.

Pages

Tuesday, March 31, 2020

அதிராம்பட்டினத்தில் போலீசார் வாகனச் சோதனை (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 31
அதிராம்பட்டினத்தில் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல், காரணமின்றி வெளியே சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் இன்று (31-03-2020) செவ்வாய்க்கிழமை மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரணமின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த 6 பேருக்கு அபாரதம் விதித்து கரோனா வைரஸ் தொற்று நோயால் சமூகத்திற்கு ஏற்படும் கடும் பாதிப்புகள் குறித்தும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கியும், இனி இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதில், அதிராம்பட்டினம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காந்தி, தலைமைக்காவலர் கோவிந்தராஜ், ஆயுதப்படைக் காவலர் தர்மலிங்கம், காவலர்கள் ரேஷ்மா, அஸ்வினி, விசாலாட்சி உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
 

தஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: மார்ச் 31
தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 8 எல்லைகளும் மூடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவில் வருவாய் துறை, பொது சுகாதாரத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இதர துறை அலுவலர்களை கொண்ட 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.கொரோனா தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் சந்தேகங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் குழு, புகார் கண்காணிப்பு குழு, தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் குழு, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான குழு, மருத்துவ குழு, புள்ளிவிபரங்கள் சேகரிப்பு குழு, சமூக இடைவெளி குழு, உணவு வழங்கல் குழு, அமலாக்க குழு ஆகிய குழுக்கள் கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவிலான குழு, கோட்ட அளவிலான குழு, வட்டார அளவிலான கண்காணிப்பு குழு, நியாய விலை கடைகள் அளவிலான கண்காணிப்பு குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு, கண்காணிப்பு  மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள், அரசு மருத்துவமனைகளில் 300 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கைகள் என மொத்தம் 2400 படுக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 

மேலும், தஞ்சாவூரில் தஞ்சாவூர் ரயில்வே மருத்துவமனையில் 28 படுக்கைகள், மருத்துவக்கல்லூரி வளாக நர்சிங் கல்லூரியில் 150 படுக்கைகள், ராசா மிராசுதார் மருத்துவமனை வளாக சி.இ.எம்.ஒ.என்.சி கட்டிடத்தில் 200 படுக்கைகள், கரந்தை சமுதாயக்கூடத்தில் 50 படுக்கைகள், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் 1100 படுக்கைகள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காத்திருப்பு கட்டிடத்தில் 20 படுக்கைகள் என 6 மாற்று இடங்களில் 1548 படுக்கைகளும், கும்பகோணத்தில் 3 பள்ளிக்கூடங்களில் 40 படுக்கைகள், கண் வளாகத்தில் 40 படுக்கைகள் என 4 மாற்று இடங்களில் 80 படுக்கைகள், பட்டுக்கோட்டையில் 6 சமுதாயக் கூடங்களில் 120 படுக்கைகள், என்.ஹெச்.எம்-ல் 20 படுக்கைகள் என 7 மாற்று இடங்களில் 140 படுக்கைகள் என தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 மாற்று இடங்களில் 1768 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதைப்போன்று, வல்லத்தில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு பணியில் இருபத்தி இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள், 2 இருசக்கர ஆம்புலன்ஸ்கள், 78 தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 102 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பால், காய்கறி, மருந்து, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கு ஏதுவாக 396 வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 பொது இடங்கள், 8 சோதனைச் சாவடிகள், 26 அரசு அலுவலகங்கள் என மொத்தம் 59 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 39361 நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 4676 நபர்களும், வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திரும்பிய 447 நபர்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 மாதத்திற்கு 6712 டன் அரிசி முன் நகர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கும் 1000 பணம், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 1185 கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்கள் மூலம் பொருட்களை அவரவர் வீட்டிற்கே விநியோகம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் அவரவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து அளித்திட (Door Delivery) 100-க்கு மேற்பட்ட பெரிய மளிகை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 547 நபர்கள் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதற்காக ஒரு நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறிய காரணத்தினால், 235 இருசக்கர வாகனங்கள் மற்றும் 40 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 275 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தவிர்க்க முடியாத  காரணங்களுக்காக மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்- சார் ஆட்சியரிடம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். (தஞ்சாவூர் - ero2_tanj@yahoo.com ) கும்பகோணம் - ero1_kbk@yahoo.com ) பட்டுக்கோட்டை - ero3_pkt@yahoo.com )

மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்!

