.

Pages

Saturday, January 20, 2018

தஞ்சை மாவட்டத்தில் 50% மானியம் 'அம்மா' இரு சக்கர வாகனம் பெறுவது எப்படி?

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில்  அம்மா இரு சக்கர வாகன திட்டம் வழங்குவது தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை  தலைமையில் இன்று (20.01.2018) சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
தொலைநோக்கு பார்வை கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, இந்திய திருநாட்டிலேயே முதன்முறையாக மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் ஒரு முன்னோடி திட்டம் “அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் மூலம் சமுதாய அமைப்புகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் புரிவோர், தினக்கூலி /தொகுப்பூதியம் / ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் நீண்ட தூரம் பயணம் செய்து தங்கள் குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் வருவாய் ஈட்டும் எட்டாம் வகுப்பு படித்த (தேர்ச்சி/தோல்வி) ஓட்டுநர் உரிமம் உள்ள 18 முதல் 40 வயது வரையிலான மகளிர் இத்திட்டத்தில் விதிகளுக்கு உட்பட்டு பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பணி நிமித்தமாக தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு அல்லது வங்கிகளுக்கு தினசரி நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய மகளிருக்கு தேவை அடிப்படையில் 125சிசிக்கு மிகாத திறன் கொண்ட Gearless / Auto Geared  1.01.2018க்கு பிறகு தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் வாங்கிக் கொள்ள அதிகபட்சமாக மானியம் ரூ.25,000 அல்லது வாகன விலையில் 50% ஆகிய இவ்விரண்டில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.  மாற்றுத்திறனாளி மகளிர் மூன்று சக்கரம் பொருத்திய வாகனம் வாங்கிக் கொள்ளலாம்.

தகுதியுள்ள மகளிர் பயன்பெற உரிய விண்ணப்பங்கள் அவரவர் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலோ / பேரூராட்சி அலுவலகங்களிலோ / நகராட்சி / மாநகராட்சி அலுவலகங்களிலோ /மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ 22.01.2018 முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.  மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதள முகவரி thanjavur.tn.nic.in என்ற முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட அலுவலகங்களிலேயே 05.02.2018 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.  பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிராம / நகர / மாநகர அளவிலான சரி பார்ப்பு குழு மூலம் சரி பார்க்கப்பட்டு, மேலாய்வு செய்து மாவட்ட அளவிலான நகர்புறம் / ஊரக தேர்வுக்குழுவினரால் 2011 மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.  உரிய தகுதிகள் கொண்டோர் குறிப்பிட்ட 05.02.2018க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மகளிர் ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் இந்து பாலா, முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், நகராட்சி ஆணையர்கள்,  பேரூராட்சி உதவி இயக்குநர், துணை ஆட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல போக்குவரத்து அலுவலர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.