.

Pages

Thursday, October 1, 2015

முத்துப்பேட்டை சிறுவர்களின் மனிதநேயப் பணி !

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதன் அருகே உள்ள பஸ் ஸ்டான்டில் ஒரு மூதாட்டி பல மாதங்களாக பசி பட்டினியால் பரிதவித்து வந்தார். இவரது பெயர் பட்டு(75). இவர் முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த துரைசாமி என்பவரது மனைவி என்றும் இவருக்கு திருமணமான ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்றும் இருவரும் மூதாட்டி பட்டுவை கவனிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறினார் என்றும் தெரியவந்தது.

பின்னர் ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த மூதாட்டி பட்டு இந்த பேருந்து நிலையத்தில் தங்கி கொண்டு அப்பகுதியினர் கொடுப்பதை வாங்கி சாப்பிட்டு வந்தார். இதனை தினமும் பள்ளிக்கு செல்லும் பொழுது ஜுனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் பார்த்து வந்துள்ளனர். பல முறை மாணவர்களும் மூதாட்டிக்கு சிறு சிறு உதவிகளை செய்துள்ளனர். இதனால் மாணவர்களிடம் மூதாட்டி பட்டு அன்பு காட்டி வந்துள்ளார். தற்பொழுது மூதாட்டிக்கு மிகவும் உடல்நிலையில் மாற்றமும் இரவு மற்றும் வெயில் மழை காலங்களில் சிரமமும் ஏற்பட்டு வந்ததால் அவர் பரிதவித்து வந்தார்.

இந்த நிலையில் இதனைக் கண்ட மாணவர்கள் பசி பட்டினியால் பரிதவித்த ஆதரவற்ற இந்த மூதாட்டியை காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி ஜுனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் உமர் முக்தார் ( இவர் நிருபர் முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை அவர்களின் மருமகன் ஆவார் ), ஆகாஷ், கமருதீன், விக்னேஷ்வரன், முகம்மது பவாஸ் ஆகியோர் ஜுனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம் மூலம் திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்ற காப்பகத்தை தொடர்புக் கொண்டனர். இதற்கு காப்பக நிர்வாகத்தினர் மூதாட்டியை அழைத்த வர சம்மதித்தனர்.

அதன்படி மாணவர்கள் அனைவரும் மூதாட்டி பட்டுவை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று முதலில் மருத்துவ பரிசோதனை செய்தும் அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்தனர். பின்னர் மூதாட்டியை பள்ளிக்கு அழைத்து வந்தனர். அங்கே மூதாட்டி பட்டுக்கு முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மெட்ரோ மாலிக், செயலாளர் நடராஜ் சுந்தரம், கண்  சிகிச்சை சேர்மன் தாவூது மற்றும் வியாபாரி பாலகுமார் ஆகியோர் மூதாட்டிக்கு தேவையான பொருட்களை வழங்கினர். பின்னர் சிலரது உதவியுடன் மாணவர்கள் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் மூதாட்டி பட்டுவை ஏற்றிக் கொண்டு திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்ற காபகத்தில் சேர்த்தனர்.

மூதாட்டி பட்டு காரில் ஏறி செல்லும் பொழுது தனது உதவிய அனைவருக்கும் தனது நன்றியை கூறி விடைப்பெற்றார். பரிதவித்த மூதாட்டி மீது அக்கறைக் கொண்டு மனித நேயத்துடன் அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த மாணவர்களின் இந்த செயலைக் கண்ட பொதுமக்களும் வியாபாரிகளும் இதனை நேரில் கண்டு மனம் உருகி கண் கலங்கினர். 

மாணவர் உமர் முக்தார் அரசு மருத்துவ மனையிலிருந்து மூதாட்டியை கைப்பிடித்து அழைத்து வருகிறார். 
 
 

1 comment:

  1. முத்துப் பேட்டையில் மத நல்லிணக்கம் இல்லை என்று குழப்பம் விளைவிக்கும் பலருக்கு உமர் முக்தார் இந்தப் பா ட்டியைக் கைப்பிடித்து அழைத்துவரும் படத்தை அனுப்பி வையுங்கள்.

    கூப்பாடு போடுபவர்கள் கூப்ப்பாடு போடட்டும்.
    வெல்லட்டும் மனிதநேயமும் அரவணைப்பும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.