.

Pages

Friday, August 31, 2018

அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி உதவியாளர் அயூப்கானுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி கிளையின் உதவியாளராக கடந்த 36 ஆண்டுகள் பணியாற்றி வந்த அதிராம்பட்டினத்தை  சேர்ந்த அயூப்கான் (60), இன்று (ஆக.31) வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, வங்கி கிளை சார்பில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவிற்கு வங்கி கிளை மேலாளர் திருமதி ஆர்.பாலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தனலட்சுமி வங்கி அதிகாரிகள் வி.சுந்தரேசன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி, சால்வை அணிவித்து, நினைவுப்பரிசுகள் வழங்கினர். மேலும், வங்கி கிளை உதவி மேலாளர்  டி. சுரேஷ், அலுவலர்கள் விஷ்வதீப், ரம்யா, சண்முகம், சீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

முடிவில், அயூப்கான் ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், உறவினர்கள் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

அதிரையில் ESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி கோலாகல தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.31
அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பாக 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம்  காட்டுப்பள்ளி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு கோலாகலாமாக தொடங்கியது.

இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ள தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், மாயவரம், காரைக்குடி, தொண்டி, கீழக்கரை, நாகப்பட்டினம், திட்டச்சேரி, லால்குடி உள்ளிட்ட 22 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளது.

முதல் நாள் ஆட்டத்தில், அதிராம்பட்டினம் ESC, அதிராம்பட்டினம் FRIENDS ஆகிய அணிகள் மோதினர். போட்டி நடுவர்களாக பாரதி, ஆசிப் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

முன்னதாக, தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் கீழத்தெரு சங்க நிர்வாகிகள் தாஜுதீன், சேக்தாவூது, முகமது முகைதீன், எம்.ஏ அப்துல் ஜலீல், மான் ஏ. சேக், ஜியாவூதீன், தாஜுதீன், ஜெஹபர் அலி, தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், ம.செ ஜபருல்லா, தரகர் தெரு ஜமாஅத் நிர்வாகிகள்  சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகி அகமது அனஸ், கரையூர் தெரு பஞ்சாயத் நிர்வாகிகள் முத்துக்குமரன், பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகி முகமது முகைதீன், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர், ஜபருல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர் போட்டியை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பில், அதன் நிர்வாகிகள் அஜ்மல்கான், முகமது சாலிகு, அன்வர், சுல்தான், நிஜாம், ராசிக், நூருல் அமீன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சியை பைத்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

நாளை (செப்.1), வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரமும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 6 ஆயிரமும் மற்றும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முதல் நாள் போட்டிகளைக் காண ஏராளமான விளையாட்டு பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

அதிராம்பட்டினத்தின் வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி ஆர்டிஓவை நேரில் சந்தித்து மனு!

பட்டுக்கோட்டை, ஆக.31
அதிராம்பட்டினம் பகுதி வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் ஆர்டிஓவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாய நிலங்களுக்கு ஆற்றுநீர் நிரப்ப வலியுறுத்தி, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் சார்பில், கடந்த ஆக. 23 ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, கடந்த 21 ந் தேதி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஐ. மகாலெட்சுமி தலைமையில், கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி செயற்பொறியாளர் சுகன்யா, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் முத்துலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாய்த்தார்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டமாக, இராஜமடம் கிளை வாய்க்காலின்  அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியில் உள்ள 5 குளங்களுக்கு 20 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் அமைந்துள்ள இராஜமடம் கிளை வாய்க்கால் 11/10 லிருந்து கடந்த ஆக.28 ந் தேதி அதிராம்பட்டினத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டன. தண்ணீர் திறக்கப்பட்டு நாட்கள் ஆகியும் அதிராம்பட்டினம் கடைமடிக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐ.மகாலட்சுமி அவர்களை ஆர்டிஓ அலுவலகத்தில் இன்று (ஆக. 31) வெள்ளிக்கிழமை காலை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பது;
பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் அமைந்துள்ள இராஜமடம் கிளை வாய்க்கால் 11/10 லிருந்து கடந்த ஆக.28 ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு வறண்டு கிடக்கும் அதிராம்பட்டினம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், இராஜமடம் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்லும்  அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த  ஆக. 21 ந் தேதி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவின் படி, எங்கள் பகுதியில் உள்ள வறண்ட குளங்களுக்கு தண்ணீர் சீராக நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், எம்.நிஜாமுதீன், ஏ.எஸ் அகமது ஜலீல், இஷ்ஹாக், என்.அபூதாஹிர், முகைதீன் அப்துல் காதர், மு. காதர் முகைதீன், எல்.எம்.ஐ அப்பாஸ், கமால் உசேன், ஜாகிர் உசேன் ஆகியோர் ஆர்டிஓவிடம் மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் ஐ.மகாலட்சுமி அவர்கள், அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரி ஆர். சுகன்யாவை சந்தித்து துரிதமாக தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
 

