அதிரை பேரூராட்சியின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக மொத்தம் 34 பேர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் அதிரை பேரூராட்சி பகுதிக்கு இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றாலும், நகர் முழுதும் குவியும் குப்பை கூளங்களை தினமும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். இதற்காக தினமும் அதிகாலை பணியை தொடங்கும் இவர்கள் இரு குழுவினர்களாக பிரிந்து இரு வேறு பகுதிகளில் வலம்வருகின்றனர்.
அதிரையின் சுகாதார முன்னேற்றத்திற்காக எந்நேரமும் பாடுபடும் இவர்களுக்கு பணியின் போது ஏற்படும் நெருக்கடிகள், பொதுமக்களின் ஒத்துழைப்பு, குப்பை கூளங்கள் அல்லும்போது ஏற்படும் சங்கடங்கள் குறித்து அதிரை பேரூராட்சியின் 5 வது வார்டு முதல் 11 வது வார்டு வரை தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள் ஒரு குழுவினரின் பொறுப்பாளர் பழனியம்மாள் நம்மிடம் கூறுகையில்...
'எங்கள் குழுவினருக்கு ஒதுக்கிய வார்டுகளில் தினமும் குப்பை கூளங்களை அள்ளிச்செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதில் மனித மலம் உட்பட அள்ளிசெல்ல முடியாத அனைத்து பொருட்களையும் ரோட்டில் கொட்டிவிடுகின்றனர். துர்நாற்றம் வீசிவருவதையும் பொருட்படுத்தாமல் மிகவும் சங்கடத்துடன் அனைத்தையும் அள்ளிச்செல்ல வேண்டி உள்ளது.
இதுஒருபுறமிருக்க, நாங்கள் குப்பை கழிவுகளை அள்ளிச்சென்ற மறு நிமிடமே மீண்டும் அதே இடத்தில் குப்பை கூளங்களை பொதுமக்கள் கொட்டி விடுகின்றனர். இதனால் நாங்கள் குப்பை கூளங்களை அள்ளிச்செல்ல வரவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்படுகிறது. நாங்கள் பணி செய்தாலும் நாங்கள் பணியாற்ற வில்லை என்ற நெருக்கடி எங்களுக்கு ஏற்படுகிறது.
இதன் மூலம் அதிரை நகர பொதுமக்களுக்கு நாங்கள் வைக்கும் கனிவான வேண்டுகோள் யாதெனில், தினமும் குப்பை கூளங்கள் அள்ளிச்செல்ல எங்கள் வாகனங்கள் உங்கள் பகுதிக்கு வரும் போது, எங்கள் குழுவினரிடம் நேரடியாக குப்பைகளை வழங்கி விடுங்கள். இதனால் சாலையோரத்தில் குப்பைகளை தேங்குவதை தவிர்த்துக்கொள்ள முடியும். பொதுமக்கள் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.
மனித மலத்தை மனிதர்கள் அகற்றக்கூடாதுன்னு சொன்னதை அதனை பார்சலில் கட்டிபோட்டுவிட்டர்கள் நாகரிகமக்கள். அவ்வார்டு கௌன்சிலர்கல் தங்கள் வார்டில்; மானியத்தில் கழிப்பறைக் கட்ட நடவடிக்கை எடுத்தால் துப்புரவாலர்களின் துயரத்தை தொடைக்கலாம். வீட்டில் கழிப்பறை இருக்குதோ இல்லையோ லேட்டஸ்ட் செல்போன் இருக்கு. அரசு தரும் மானியத்தைப் பயன்படுத்தி தூய்மையான ஊராக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
ReplyDelete