அதிராம்பட்டினம், மார்ச் 31
கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வர்த்தகர்களுடனான விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இ.ரவிச்சந்திரன் தலைம வகித்தார். அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்பரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அதிராம்பட்டினத்தில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மீன்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவதற்காக வரையப்பட்ட சமூக இடைவெளிக் கோடுகளை பின்பற்றுவது, கடைகளுக்கு முன்பாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, அரசு விதித்துள்ள விதிமுறைப்படி பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வது, கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவது ஆகியவை குறித்து வர்த்தகர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அதிராம்பட்டினம் வர்த்தகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Monday, March 30, 2020

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர் செய்யது காசீம் (44) காலமானார்!

அதிரை நியூஸ்: மார்ச் 30
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல்துறை இளங்கலை (1993~1996) முன்னாள் மாணவரும், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இரசாலியாபுரம்தெரு மர்ஹூம் கொப்புளி அப்துல் அஜிஸ் (ஆசிரியர்) அவர்களின் மகனும், முகம்மது காசீம் வெள்ளாப்பா அவர்களின் சகோதரருமாகிய செய்யது காசீம் (வயது 44) அவர்கள் இன்று சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் வஃபாத்தானர்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

மரண அறிவிப்பு ~ அஜ்மல் பனிஷா (வயது 55)

அதிரை நியூஸ்: மார்ச் 30
அதிராம்பட்டினம், மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எம்.எஸ் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், எம்.எம்.எஸ் சகாபுதீன் அவர்களின் மனைவியும், அப்துல் நாசர், சாகுல் ஹமீது, ஜபருல்லா ஆகியோரின் சகோதரியும், எம்.எம்.எஸ் அகமது ஜமால், எம்.எம்.எஸ் செய்யது முகமது புஹாரி, எம்.எம்.எஸ் புர்கானுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய அஜ்மல் பனிஷா (வயது 55) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (31-03-2020) காலை 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

தஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 30
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் இன்று (30.03.2020) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தில் கொரோனா புகார்கள் மற்றும் சந்தேகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், மாவட்ட, கோட்ட, வட்டார மற்றும் பொது வினியோக அங்காடிகள் அளவிலான குழுக்களின் செயல்பாடுகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்களின் எண்ணிக்கை விவரங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை விவரங்கள், அத்தியாவசிய பொருட்களை தடையின்றி எடுத்து செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு செயல்முறைகள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விவரங்கள், 144 தடை உத்தரவு செயல்படுத்துதல் ஆகியவை குறித்து  வேளாண்மைத் துறை அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர், ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்திட வேண்டும். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் தற்போது வரை பணியாற்றியதைப் போல, கொரோனா நோய் முற்றிலுமாக ஒழியும் வரை பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையினை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். குமுதா லிங்கராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

அமெரிக்காவில் அதிரை சகோதரர் ஹாஜி இ.மு முகமது இப்ராஹீம் (60) வஃபாத்

அதிரை நியூஸ்: மார்ச் 30
அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் இ.மு ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், ஹாஜி இ.மு அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகனும், ஹாஜி இ.மு மிஃத்தாஹ் அவர்களின் சகோதரரும், முகமது இஸ்மாயில் அவர்களின் மாமனாரும், ருமாகிய ஹாஜி இ.மு முகமது இப்ராஹீம் (வயது 60) அவர்கள் இன்று அமெரிக்காவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸாஅமெரிக்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு குழுக்கள் அமைப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க திட்டம்!