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)

அதிரை நியூஸ்: ஆக. 31
அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் அபூபக்கர் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் இஸ்மாயில் லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹும் ஹாஜி கலிபுல்லா ஹத்தீப் ஆலிம் அவர்களின் மனைவியும், மர்ஹும் முகமது காசிம் லெப்பை, மர்ஹும் முகமது கபீர் லெப்பை ஆகியோரின் சகோதரியும், பகுருதீன், மர்ஹும் ராஜிக் அகமது, முகமது நூர்தீன், பெளஜுல் ஆலிம் அகியோரின் மாமியாரும், பாவா பகுருதீன் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 75) அவர்கள் நேற்று இரவு கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (31-08-2018) பகல் ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ 'அனிஜா ஸ்டோர்' இப்ராகிம் மரைக்காயர் (வயது 102)

அதிரை நியூஸ்: ஆக.31
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் மெய் வாப்பு என்கிற முகைதீன் வாப்பு அவர்களின் மகனும், மர்ஹும் முகமது காசிம் மரைக்காயர், மர்ஹும் சின்ன தம்பி மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், முகமது ஹனீப், பஷீர் அகமது, அகமது முகைதீன் ஆகியோரின் மாமனாரும், முகம்மது யூசுப், அகமது அமீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய 'அனிஜா ஸ்டோர்' இப்ராஹிம் மரைக்காயர் (வயது 102) அவர்கள் இன்று காலை சி.எம்.பி லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (31-08-2018) மாலை அஸர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, August 30, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.30
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பெற்றோர்கள் கல்லூரி வளர்ச்சி, மாணவர்கள் முன்னேற்றம் பற்றி கருத்துருக்களை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.சேகர் செய்து இருந்தார்.

இக்கூட்டத்தில், கல்லூரி தர உறுதிப்பட்டுக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜியாவுதீன், இயற்பியல் துறைத் தலைவர் ஏ. ஆயிஷா மரியம், பேராசிரியர் எஸ். ரவீந்தரன் (ஓய்வு), கல்லூரி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் ஏ.என்.விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

தஞ்சை மாவட்டத்தில் ஆளில்லா சிறு விமானம் மூலம் வெள்ளம் ஏற்படும் பகுதிகள் கணக்கெடுக்கும் பணி ~ ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், பருவ மழை காலத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளை ஆளில்லா சிறு விமானம் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றாக இருப்பதாலும், டெல்டா மாவட்டமாக இருப்பதாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவ மழைக் காலத்தில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் ஆணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வானிலை ஆய்வுத்துறை மாணவர்களை கொண்டு  ஆளில்லா சிறு விமானம் மூலம் துல்லியமாக அளவிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

