அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பதிவு செய்யக்கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, அதிராம்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவோ, அங்கீகாரம் இல்லாத நிலம், கட்டிடங்களைப் பத்திரப்பதிவு செய்யவோ அனுமதிக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள், கட்டிடங்களைப் பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகமெங்கும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாதந்தோறும் சராசரியாக நடந்து வந்த 300 க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு தற்போது குறைந்துள்ளது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகம், பொதுமக்களின் வருகை குறைந்து வெறிச்சோடியாக காணப்படுகிறது.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் புரோக்கர் அதிரை மைதீன் கூறுகையில், 'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஐகோர்ட் தடை உத்தரவால் இப்பகுதியில் மனைகள் வாங்குவது, விற்பது கடும் பாதிப்படைந்துள்ளது. அதிராம்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் சராசரியாக 300க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெறும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, ரியல் எஸ்டேட் மந்தநிலை காரணமாக ஏற்கனவே பத்திரப்பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. தற்போது ஐகோர்ட் தடை உத்தரவால் பத்திரப்பதிவு செய்வது அறவே குறைந்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது' என்றார்.
Madras High court order is late but latest. In Afirampattinam already registered wakf land illegally.
ReplyDelete