அதிராம்பட்டினம், மார்ச் 30
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் 144 தடை உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அதிராம்பட்டினத்தில் தன்னார்வலர்களால் கரோனா விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் ஏழைப் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு திட்டமிட்டு, அதற்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்க வேண்டுமென அக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அக்குழுவினர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பது; 
அதிரை கொரோனா உதவி குழுமத்தின் முக்கிய அறிவிப்பு:
உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் பெற்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நமது அதிராம்பட்டினத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் அன்றாட பிழைப்பு நடத்தி வாழ்வை கழித்து வரும் ஏழைகளுக்கும் உதவும் வகையில் கஜா புயலில் மக்களுக்காக மிகப்பெரிய களபணியாற்றிய சமூக அக்கறை நிறைந்த இளைஞர் பெருமக்களால் அதிரை கோரோனா உதவி குழுமம் என்கின்ற அடையாளத்துடன் களம் இறங்கியுள்ளனர்.

இதுபோன்ற ஏழை மக்களுக்கு அத்தியாவசிய தேவையான அன்றாட உணவுக்கு வழிவகுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு,பால் பவுடர், எண்ணெய் மற்றும் சமையல் பொருட்கள் அடங்கிய ரூபாய் 1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய கிட் சுமார் 300 குடும்பங்களுக்கு வழங்கலாம் என வாட்சப்ப் குழுமம் மூலம் மசூரா செய்யப்பட்டு அதன் செயல்பாடுகளும் வாட்சப்ப் குழுமம் மூலம் அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மாலிக், ஆரிஃப், நவாஸ், கனி, கலீஃபா, காலித், சபி, அப்ரித், சமீர், அஜ்மல், அலெக்ஸ், ஹாஜா, இப்ராஹிம்ஷா, ரஹ்மான் மற்றும் பேராசிரியர் செய்யது அகமது கபீர் ஆகிய சகோதரர்கள் இந்த பணியை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக அதிரையில் 250 குடும்பங்களுக்கு பால், பிஸ்கட் ஆகிய பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்களுக்கு உதவும் நோக்கில் அரசின் அரசாணைக்கு ஏற்ப நோய் பரவாமல் அரசு அனுமதித்த மளிகை கடையில் பொருட்களை பெற்று வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பல குடும்பங்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொருளாதார உதவி செய்பவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு எண் மூலமாக உங்களின் பொருளாதாரத்தை செலுத்தலாம்:-

Account Holder Name :- Imran Khan.T
Account number :- 607028100
Bank Name :- Indian bank
Branch : Adirampattinam Branch
IFSC CODE:-IDIB000A110

Google Pay:-
Name:- THAJ IMRAN
Mobile Number:- 9677741851

Phone Pay:-
Name:- IMRAN KHAN
Mobile Number:- 9677741851

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:-

அதிரை கொரோனா உதவி குழுமம்,
அதிராம்பட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

தொடர்புக்கு:-
பேராசிரியர் கபீர்:-8883184888,
மாலிக்:-6374384250,
நவாஸ்:-9944186538,
ஆரிஃப்:-9940863013,
ஷபி:-9994836089,
காலித்:-8056205080,
கனி:-9092458491,
சமீர்:-9791418704.
 

Sunday, March 29, 2020

அன்புள்ள தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களுக்கு...

அன்புள்ள தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களுக்கு...

மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் தொடர்ந்து அளித்து வரும் மேலான ஆதரவிற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ குழுக்கள் இரவு பகலாக அற்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1185 பொது விநியோகத்திட்ட அங்காடிகளிலும் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு “கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்கள்“ உருவாக்கப்பட்டு, அவர்கள் மூலம் பொது மக்களுக்கு அவரவர் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த “கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு“ வின் சேவைகளை பொது மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வெளிநாடுகளிலிருந்து 5000-க்கு மேற்பட்ட நபர்கள் வீடு திரும்பியுள்ளதால், வைரஸ் நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது அவசர கால பணிகளை தவிர, வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான உதவிக்கு “ நம்ம தஞ்சை “ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 1077 (Toll Free No) அல்லது தொலைபேசி எண். 04362-230121 அல்லது வாட்ஸ் ஆப் எண். 9345336838 என்ற எண்களை பயன்படுத்தி விபரம் தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி....
ம.கோவிந்த ராவ், ஐ.ஏ.எஸ்.
மாவட்ட ஆட்சியர்,
தஞ்சாவூர்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் 1200 படுக்கைகள்!

