.

Pages

Thursday, March 26, 2020

ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜுமுஆ தொழுகை குறித்து ADT அறிவிப்பு!

அதிராம்பட்டினம், மார்ச் 26
அதிரை தாரூத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் இஹ்ஸான் பள்ளி (ஏ.எல் ஸ்கூல் பள்ளி, சிஎம்பி லேன்), ஃபாத்திமா பள்ளி (மேலத்தெரு சானவயல்) ஆகிய பள்ளிகளின் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜுமுஆ தொழுகை குறித்து அறிக்கை இன்று (26-03-2020) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;

கொரோனா – அரசின் நடவடிக்கையும் நமது நிலையும்:
கூட்டம் கூட்டமாக கொல்லும் உயிர்கொல்லி நோயான கொரொனாவை தடுக்கும் முயற்சியில் இரண்டு மனி நேரத்திற்கு ஒருமுறை கையை கழுவுங்கள், மாஸ்க் அணியுங்கள் என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. வரவேற்போம். செயல்படுவோம்.

முஸ்லிம்களான நமக்கு புதிதோ சிரமமானதோ அல்ல; நமக்கு வழமையானதே. சாப்பிடும்போது முன்னும் பின்னும் இரு முறை கையை கழுவுவதாகட்டும், மலம், சிறுநீர் கழித்தப்பின் இரண்டையும் சுத்தம் செய்வதோடு கையையும் சுத்தம் செய்வதாகட்டும், குளிப்பு கடமையான நிலையில் தேவையான ஒவ்வொரு செயலுக்கும் முன்பும் ஒழு செய்வதாகட்டும், ஐவேளை தொழுகைக்கான ஒழு செய்வதாக இருக்கட்டும்., இப்படி பல்வேறு தேவைக்காக நாம் கைகளை குறைந்தது இருபதுமுறை கழுவி வருகிறோம். நம்மிடம் கையை கழுவிக்கொள்ளுங்கள் என கூறினால் நமக்கு சிரமம் அல்லவே. ஆண்களைவிட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவே. பெண்கள் முகத்தை மூடிக்கொள்ளுங்கள் என 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் சொல்லியதை இன்று அரசு சொல்கிறது.

கொரோனாவை தடுக்கும் அடுத்த முயற்சியாக இன்று லாக்டவுன் அறிவித்துள்ளது. ஒரு மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டம் போகக்கூடாது என அரசு கட்டளையிட்டுள்ளது. கொள்ளை நோய் ஒரு பகுதியில் இருந்தால் யாரும் அங்கு செல்லவேண்டாம். நீங்கள் இருக்கும் பகுதியில் அது பரவிவிட்டால் அதிலிருந்து தப்பியோடு முனைந்தவர்களாக வெளியேறாதீர்கள் என நபி ஸல் அவர்கள் கட்டளையிட்டார்கள்.(புகாரி 5728). ஆக, இஸ்லாம் சொன்னதைத்தான் இன்று அரசு செய்து வருகிறது.  நல்லவர்களுக்கு கொள்ளை நோய் அல்லாஹ்வின் ரஹ்மத். யார் அல்லாஹ்வின் விதியை ஏற்று அவனின் வெகுமதியை எதிர்பார்த்து உயிரை விட்டவர் ஷஹீத் உயிர்தியாகி ஆவார் என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதால் (புகாரி 5734),  உயிருக்கு பயந்து ஊரைவிட்டு ஓடக்கூடாது. நமது ஊரில் பாதிப்பே இல்லை என்றாலும் அடுத்த ஊரில் இருக்கக்கூடும் என்பதால் நபியின் கட்டளைபடி பயனம் செல்லக்கூடாது. சுருக்கமாக சொன்னால் இந்தியர்களே முஸ்லிம்களின் வாழ்வியல் நெறியை போல் வாழுங்கள் என அரசு சொல்லுகிறது. எனவே முஸ்லிம்களே நாம் முஸிம்களாக வாழ்வோம்.

அரசு சொல்லுவதை ஏற்று நடக்கும் அதே நேரத்தில் இது நபியின் சுன்னா – வழிமுறை என்ற எண்ணமும் மனதில் கொண்டால், ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு நண்மையும் கூடிக்கொண்டு இருக்கும். வெளியூர் பயணம் செல்லாமல் காத்து இருக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் நண்மைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாம், கொள்ளை நோயை கட்டுப்படுத்த உயிரையும் தியாகம் செய்திடும் அளவிற்கு பக்குவப்படுத்தியுள்ளது. எனவே அரசின் இச்செயலை அல்லது சிரமங்களை  வரவேற்போம், கட்டுப்படுவோம், செயல்படுத்துவோம்.

தொழுகை மற்றும் ஜுமுஆ பற்றிய நிலைபாடு:
கொரோனாவில் பாதித்த அனைவரும் உயிர் இழப்பர் என்பது கிடையாது. சிலருக்கோ தனக்கு கொரோனா வந்ததே தெரியாமல் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டும் இருப்பர். அவருக்கு எந்த அறிகுறியும் தெரிந்திருக்காது அவ்வளவு ஆரோக்கியம் அவருக்கு இருந்திருக்கும். ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் மூலமும் கொரோனோ மற்றவருக்கு பரவிடும்.
கொரோனா பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக தொழுகை இருந்திடக்கூடாது. மழைக்கே தொழுகையை வீட்டில் தொழுது கொள்ளுங்கள் (புகாரி 616) என்ற சலுகை இருக்கும்போது அந்த சலுகையை இந்த நேரத்தில் பயன்படுத்திடலாம். மட்டும் அல்லாமல் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை சப்பிட்டால் அதன் வாடை மற்றவருக்கு தொல்லை தரும் என்பதால் தொழுகைக்கு பள்ளிக்கு வராதீர்கள் என நபி தடுத்திருப்பதால் (முஸ்லிம் 976), கொரோனாவின் அறிகுறிகளான சாதாரன இருமல், காய்ச்சலாக இருந்தாலும் இச்சூழ்நிலையில் அது மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் இவர்கள் பள்ளிக்கு வருவதை அறவே தவிர்ந்திடுங்கள். உடல் ஆரோக்கியம் இருந்தாலும் அரசால் அடையாளப்படுத்தப்பட்ட வீட்டை சார்ந்தோரும் பள்ளிக்கு வருவதை தவிர்ந்திடுங்கள்.

