.

Pages

Monday, December 14, 2015

முத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதிப்பில் தாய் உயிரிழப்பு - மாற்றுத்திறனாளி மகள் காப்பகத்தில் ஒப்படைப்பு !

முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் வசிப்பவர் மாரியம்மாள்(45). கூலி தொழிலாளியான இவரது கணவர் முருகதாஸ், 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் பாரதி(17). பிறவிலேயே மாற்றுத்திறனாளியான பாரதி பிறந்த நாளிலிருந்து இன்றுவரை படுத்த படுக்கையாக இருந்தார். இவருக்கு பேசவோ, நடக்கவோ வராது. இறக்கை உபாதை உட்பட தாயின் உதவியின்றி எதையும் செய்யத்தெரியாது. அவரை அவரது தாய் மாரியம்மாள் மட்டும்தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். இருவரும் ஒரு குடிசையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மாரியம்மாளுக்கு சில தினங்களாக இரத்தப்போக்கு அதிகமானதால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவ மனையில் அவரது உறவினர் ஒருவரது துணையோடு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாரியம்மாளின் உடல் நிலையில் மிகவும் மோசமாக இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் இறந்துவிடுவார் என்று கை விரித்துவிட்டனர். இதனால் மாரியம்மாள் மருத்துவ மனையில் மரணப்படுக்கையில் காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் உள்ள அவரது மகள் பாரதியை அருகே வசிக்கும் பெண்கள் தற்சமயம் மனித நேயத்துடன் பராமரித்து வந்தனர். உறவினர்கள் இருந்தும் உதவியில்லாமல் தவிக்கும் தாய் மகளின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிட்டது என்றும், மாரியம்மாளுக்கு பிறகு இளம் பெண் பாரதியை பாராமரிக்க யாரும் இல்லாத நிலை உள்ளது என்றும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாரதியை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கடந்த 11-ந் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த உருக்கமான செய்தியை கண்ட கிராமமக்கள் இதுநாள் வரை இல்லாத பாசத்துடன் பாரதியின் அடுத்தக்கட்ட எதிர்காலத்தை நினைத்து பரிதவித்து வந்தனர். இதனையடுத்து செய்தியைப் படித்த தினகரன் வாசகர்கள் பலரும் பாரதிக்கு உதவ முன் வந்து தொடர்பு கொண்டனர். ஆனால் பாரதிக்கு அரசின் உதவியே நிரந்தரமானவை, பாhதுகாப்பானவை, எந்த சிக்கலும் இல்லாதவை என்று நாமும் கிராமமக்களும் நினைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்(11-ந் தேதி) இரவு தினகரனில் வந்த செய்தியை பார்த்துவிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியா ராஜன், சைல்டுலைன் 1098 பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மாகிதாஸ், பணியாளர்கள் செந்தில்குமார், மகேஸ்வரி ஆகியோர் கொண்டக்குழு பாரதி வீட்டுக்கு வந்து பாரதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் காப்பகத்துக்கு கொண்டு செல்ல பாரதமாதா தொண்டு நிர்வாகி எடையூர் மணிமாறனின் கார் உதவியுடன் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் பாசத்துடன் பாரதியை மீட்டு காரில் ஏற்றினர். அவரை அப்பகுதி மங்கள் கூட்டுறவு வங்கி தலைவர் மங்கள் அன்பழகன், ரோட்டரி சங்க நிர்வாகி சபாபதி, கிராம முக்கிய பிரமுகர்கள் பிரபாகரன், ராஜமாணிக்கம் ஊராட்சி உறுப்பினர் மன்னர் மன்னன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இச்செய்தி கேள்விப்பட்டதும் கிராமமக்கள் கூடி நின்று கண் கழங்கி இளம் பெண் பாரதிக்கு பிரியா விடை அளித்தனர். இந்த நிலையில் இளம் பெண் பாரதி, தற்பொழுது வேளாங்கண்ணியில் உள்ள நிர்மலா அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஒரு சில தினங்களுக்கு பிறகு பாரதியை மயிலாடுதுறையில் உள்ள அறிவகம் காப்பகத்தில் சேர்க்கப்பட உள்ளார். இதனைக் கண்ட கிராமமக்கள் செய்தி வெளியிட்ட தினகரனின் இந்த சேவையை நாங்கள் அ10யுள் உள்ள வரை மறக்கமாட்டோம் என்றும் இதற்கு நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினர்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியா ராஜன் கூறுகையில்: 
இது போன்று குழந்தைகள் யாரும் பரிதவித்தால் எங்களது சைல்டுலைன் 1098 எண்ணில் தொடர்புக் கொள்ளவும். இன்று பாரதியை மீட்க உதவி செய்த தினகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த சோகத்தின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிந்த மாரியம்மாள் உடல்நிலை மோசமானதால் நேற்று முன்தினம் தஞ்சாவூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரின் உடல் பெருகவாழ்ந்தானில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து காரியங்கள் செய்யப்பட்டது. இச்சம்பவம் மங்கலூர் கிராமத்தில் உள்ள மக்களை மேலும் சோகதத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

1 comment:

  1. மனிதனுக்கு மட்டும் "மனம்' உள்ளது. அதில், மனித இனம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒருவர் சாதனையாளராக, சிந்தனையாளராக இருந்தால் அவர்களைப் பற்றி பேசுவர். ஆனால், மனித நேயம் இருந்தால் உலகில் உள்ள அனைவரும் தெய்வீக நிலையில் பார்ப்பர். மனிதநேயத்துடன் சைல்டுலைன் இப்பணியை செய்துவருவது மனதை நெகிழவைத்தது - கண்கள் கலங்கின ....மனிதம் செத்துவிடவில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.