இப்பணியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், அக்னியாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சீரான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு வசதி, கழிவறை வசதி மற்றும் பசுமை வீடுகள் தொடர்பான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று (30.08.2018) வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: -
தஞ்சாவூர் மாவட்டத்தில்  மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 589 ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகம் சீராக பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் வார்டுகளில் தினமும் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுகிறதா என்பதை துறை அலுவலர்கள் காலையில் ஆய்வு செய்ய வேண்டும்.  பேருந்து நிலையங்களில் தூய்மையை பராமரித்து சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.  பேருந்து நிலையங்களில் சுகாதாரமற்ற நிலை தென்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  விதிமுறைக்கு புறம்பாக மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தடுத்து, மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில்  குடிநீர் பிரச்சினை ஏற்படா வண்ணம் அந்தந்த பகுதியை சேர்ந்த அலுவலர்கள், தேவையான இடத்தில் மாற்று குடிநீர் ஆதாரம் செய்து கொடுக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தி தேவையான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். 

குடிநீர் தொடர்பாக அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறு மற்றும் நீர் ஆதாரம் தொடர்பான எம்.புக்கு சரியாக பராமரிக்க வேண்டும்.  குடிநீர் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் விளம்பர பலகை வைக்க வேண்டும்.  விளம்பர பலகையில் ஊராட்சியின் பெயர், செய்யப்படும் பணியின் பெயர், திட்ட மதிப்பீடு, ஒப்பந்ததாரர் பெயர், பணிகள் முடிக்க வேண்டிய காலம் போன்ற விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் பொது மக்களுக்கு அரசு செய்து வரும் பணிகள் தெரியும். அனைத்து பகுதிகளில்  தெரு விளக்குகள் சரியாக பயன்பாட்டில் உள்ளதா என இரவு நேரங்களில் ரோந்து பணிமேற்கொண்டு தெரு விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும். அதே போல கிராம இணைப்பு சாலைகள் முறையாக சீரமைத்து அனைத்து சாலைகளும் தரமாக அமைக்கப்பட வேண்டும். சுகாதார வளாகங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள் கணக்கெடுத்து அவற்றை முறையாக பராமரித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பசுமை வீடுகள் திட்டத்தின் நடைபெறும் பணிகளை துர்pதப்படுத்தி விரைவாக அனைத்து பணிகளை முடிக்க வேண்டும்.  வருகின்ற பருவமழையை முன்னிட்டு மழை நீர் தேங்கா வண்ணம் மழை நீர் வடிகால் சுத்தம் செய்ய வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (பொ) காளிமுத்து, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையர்கள் உமாமகேஸ்வரி (கும்பகோணம்), ஷேக் அலாவுதீன் (பட்டுக்கோட்டை)  செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், பேரூரட்சிகளின் செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 76)

அதிரை நியூஸ்: ஆக. 30
அதிராம்பட்டினம், சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த சோனி சாகுல் ஹமீது அவர்களின் மகளும், சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் எஸ்.எஸ் முகமது அப்துல்லா அவர்களின் மனைவியும், எஸ். அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், எம்.ஏ சம்சுதீன், எம்.ஏ சேக் முகமது, எம்.ஏ சேக் அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும், ஏ.கே அகமது பஷீர், எம்.ஐ அப்துல் லத்திப், ஒய். அகமது ஹாஜா, கே.எஸ் ஜமாலுதீன், ஐ அப்துல் ரஷீது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா (வயது 76) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (31-08-2018)  காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மேலத்தெருவில் மழை நீர் வடிகால் ~ தார் சாலை அமைத்து தர கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஆக.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு மேலத்தெரு மேற்கு பகுதியில், சுமார் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதியில் பின்தங்கி காணப்படும் இப்பகுதியில், மழைநீர் வடிகால், சாலை போன்ற வசதிகள் இல்லாததால், மழை காலத்தில் இப்பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி, சேரும் சகதியுமாக காட்சியளிக்கும். பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், பள்ளிவாசலுக்கு செல்லும் தொழுகையாளிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், இப்பகுதியில் புதிததாக தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி அப்பகுதியினர் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் இன்று வியாழக்கிழமை மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியது;
'கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் குடிநீர் கட்டணம், வீடு வரியை  முறையாக செலுத்தி வருகிறோம். எனினும், அடிப்படை கட்டமைப்பு வசதியில் இப்பகுதி மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவில் உள்ளது. இப்பகுதியில் புதிததாக தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைத்து தரக்கோரி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் மனு அளித்தோம். அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக, மழை நீர் வடிகால் மற்றும் புதிய தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
 