மழையின் காரணமாக வீட்டில் தொழுங்கள் என்பது சலுகைதானே! அந்த சலுகையை நிராகரித்து பள்ளிக்கு வருவதே சிறப்பு என எண்ணாதீர்கள். பயணத் தொழுகையில் நான்கு ரக்காத்துகள் தொழ முடியும் என்றிருக்க இரண்டு இரக்காத்தான சலுகையையே செயல்படுத்துங்கள் இது அல்லாஹ்வின் கொடை என நபி ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள் (முஸ்லிம் 1222). மேலும் பயணத்தில் நோன்பு வைக்க முடியும் என்றாலும் நோன்பை விட்டுவிடுதல் என்ற சலுகையே அல்லாஹ்விடமிருந்து வந்தது அந்த சலுகையை பயன்படுத்துவதே நல்லது என நபி ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள் (முஸ்லிம் 2026). ஆக, சலுகைக்கே முன்னுரிமை கொடுக்கப்படல் வேண்டும் அதுவே சிறப்பு.

எனவே வீட்டில் தொழுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். ஊரடங்கு உத்தரவு இருப்பதால் கூட்டம் கூடி பள்ளி நிர்வாகத்திற்கு சங்கடம் தந்திடாமல் வீட்டிலேயே தொழுதிடுமாறு நிர்வாகத்தின் சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

* பள்ளியில் வழக்கம்போல் பாங்கு சொல்லப்பட்டாலும் மக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள்.

* பள்ளியின் அருகில் இருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். அரசால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவரைச்சார்ந்தவர்கள் கூடாது.

* தொழுகை மிக விரைவாக முடிக்கப்பட்டு விடும்.

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?
தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு. என நபி ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள். (புஹாரி 5707)

எனவே, இஸ்லாத்தில் தொற்றுநோய் கிடையாது. நோய் பரவுமா என்றால் அல்லாஹ்வின் நாட்டப்படி பரவும். கொள்ளை நோய் பரவி மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்ததை ஹதீஸ்களில் நாம் பார்க்க முடிகிறது. கொரோனா இருக்கும் நபரிடமிருந்து மற்றவருக்கு தொட்டாலோ பார்த்தாலோ சுவாசத்தாலோ அல்லது இவரின் இரத்தமே மற்றவருக்கு ஏற்றப்பட்டாலும் அல்லாஹ்வின் அருளால் இவரின் எதிர்ப்பு சக்தியைக்கொண்டு கொரோனா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போய்விடவும் அதேபோல் பாதிக்கப்பட்டவரை தொடாமல் இருந்தாலும் மற்றவருக்கும் அது பரவி உயிரையும் பரித்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர் இன்னொரு நபரால்தான் என முஸ்லிம் நினைக்கக்கூடாது மாறாக அல்லாஹ்வின் விதியின்படியே என நம்பவேண்டும் அதை ஏற்கவேண்டும் உயிர் பிரியும் என்றாலும்கூட உயிருக்கு பயந்து ஓடக்கூடாது என்பதே இஸ்லாம்.

தொற்று இல்லை என கூறிய  அதே நபி ஸல் அவர்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காட்டி தந்துள்ளார்கள். சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு என்றதன் மூலம் அவர்களிடமிருந்து நாம் கூடுமானவரை ஒதுங்கி இருக்கவேண்டும் என்றும், (வெருண்டோடுதல் என்ற உவமை சொல்லுக்கு துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓடுவது அல்ல தூரமாகுதல் என்பதை சுலபமாய் விளங்கிட முடியும்) கொள்ளை நோய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் அங்கிருந்து யாரும் வெளியேற வேண்டாம் என சொன்னதன் மூலம் தனிமை படுத்திடல் வேண்டும் என்பதையும், இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்பவர்களிடம் கையை பிடித்து சத்தியப்பிரமானம் செய்யும் நபி ஸல் அவர்கள் தொழுநோயாளியிடம் கையை பிடித்து பைஅத் செய்யாததே அவர்களிடமிருந்து தனித்து இருக்க வேண்டும் என்பதும் நோய் பிடித்த ஒட்டகத்தை மற்ற ஒட்டகத்துடன் சேர்க்காதே என்பதிலிருந்தும் தனிமை படுத்துதல் வேண்டும் என்பதும் தெளிவாகிறது. மனிதரும் ஒட்டகமும் ஒன்றா என சிலர் சொல்லக்கூடும், நோயாளியை நேரில் நலம் விசாரிக்க சொன்ன அதே நபி ஸல் அவர்கள்தான் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடத்தில் இருக்கும்போது அவர்களை சந்திக்க வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஆக தொற்று நோய் உண்டா இல்லையா என விவாதித்துக்கொண்டும், கொரோனா பரவியதா பரப்பியதா என ஆய்வு செய்து கொண்டும் நேரத்தை வீணடிப்பதை விடவும் இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாம் எவ்வாறு எதிர் கொள்ள சொன்னது என்பதை அறிந்து அதுபோல் செயல்படுவோம்.

அதிரை தாருத் தவ்ஹீத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.