அதிரை நியூஸ்: மார்ச் 29
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா வைரஸ் சிகிச்சைக்காக 1200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரம், 29-வது வார்டு மாதப்பா தெருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு யாரும் செல்லாத வகையிலும், பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத வகையிலும், வீட்டிற்குள் யாரும் செல்லாத வகையிலும், தெருவின் இரு வாயில்களும் காவல் துறை மூலமாக தடை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள 62 வீடுகளுக்கும் நகராட்சி மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீட்டினை மையமாக வைத்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு குறையாமல் சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், வருவாய் துறை பணியாளர்கள் ஆகியோர் கொண்டு 50 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதா என கள ஆய்வு மேற்கொள்ளவும், அவர்களுக்குத் தேவையான கையுறை, முகக்கவசம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 22 நபர்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தவிர்க்க முடியாத  காரணங்களுக்காக மாவட்ட எல்லையை தாண்டி செல்ல வேண்டியவர்கள் coronatnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838(வாட்ஸ்அப்), 04362 - 230121, 1077(கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினம் குப்பத்து கிராம எல்லையில் சோதனை சாவடி அமைத்த மக்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 29
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, அதிராம்பட்டினம் குப்பத்து  மக்கள் கிராம எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி குப்பத்து கிராம எல்லை அருகே கடற்கரைச்செல்லும் சாலையின் குறுக்கே அமைத்துள்ள சோதனைச் சாவடியின் இரு புறங்களிலும் வேப்பிலைகள் கட்டியும், நடுவில், 'கொரானா நோய் தடுப்பு விழிப்புணர்வு', 'வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை' என்ற பதாகையை வைத்து குப்பத்து கிராம இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனா். மேலும், அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளின் வாசல் முன்பாக வேப்பிலையை கட்டி தொங்கவிட்டும், மஞ்சள் நீர் தெளித்தும் வருகின்றனர்.
 

Saturday, March 28, 2020

அதிராம்பட்டினத்தில் 20 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கல்!

அதிராம்பட்டினம், மார்ச் 28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-2 சார்பில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் 144 தடை உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட கூலித் தொழிலாளர்களின் 20 குடும்பங்களுக்கு, தலா 10 கிலோ வீதம் அரிசி, மைதா, ரவா, கோதுமை, சேமியா, சீனி, ஆயில், நாட்டுச்சக்கரை, பருப்பு, தேயிலை, இஞ்சி, பூண்டு, ஜீரகம், சோம்பு, மிளகு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ரூ. ஆயிரம் மதிப்பிலான, 18 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று சனிக்கிழமை மாலை வழங்கப்பட்டது.
 
 
 
 

தூய்மைப் பணிக்கு தானாக முன்வந்து உதவிய இளைஞர்கள்!

அதிராம்பட்டினம், மார்ச் 28
அதிராம்பட்டினம் பேரூராட்சி குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்களுக்கு உதவியாக தானாக முன்வந்து அதிராம்பட்டினம் மேலத்தெரு தன்னார்வல இளைஞர்கள் குடியிருப்பு வீதிகளில் பிளிச்சிங் பவுடர் இடும் பணியை இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர். இவர்களது பொதுநலப் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.
 

அதிராம்பட்டினம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 28
அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர்  அறிவுறுத்தலின் பேரில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி. பழனிவேலு தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், மீன் மார்க்கெட், வர்த்தகக் குடோன், வழிபாட்டுத்தலங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகள், வெளிநாடுகளிருந்து வந்துள்ளவர்கள் தங்கிருக்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி கரைசல் கலந்த மருந்தினை தூய்மைப் பணியாளா்கள் தெளித்தனர்.

மேலும், அதிராம்பட்டினத்தில் உள்ள 11 அங்கன்வாடிகள், கூட்டுறவு வங்கி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளிலும், 1 மீட்டா் இடைவெளியில் சமூக இடைவெளிக் கோடுகள் போடப்பட்டன. குடியிருப்புகள், வர்த்தகப் பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் இடுதல், கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தல், கழிவு நீர் வடிகால் தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பொது சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.