உலமா சபை சார்பில் கேரளத்துக்கு ரூ.2.45 லட்சம் வெள்ள நிவாரண நிதி அனுப்பி வைப்பு!

தஞ்சாவூர், ஆக.30-
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு நிவாரணம்  வழங்குவதற்காக, தஞ்சாவூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மூலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையாளிகளிடம் வசூலிக்கப்பட்ட நிதி ரூ. 2.45 லட்சம், தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி. காதர் ஹுசைன் அவர்களிடம் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்மாநில ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தலின் பேரில், தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மூலம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களின் ஜும்மா தொழுகையின் போது தொழுகையாளிகளிடம் திரட்டப்பட்ட மொத்தம் நிதி ரூ. 2.45 லட்சத்தை, தஞ்சை மாவட்ட அரசு டவுன் ஹாஜி டி. காதர் ஹுசைன் அவர்களிடம், தஞ்சை மாவட்ட  ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லவி. எஸ். அயூப்கான் மன்பஈ, பொருளாளர் மவ்லவி எம். ஹாஜா முகைதீன் மிஸ்பாஹி, மவ்லவி எஸ். முகமது சிராஜுதீன் ஆகியோர் வழங்கி மாநில மாநில ஜமாத்துல் உலமா சபை மூலம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.

Wednesday, August 29, 2018

மரண அறிவிப்பு ~ அப்துல் ஜப்பார் (வயது 65)

அதிரை நியூஸ்: ஆக. 29
அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு முகமது இப்ராஹீம்  அவர்களின் மகனும், அகமது மன்சூர், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் செ.சு சேக்தாவூது, மர்ஹூம் அ.மு அப்துல் கரீம், குலாப்ஜாமூன் அன்சாரி ஆகியோரின் மைத்துனருமாகிய அப்துல் ஜப்பார் (வயது 65) அவர்கள் இன்று பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-08-2018 ) இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 29
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகத் தண்டவாளங்கள் அகற்றிவிட்டு  நிரந்தர தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இதில், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 80 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது எனவும், எஞ்சிய அனைத்து பணிகளும் வரும் செப்டம்பர் 15 க்குள் நிறைவு பெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து வருகின்றன.

3. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றில் தளங்கள் அமைப்பதற்கு காங்கிரட் சிமெண்ட் தட்டுகள்  அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை,  ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் ரவுண்டான உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1 ல் மேற்கூரை அமைக்கும் பணிக்காக தூண்கள் மற்றும் பர்லின் ஷெல்டர் பொருத்தும் பணிகள் மற்றும் நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை பணி கிரேன் இயந்திரம் உதவியோடு நடந்து முடிந்துள்ளது. இதன்பின்னர், மேல் கூரை பகுதியில் சீட் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

7. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பாதையில் லாரிகள் மூலம் ஜல்லிகள் நிரப்பட்டு வருகின்றன.

8. வாகன நெருக்கடியை தவிர்க்க, ரயில் நிலையத்தின் மற்றொரு பிரதான நுழைவுப் பாதையாக ஈஸ்ட் கோஸ்ட் சாலை கல்லூரி முக்கம் வழியாக கடற்கரைச் செல்லும் பள்ளிக்கூட சாலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

9. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

10. பிரமாண்டமாகக் காட்சி தரும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகளை தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி, இந்த வழித்தடத்தில் சென்னை செல்ல அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் விருப்பமாக இருந்து வருகிறது.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது