பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ள, ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அமீரகத்தில் 2011 ஆம் ஆண்டு முதன்முதலாக அங்கீகரித்த பாரம்பரிய காலச்சுவடு அல் அய்ன் நகர பாலைவனச் சோலை இன்று மீண்டும் உயிர்பெற்று பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை, விவசாயத்தை, தண்ணீர் மேலாண்மையை அழகாக சொல்லித் தருகின்றது.
அல் ஹஜர் மலைத்தொடர் சுனைநீரை (Spring Water) நம்பி உருவான பண்டைய அல் அய்ன் நகரம் இன்றைய நவீன அல் அய்ன் நகரின் மத்தியில் சுமார் 1200 ஹெக்டேர் பரப்பளவில் பல நூற்றுக்கு மேற்பட்ட வகையிலான 140,000 பேரீத்த மரங்கள் நிறைந்த பெருந்தோட்டமாக மிளிர்கின்றது. வரலாற்று ஆர்வமுடையோர் தோட்டம் முழுவதும் காலார நடந்து கலாச்சார வசந்தத்தை நுகரலாம்.
பொதுவாக நகரீகங்கள் ஆற்றின் கரையோரம் தழைத்தோங்கியதாக படித்திருக்கின்றோம் அதுபோல் ஆற்றுநீருக்கு வழியில்லாத நிலையிலும் அல் அய்ன் நகரம் அல் ஹஜர் மலைத்தொடரிலிருந்து கிடைத்த சொற்ப சுனை நீரை Al Aflaj எனும் நிலத்தடி வாய்க்கால் முறையில் நகருக்குள் கொண்டு வந்து சேமித்து பேரீத்த மரங்களுடன் பப்பாளி, வாழை, மா மரம் போன்ற பயிர்களையும் விவசாயம் செய்ய தூண்டியுள்ளது அதாவது நாடோடிகளாக வாழ்ந்த அன்றைய மக்களை சிறிதளவு கிடைத்த நீர் கூட ஓரிடத்தில் நிலைத்து வாழும் வாழ்க்கை முறைக்கு மாற்றியுள்ளது அன்றைய நீர் மேலாண்மை, அதன் அழியாச்சுவடுகள் இன்றும் நமக்காக இந்த பாரம்பரிய இடத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை பாலைவன மணலுக்கு நடுவே அல் அய்ன் நகரம் அமைந்துள்ளது பேராச்சரியம்.
அல் அய்ன் தேசிய அருங்காட்சியகத்தை கிழக்கிலும், அல் அய்ன் அரண்மனை அருங்காட்சியகத்தை மேற்கிலும் எல்லைகளாக கொண்டுள்ள இந்த பாரம்பரிய பாலைவனச் சோலை அல் அய்ன் நகரத்துடன் இணைத்து அல் ஹபீத் மலை மேல் காணப்படும் பண்டைய வெங்கல கால (Bronze Age) மக்களின் கல்லறை, ஹீலி தொன்மையான குடியேற்றப் பகுதிகள், பிதா பின்த் சவுது பகுதியில் உள்ள வரலாற்று காலத்திற்கு முந்தைய சுவடுகள் மற்றும் ஆறு வகை பசுஞ்சோலை பிரதேசங்களும் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய வரலாற்று பொக்கிஷங்கள் என இணைத்து அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்







பயனுள்ள பதிவு....!
ReplyDeleteawasome....................
ReplyDelete