thursday, January 25, 2018

பேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் போராட்டம் (படங்கள்)

தஞ்சாவூர் ஜன.25-
தமிழக அரசு திடீரென பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி பொதுமக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதனை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சார்பு  அனைத்து இந்திய ஜனநாயக மாதர்சங்கம் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில், இரண்டு வாக்குப் பெட்டிகளை வைத்த மாதர்சங்க நிர்வாகிகள் பேருந்து கட்டண உயர்வை ஆதரிக்கிறோம். எதிர்க்கிறோம் என ஏதாவது ஒன்றிற்கு வாக்களிக்க சொல்லி, வாக்குச் சீட்டுகளை தந்து பொதுமக்களிடம் வாக்களிக்க செய்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவான நிலையில், பேருந்து கட்டண உயர்வை ஆதரிக்கிறோம் என ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகவே அனைத்து வாக்குகளும் பதிவாகின. இந்த நூதனப் போராட்டத்திற்கு பெருமளவு மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். மேலும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பயணிகளும் என்னவென விசாரித்து தெரிந்து கொண்டு கட்டண உயர்வுக்கு எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நூதனப் போராட்டத்திற்கு மாதர்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, மாநிலக்குழு உறுப்பினர் அபிராமி, தஞ்சை மாநகரச்செயலாளர் இ.வசந்தி, நகர தலைவர் வின்சிலா ராணி மற்றும் ஏராளமான மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாதர்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், " பேருந்து கட்டண உயர்வு சாதாரண ஏழை, எளிய, நடுத்தர  மக்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. மக்கள் விரோத தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, கட்டண உயர்வுக்கு ஆதரவு- எதிர்ப்பு என பொதுமக்களை வாக்களிக்க செய்தோம். அரசுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்கு கூட பேருந்து கட்டண உயர்வுக்கு ஆதரவாக பதிவாகவில்லை. தமிழக அரசு கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் பொதுமக்கள் போராட்டம் வெடிக்கும்" என்றார்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.