.

Pages

Friday, August 31, 2018

அதிராம்பட்டினத்தின் வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி ஆர்டிஓவை நேரில் சந்தித்து மனு!

பட்டுக்கோட்டை, ஆக.31
அதிராம்பட்டினம் பகுதி வறண்ட குளங்களுக்கு தாமதமின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் ஆர்டிஓவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடைமடை பகுதியில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்கள், குட்டைகள், விவசாய நிலங்களுக்கு ஆற்றுநீர் நிரப்ப வலியுறுத்தி, அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி விவசாயிகள், நீர் நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் சார்பில், கடந்த ஆக. 23 ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, கடந்த 21 ந் தேதி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஐ. மகாலெட்சுமி தலைமையில், கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி செயற்பொறியாளர் சுகன்யா, அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் தியாகராஜன், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் முத்துலெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் மற்றும் அதிராம்பட்டினம் பகுதி விவசாயிகள், மீனவர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாய்த்தார்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், முதல்கட்டமாக, இராஜமடம் கிளை வாய்க்காலின்  அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதியில் உள்ள 5 குளங்களுக்கு 20 நாட்களுக்குள் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் அமைந்துள்ள இராஜமடம் கிளை வாய்க்கால் 11/10 லிருந்து கடந்த ஆக.28 ந் தேதி அதிராம்பட்டினத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டன. தண்ணீர் திறக்கப்பட்டு நாட்கள் ஆகியும் அதிராம்பட்டினம் கடைமடிக்கு தண்ணீர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐ.மகாலட்சுமி அவர்களை ஆர்டிஓ அலுவலகத்தில் இன்று (ஆக. 31) வெள்ளிக்கிழமை காலை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பது;
பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் அமைந்துள்ள இராஜமடம் கிளை வாய்க்கால் 11/10 லிருந்து கடந்த ஆக.28 ந் தேதி செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு வறண்டு கிடக்கும் அதிராம்பட்டினம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், இராஜமடம் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்லும்  அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த  ஆக. 21 ந் தேதி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவின் படி, எங்கள் பகுதியில் உள்ள வறண்ட குளங்களுக்கு தண்ணீர் சீராக நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், எம்.நிஜாமுதீன், ஏ.எஸ் அகமது ஜலீல், இஷ்ஹாக், என்.அபூதாஹிர், முகைதீன் அப்துல் காதர், மு. காதர் முகைதீன், எல்.எம்.ஐ அப்பாஸ், கமால் உசேன், ஜாகிர் உசேன் ஆகியோர் ஆர்டிஓவிடம் மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் ஐ.மகாலட்சுமி அவர்கள், அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதன் பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரி ஆர். சுகன்யாவை சந்தித்து துரிதமாக தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.